எதை பார்த்து இப்படி பேசுகிறார்? சுனாமிக்காக காத்திருக்கும் ரஜினிகாந்த்.. கலங்கடிக்க போகும் களநிலவரம்
நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் சுழல் பேச்சு தமிழக அரசியலில் பெரிய கவனத்தை ஈர்த்து உள்ளது.
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் சுழல் பேச்சு தமிழக அரசியலில் பெரிய கவனத்தை ஈர்த்து உள்ளது. அவர் உண்மையான அரசியல் கள நிலவரம் தெரியாமல் பேசுவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள்.
நேற்று நடிகர் ரஜினிகாந்த் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் தமிழக அரசியல் குறித்து பேசியது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் தன்னுடைய செய்தியாளர் சந்திப்பு மூலம் புதிய சூழல் ஏற்பட்டுள்ளது என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
அதாவது ஆட்சிக்கு வேறு ஒரு முதல்வர் கட்சிக்கு மட்டும் நான் தலைவர் என்று ரஜினிகாந்த் கொடுத்த ஐடியா தமிழக அரசியலில் சூழலாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டு இருக்கிறார். ஆனால் உண்மை நிலவரம் அவரின் கருத்துக்கு அப்படியே எதிராக இருப்பதாக கூறுகிறார்கள்.
நான் போட்ட புள்ளி தேர்தல் நேரத்தில் சுனாமியாகும்- ரஜினிகாந்த்
ரஜினி என்ன சொன்னார்
ரஜினிகாந்த் தனது பேச்சில், அரசியலில் சரியான நேரத்தில் ஒரு சுழல் உருவாகும். அது அலையாக மாறும்போதுதான் நாம் இறங்க வேண்டும்.நான் அரசியலில் ஒரு புள்ளி போட்டேன். அது வலுவாக யாருக்கும் தெரியாமல் ஒரு சுழலாக உருவாகிவிட்டது. அதைத் இனிமேல் தடுக்க முடியாது. அது மக்கள் மத்தியில் உருவாகிவிட்டது. அதை அலையாக மாற்ற வேண்டும். அது சுனாமியாக விரைவில் உருவெடுக்கும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
ஏன் இப்படி
அதோடு தன்னுடைய திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ரசிகர்கள் உதவ வேண்டும். இதற்காக அவர்கள் உழைக்க வேண்டும் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். எம்ஜிஆர், அண்ணா, ஜெயலலிதா, என்டிஆர் போல அலையை உருவாக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். அவரின் பேச்சு முழுக்க முழுக்க லோ பட்ஜெட்டில் ஷங்கர் படம் பார்த்தது போலத்தான் இருந்தது. ஆம் அவர் சுழல் உருவாகி உள்ளது என்று கூறியது, அவ்வளவு பெரிய அரசியல் சுழல் எல்லாம் கிடையாது.
ஏமாற்றம்
நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சால் பெரிய அலை உருவாகிவிட்டது என்கிறார். ஆனால் அவருடைய பேச்சு அவரின் ரசிகர்களையே பெரிய அளவில் கவரவில்லை. முதலில் ரஜினிகாந்த் ஆட்சிக்கு ஒருவர், கட்சிக்கு ஒரு தலைவர் என்று கூறியது பெரிய அதிர்ச்சியாக ரசிகர்களுக்கு முடிந்தது. ரஜினி ஆட்சி அமைக்க மாட்டார் என்றவுடன் அவரின் ரசிகர்கள் ஆர்வத்தை இழந்தனர். கட்சி பணியை செய்யும் ஆர்வத்தை இழந்தனர்.
பதவி இல்லை
அதேபோல் கட்சியில் தேர்தல் நேரத்தில் மட்டுமே பதவி மற்ற நேரத்தில் பதவி இல்லை என்று அவர் கூறியதும் பெரிய சர்ச்சையாக முடிந்தது. இதனால் அவரின் மாவட்ட செயலாளார்கள் பலர் மொத்தமாக கட்சி பணிகளை கவனிக்கும் ஆர்வத்தை இழந்தனர். உண்மையில் கட்சி பணிகளை மேற்கொள்ள வேண்டுமா? இப்படி செய்தால் எதிர்காலத்தில் நமக்கு ஏதாவது நன்மை கிடைக்குமா என்று அவரின் மாவட்ட செயலாளர்கள் நினைக்க தொடங்கிவிட்டார்கள்.
மோசமாகி வருகிறது
இதனால் இவர்கள் எல்லாம் ரஜினியிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலக தொடங்கி உள்ளனர். ரஜினியை தீவிரமாக ஆதரித்து வந்த பாஜக கூட அவரிடம் இருந்து கொஞ்ச கொஞ்சமாக விலக தொடங்கிவிட்டது. அதிமுகவுடன் கூட்டணியை தொடரலாம் என்ற முடிவிற்கு பாஜக வந்துவிட்டது. இப்படி ரஜினியிடம் இருந்து பல்வேறு தரப்பினர் கொஞ்சம் கொஞ்சமாக விலகி போய் உள்ளனர்.
கனவு காண்கிறார்
உண்மை இப்படி இருக்கும் போது ரஜினிகாந்த் எதை பார்த்து சூழல் உருவாகி உள்ளது என்று கூறுகிறார் என்று தெரியவில்லை. ரசிகர்கள் மகிழ்ச்சியாக இல்லை, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதை வரவேற்கவில்லை. அவருக்கு நெருக்கமான சில மாவட்ட செயலாளர்கள் இதை ஏற்கவில்லை. ஆனாலும் எதை பார்த்து அரசியலில் சுழல் உருவாகி உள்ளது, அது சுனாமியாக மாறும் என்று ரஜினிகாந்த் கூறுகிறார் என்று தெரியவில்லை.
மக்களிடம் செல்பவன் மக்களிடம் செல்பவன்
அரசியல் என்பது கட்சி சார்ந்தது கிடையாது. மக்களை சார்ந்தது. முக்கியமாக ரஜினிகாந்த் தனது ரசிகர்களை நம்பி களம் இறங்குகிறார். அப்படி இருக்கும் போது ரஜினிகாந்த் தனது ரசிகர்களின் மனநிலையை புரிந்து கொள்ள வேண்டும். அவரின் ரசிகர்கள் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். ஆனால் அதை கூட புரிந்து கொள்ளாமல் புதிய சுழல் உருவாகிவிட்டது என்பது ரஜினி நம்பிக்கொண்டு இருக்கிறார்.
சங்கர் படம்
கோ படம் போலவும் முதல்வன் படம் போலவும் தன்னுடைய அரசியல் திட்டம் ஹிட் அடிக்கும் என்று ரஜினிகாந்த் நினைக்கிறார். ஆனால் அரசியல் என்பது சினிமா கிடையாது. ரஜினி உண்மையான களநிலவரம் தெரியாமல் சுழல் உருவாகிவிட்டது என்று பேசி வருகிறார். களத்தில் ரசிகர்கள் மத்தியில் அவரின் திட்டத்திற்கு எதிரான அதிருப்தியே உள்ளது. அவருக்கு கள நிலவரம் தெரியவில்லை, அல்லது தெரிய விடாமல் சிலர் பார்த்துக் கொள்கிறார்கள் என்றுதான் கூற வேண்டும். எதுவாக இருந்தாலும் ஓகே தான் உருவாக்கிய அரசியல் சூழலில் அவரே சிக்காமல் இருந்தால் சரி!