தவிர்த்தார்.. தள்ளிப்போட்டார்.. தப்பிக்கிறார்.. அரசியலில் நுழையும் முன்பே நாசுக்காக வெளியேறும் ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் முழுமையாக நுழையும் முன்பே அதில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்களை நாசுக்காக வகுத்து இருக்கிறார்.
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் முழுமையாக நுழையும் முன்பே அதில் இருந்து வெளியேறுவதற்கான திட்டங்களை நாசுக்காக வகுத்து இருக்கிறார். இன்று அவரின் பேச்சிலேயே அதற்கான அறிகுறிகள் தெளிவாக தெரிந்தது.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று 1996ல் இருந்தே அவரின் ரசிகர்கள் தீவிரமாக எதிர்பார்த்தனர். இதோ வரேன்.. இதோ வந்துட்டேன்.. அண்ணா சமாதி சிக்னல் தாண்டிட்டேன்.. அடுத்து கோட்டைதான் என்பது போல ரஜினியும் அரசியல் அறிவிப்பை வெளியிடாமல் காலம் தாழ்த்திக் கொண்டே சென்றார்.
அவரின் ரசிகர்களும், தலைவர் ஆடி போய் ஆவணி போனா கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்கிடுவார் என்று தீவிரமாக காத்து இருந்தனர். ஆனால் மேலே இருக்கவன் பார்த்துப்பான், பாயிண்ட் வரட்டும் என்று பல காரணங்களை சொல்லி இப்படி, அப்படி என்று கிட்டத்தட்ட 25 வருடங்களை ரஜினிகாந்த் ஓட்டிவிட்டார்.
தமிழகத்தில் எடுபடுமா இரட்டை தலைமை...? தெரிந்துதான் பேசினாரா ரஜினி..?
அறிவித்தார்
கடைசியாக, தமிழக அரசியல் வெற்றிடம் ஏற்படவே, இதுதான் சரியான நேரம் என்று முடிவு எடுத்து, 2017 டிசம்பர் 31ம் தேதி விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் 11 மணிக்கு தனது அரசியல் பிரவேச அறிவிப்பை அதிரடியாக அறிவித்தார். விடுமுறை நாளில் அறிவித்ததால்தான் என்னவோ ரஜினி அன்றே தன்னுடைய அரசியலுக்கும் விடுமுறை விட்டார். அன்றைய வீக் எண்டே அவருடைய அரசியலுக்கும் எண்டாக முடிந்தது. அரசியலுக்கு வருவேன்.. ஆனால் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தன்னுடைய அரசியல் பயணத்திற்கு முதல் நாளே முற்றுப்புள்ளி வைத்தார்.
காத்திருப்பு காலம்
தட்கல் ரிஸர்வேஷனில் 300வது வெயிட்டிங் லிஸ்ட் வந்த பயணி போல மீண்டும் ரஜினியின் ரசிகர்கள் காத்திருக்க தொடங்கினார்கள். இப்போது சொல்வார், இந்த தமிழ் புத்தாண்டுக்கு சொல்வார் , மே 1 சொல்வார், கபாலிக்கு முன் சொல்வார், காலா வந்தால் சொல்லி விடுவார், பேட்ட வந்தால்... தர்பார் வந்தால்.. என்று ரஜினி தனது ரசிகர்களை மீண்டும் காக்க வைத்துக் கொண்டே இருந்தார். ரஜினியிடம் இருந்து அண்ணாத்த படம் அறிவிப்பு மட்டும்தான் வந்தது. அரசியல் அறிவிப்பு எதுவும் வரவில்லை.
நல்ல நாள்
இப்படி எல்லோரும் சுணங்கிப்போய் இருந்த நிலையில்தான் 2 வருடம் கழித்து கடந்த வாரம் ரஜினி மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்தார். இந்த சந்திப்பிற்கு பின் வெளியே வந்தவர், எனக்கு ஒரு மனவருத்தம் என்று சூசகமாக சொல்லிவிட்டு தனது ஸ்டைலில் ''பின்னர் அறிவிப்பேன்'' என்று கூறிவிட்டு கிளம்பி சென்றுவிட்டார். அதன்பின் ஒரு வருடம் கழித்து வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் ஒரே வாரத்தில் மீண்டும் மாவட்ட செயலாளர்களை அழைத்து இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் மீட்டிங் போட்டார்.
