Rajinikanth: 30 நிமிட பேச்சு.. திருநாவுக்கரசருடன் ரஜினிகாந்த் திடீர் சந்திப்பு.. இதுதான் காரணம்!
சென்னை: தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார்.
தமிழக காங்கிரசில் சென்ற வாரம்தான் தலைமை மாற்றம் நடந்தது. தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த திருநாவுக்கரசர் தலைமை பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டடார். புதிய தலைவராக கே.எஸ் அழகிரி நியமனம் செய்யப்பட்டார்.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இந்த முடிவை ஏற்றுக்கொள்கிறேன். அவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அதற்கு கட்டுப்படுவேன் என்று திருநாவுக்கரசர் பேட்டி அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசருடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்தி உள்ளார். சென்னை அண்ணா நகரில் உள்ள திருநாவுக்கரசர் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் சவுந்தர்யாவின் திருமணத்திற்காக திருநாவுக்கரசுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதற்காக இந்த சந்திப்பு நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த டிசம்பரில் நடிகர் ரஜினிகாந்தும், திருநாவுக்கரசரும் அமெரிக்காவில் இருக்கும் போது சந்திப்பு நடத்தி ஆலோசனை செய்தார்கள் என்று உறுதிப்படுத்தாத தகவல்கள் வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த சந்திப்பு நிகழ்ந்து இருக்கிறது.