எங்களை யாரும் தொடமுடியாது… ரஜினி,கமல் குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் தில்லான பதில்
சென்னை : கிட்டத்தட்ட 45 முதல் 50 சதவீதம் வரை வாக்கு வங்கி உள்ள அதிமுகவை யாரும் தொடமுடியாது. அதுவே நிதர்சனமான உண்மை என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
ரஜினி, கமல் பற்றி எந்த கட்சிகள் கவலைப்படுகிறதோ... இல்லையோ... சந்தர்ப்பம் கிடைக்கும் போது எல்லாம் அதிமுக அமைச்சர்கள் வறுத்து எடுத்து வருகின்றனர். அமைச்சர்கள் தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜூ, பிரஸ் மீட் புகழ் ஜெயக் குமார், கடம்பூர் ராஜூ என ஒவ்வொருத்தரும் கருத்துகளை அள்ளி வீசி வருகின்றனர்.
யார் வேணும்னாலும் கட்சி ஆரம்பிக்கலாம் என்று அவர்கள் சொல்லி வந்தாலும் தொடர்ந்து ரஜினி, கமல் மீது எதிர்ப்பான கருத்துகளை கூறி வருகின்றனர். அதில் லேட்டஸ்டாக பேசியுள்ள அமைச்சர் ஜெயக்குமார், ரஜினி டிவி சேனல் ஆரம்பித்தால் திமுகவுக்கு தான் பாதிப்பு என்று கூறியுள்ளார்.
சென்னை ராயபுரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது :
ரஜினிகாந்த் டிவி சேனல் ஆரம்பிப்பதால் அதிமுகவிற்கு எந்த ஒரு பாதிப்பும் வராது. எங்களுக்கென்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 45 முதல் 50 சதவீதம் வரை வாக்கு வங்கி அதிமுகவுக்கு உள்ளது.
இந்த 50 சதவீத ஓட்டை யாரும் தொடமுடியாது. இதுவே நிதர்சனமான உண்மை. ரஜினிகாந்த் டிவி சேனல் ஆரம்பிக்கிறார், கட்சி ஆரம்பிக்கிறார் என்றால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டியது திமுகவும், மற்ற கட்சிகளும் தான்.
அதேபோல் கமலஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் நின்றால் திமுக ஓட்டுகளை அல்லது மற்ற கட்சிகளின் ஓட்டுகளை தான் பிரிப்பார். எங்கள் ஓட்டுகளை அவர் கை வைக்கவே முடியாது.
எங்களுடைய ஓட்டு வங்கி என்பது 50%. அது முழுமையாக எங்களுக்கு தான் வரும். எனவே எப்போது தேர்தல் நடந்தாலும் அதிமுகதான் வெற்றிபெறும்.
கஜா புயல் பாதிப்பை பார்வையிடாத பிரதமர், பிரசாரத்திற்கு வருகிறார் என்றால் பாஜகதான் பதில் சொல்ல வேண்டும்.
கஜா புயலை பொறுத்த வரையில் தமிழக அரசு தனது கடமையை 100 சதவீதம் செய்துள்ளது. கஜா புயல் நிவாரணத்தை மத்திய அரசிடமிருந்து நிச்சயமாக கேட்டுப்பெறுவோம்.
இவ்வாறு அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.