சந்தித்தார்
அதோடு செய்தியாளர்களை சந்திக்கவும் முடிவு செய்தார். எப்போதும் வீட்டு வாசலில் வைத்து செய்தியாளர்களை சந்திக்கும் ரஜினி இந்த முறை கொஞ்சம் வித்தியாசமாக சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட போகிறார் என்று எல்லோரும் நினைத்தால், ''அப்படியே ஷாக் ஆகிட்டேன்'' என்று பலரும் ரியாக்சன் கொடுக்கும் அளவிற்கு வித்தியாசமான அறிவிப்பை ரஜினி வெளியிட்டார்.
ரஜினி சொன்னது
இன்று பேசிய ரஜினி சொன்ன முக்கியமான விஷயம், அவர் பேச்சின் சாராம்சம் ஒன்றுதான், நான் முதல்வர் ஆக விரும்பவில்லை. என் ரத்தத்தில் அந்த எண்ணமே இல்லை. நான் கட்சிக்கு தலைவர், வேறு ஒரு நல்ல மனிதர் ஆட்சிக்கு தலைவராக, முதல்வராக இருப்பார். எனக்கு முதல்வர் ஆகும் எண்ணம் இல்லை என்று கூறியுள்ளார். ரஜினியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியாக மாறியுள்ளது . இந்த அறிவிப்பிற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கும் என்கிறார்கள்.
வெளியேற்றம்
ரஜினியின் இந்த அறிவிப்பு, அவர் அரசியலில் இருந்து நாசுக்காக வெளியேறுவதற்கான சிக்னல் என்று கூறுகிறார்கள். அதாவது நான் அரசியலுக்கு வருவேன், முதல்வர் எல்லாம் இல்லை, கட்சியை கவனித்துக் கொள்வேன். என்னால் சட்டசபைக்கு சென்று கேள்வி எல்லாம் கேட்க முடியாது. அதை நினைத்து கூட பார்க்க முடியாது என்பதைதான் ரஜினிகாந்த் கோர்வையாக பேசி இருக்கிறார். தான் அரசியலுக்கு வர முடியாது என்பதை இப்படி மறைமுகமாக சொல்லிவிட்டார் என்று கூறுகிறார்கள்.
தொடக்கமே முற்றுப்புள்ளி
தனது அரசியல் தொடக்கமே அவருக்கு முற்றுப்புள்ளி போல அமைந்துள்ளது. கட்சியை தொடங்குவதற்கு முன்பே அவர் ரசிகர்களை ஏமாற்றி இருக்கிறார். தனக்கு ஆட்சி நிர்வாகத்தில் ஆசை இல்லை என்று இப்போது கூறியவர், இன்னும் சில நாட்களில் எனக்கு அரசியலிலே ஆசை இல்லை என்று கூறும் வாய்ப்புள்ளது. நான் கட்சி தொடங்க மாட்டேன், நான் ஆதரிக்கும் நல்ல கட்சிக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட ரஜினி வாய்ஸ் கொடுக்க வாய்ப்புள்ளது.
என்ன ஏமாற்றம்
அரசியலை தொடக்கத்தில் தீவிரமாக தவிர்த்த ரஜினி, 1996ல் கொஞ்சம் அரசியலுக்கு நெருக்கம் ஆனார். ஆனாலும் கட்சி தொடங்காமல், தள்ளிப்போட்டு வந்தார். இதோ தற்போது நான் முதல்வர் கிடையாது, வேறு யாராவது ஒருவர் அதற்காக வருவார், என்று அரசியல் அதிகாரத்தை தவிர்க்க தொடங்கி உள்ளார். ரஜினியின் ரசிகர்களுக்கு இது எப்படி ஷாக்கிங் செய்தியோ அதேபோல் ரஜினியை வைத்து தீவிர அரசியல் செய்து தமிழகத்தில் கால் பதிக்கலாம் என்று நினைக்கும் பாஜகவிற்கும் இது பெரிய அதிர்ச்சி.
எல்லாம் போச்சு
இத்தனை வருடம் அவரின் அரசியல் அறிவிப்பிற்காக கால் கடுக்க காத்திருந்தவர்களுக்கு இன்றைய அறிவிப்பு ஒரு பெரிய ஏமாற்றமாக இருந்திருக்கும். அரசியலுக்கு வந்து சிலர் நல்லது செய்வார்கள், அரசியலுக்கு வராமல் சிலர் நல்லது செய்வார்கள்.. ஆனால் இங்கு அரசியல்தான் ரஜினியை வைத்து நன்றாக செய்து கொண்டு இருக்கிறது.. பேசாம நீங்கள் மறுபடியும் படம் நடிக்கவே போயிடுங்க சிவாஜி!