முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம்.. என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு!
இன்று காலை 10.30 மணிக்கு செய்தியாளர்களை சந்திக்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை: முதல்வர் பதவியே எனக்கு வேண்டாம், என் ரத்தத்திலேயே அந்த ஆசை இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறி விட்டார். நான் தொடங்கும் கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். முதல்வர் பதவி எனக்கு வேண்டாம், என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
Recommended Video
நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் எல்லோரும் எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நீண்ட ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தைகளுக்கு பின் தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் இன்று வெளியிட்டு இருக்கிறார்.
கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தன் மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் உடன் சந்திப்பு நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. கட்சி தொடங்குவது தொடர்பாக ரஜினிகாந்த் தீவிரமாக ஆலோசனைகளை மேற்கொண்டார். இந்த சந்திப்பு முடிந்து 8 நாட்கள்தான் ஆகிறது. இன்று மீண்டும் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.
நான் ஒன்னும் 25 வருஷமா நான் அரசியலுக்கு வருவேன்னு சொல்லலிங்க.. ரஜினிகாந்த் தடாலடி
சந்திப்பு
கடந்த முறை சந்திப்பு முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், எனக்கு சின்ன ஏமாற்றம் இருக்கிறது. ஒரு மனவருத்தம் உள்ளது. ரசிகர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். என்னுடைய மனவருத்தம் என்ன என்று பின்னர் அறிவிப்பேன் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார். இந்த நிலையில் நடிகர் மீண்டும் ரஜினி தனது மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்தித்தார்.
கூட்டம்
சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. இதன்பின் சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார்.இதில் அவர் பேசியதாவது, உங்களுக்கே தெரியும் இந்த சந்திப்பு ஏன் என்று. சில தினங்களுக்கு முன் நான் மாவட்ட செயலாளர்களை சந்தித்தேன். அதில் எனக்கு ஒரு விஷயத்தில் திருப்தி இல்லை என்று கூறினேன். எனக்கு ஏமாற்றம் என்று கூறினேன்.
என்ன பேசினார்
அதை பற்றி பலரும் கேள்வி கேட்டார்கள், விவாதம் செய்தனர். உள்ளே நடந்தது என்ன என்று யாருக்கும் தெரியாது. மாவட்ட செயலாளர்கள் அதை வெளியே சொல்லவில்லை.இதை பற்றி நான் இங்கே பேச விரும்புகிறேன். என் அரசியல் எப்படி இருக்கும், என் கட்சி எப்படி இருக்கும் என்று விளக்க இருக்கிறேன். மக்களுக்கும் எனக்கும் ஒரு தெளிவு வர வேண்டும் என்று இந்த சந்திப்பை மேற்கொள்கிறேன்.
தவறு
1996ல் இருந்து 25 வருஷமாக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறுகிறார்கள். நான் அரசியலுக்கு வருவதாக 2017ல் டிசம்பர் 31ல்தான் அறிவித்தேன். நான் 25 வருஷமாக அரசியலுக்கு வருவேன் என்று கூறுவது தவறு. 2 வருடமாக மட்டுமே அப்படி கூறி வருகிறேன். டாக்டர் கலைஞர் கருணாநிதி, நண்பர் சோ ஆகியோரிடம் அரசியல் குறித்து பேசி இருக்கிறேன். எப்படி அரசியல் செய்ய வேண்டும் என்று அவர்களிடம் பேசி உள்ளேன்.
சிஸ்டம் இல்லை
2016ல் ஜெயலலிதா இறந்த பின் தமிழகத்தில் வெற்றிடம் ஏற்பட்டது. யார் ஆட்சி செய்வது என்று சண்டை வந்தது. அதுதான் வெற்றிடம். அப்போதுதான் மக்களுக்காக நான் அரசியலுக்கு வர முடிவு செய்தேன். என்னை வாழ வைத்த மக்களை வாழ வைக்க வேண்டும் என்று அப்படி கூறினேன். சிஸ்டம் சரியில்லை என்று இப்படி கூறினேன். சிஸ்டத்தை சரியில்லாமல் அரசியலில் இறங்கினால் தவறு.
திட்டங்கள்
அதற்கு நான் சில திட்டங்களை வைத்து இருந்தேன். அதில் முதல் திட்டம் பற்றி சொல்கிறேன். தமிழகத்தில் பெரிய கட்சிகள் திமுக, அதிமுக ஆகியவை. அவர்களிடம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான கட்சி பதவிகள் உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர்கள் உழைப்பார்கள். தேர்தலுக்கு பின் கட்சியில் இருக்கும் அவர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அவர் தங்கள் திட்டப்படி தேர்தலுக்கு நினைத்தை செய்வார்கள்.
ஆட்சி
ஆட்சிக்கு வந்த பின் ஆளும் கட்சி ஆட்கள் என்று கூறிக்கொண்டு இந்த பதவியில் இருக்கும் நபர்களை முறைகேடுகளை செய்வார்கள். டெண்டர் தொடங்கி பல முறைகேடுகளை செய்வார்கள். இதை பலர் தொழிலாக செய்து வருகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்தால், இதை செய்ய கூடாது. தேர்தல் நேரத்தில் என்ன பதவி தேவையோ அதை மட்டும் வைத்துக்கொண்டு, தேர்தலுக்கு பின் அந்த பதவிகளை நீக்கிவிட வேண்டும். எவ்வளவு பதவி தேவையோ அதை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும், அதுதான் முதல் மாற்றம்.
எம்எல்ஏக்கள்
அடுத்தபடியாக தமிழகத்தில் 50 வயதுக்கும் மேல் உள்ள எம்எல்ஏக்கள்தான் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் நான் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிப்பேன். 50 வயதுக்கு கீழ் இருக்கும், நல்ல மதிப்பு மிக்கவர்களை அரசியலில் ஈடுபட வாய்ப்பு அளிப்பேன். மற்ற கட்சியில் வாய்ப்பு இல்லாமல் இருப்பவர்களை எங்கள் கட்சியில் அனுமதித்து வாய்ப்பு அளிப்பேன். முன்னாள் நீதிபதிகள், ஐஏஎஸ், ஐபிஎஸ்கள் ஆகியரை கட்சியில் சேர்ப்பேன். அவர்கள் வீட்டில் சென்று அவர்களை அழைத்து வருவேன்.
புதிய அணி யார்?
இப்படி ஒரு புதிய அணியை கட்சியில் சேர்ப்பேன். அதன்பின் ஆட்சி அமைப்பேன். அதற்கு நான் ஒரு பாலமாக இருப்பேன். மூன்றாவதாக, முக்கியமான திட்டம். இந்தியாவில் தேசிய கட்சிகளை தவிர மாநில கட்சிகளில் ஆட்சிக்கும் ஒருவர்தான் தலைவர், கட்சிக்கும் அவரேதான் தலைவர். கட்சியிலும் கேள்வி கேட்க முடியாது, ஆட்சியிலும் கேள்வி கேட்க முடியாது. இதை மாற்ற வேண்டும். இதை சரி செய்ய வேண்டும். அதனால் கட்சிக்கு ஒரு தலைவர், ஆட்சிக்கு ஒரு தலைவர் என்ற முடிவை எடுத்துள்ளேன்.
புதிய குழு
இதற்காக ஒரு குழுவை உருவாக்குவேன். வாக்குறுதிகளை செயல்படுத்த, ஒரு கண்காணிப்பு குழு உருவாக்குவேன். என்னால் முதல்வர் பதவியை நினைத்து பார்க்க முடியாது. அது என் ரத்தத்தில் இல்லை. நான் நல்லவரை முதல்வராக தேர்வு செய்வேன். 50 வயதுக்கு கீழ் இருக்கும் நபர்களை முதல்வராக்குவேன். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை இருப்பார். நான் ஆட்சி தலைவர் இல்லை, நான் கட்சிக்கு மட்டும் தலைவராக இருப்பேன்.
வருத்தம்
நான் முதல்வர் இல்லை என்பதை யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்கள் யாரும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை . இதை பல வருடமாக திட்டமிட்டேன். ஆனால் யாரும் ஏற்கவில்லை. செயலாளர்களை அழைத்து இது பற்றி பேசினேன். ஆனால் அதையும் மாவட்ட செயலாளர்கள் ஏற்கவில்லை. இதுதான் எனக்கு ஏமாற்றம் அளித்தது. தலைவர்கள் சொல்வதையே தொண்டர்கள் கேட்க வேண்டும். அதுதான் முக்கியம். நேர்மையாக இருக்க வேண்டும். எனக்கு முதல்வர் பதவியே வேண்டாம் என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.