"எங்க வேணும்னாலும் போங்க.." ரஜினி மக்கள் மன்றம் பரபரப்பு அறிக்கை.. அப்போ "வாய்ஸ்" கூட கிடையாதா?
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தினர் வேறு கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ராஜினாமா செய்துவிட்டு விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று, ரஜினி மக்கள் மன்றம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Recommended Video
ரஜினிகாந்த் திடீரென தனது அரசியல் வருகை பின்வாங்கிய நிலையில், ரஜினி மக்கள் மன்றத்தின் 3 மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், நேற்று திமுகவில், இணைந்தனர். ரஜினி மக்கள் மன்றத்தின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் கணேசன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தனர்.
இந்த நிலையில், ரஜினி மக்கள் மன்றம் நிர்வாகி சுதாகர் இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
விருப்பம் போல போகலாம்
இந்த அறிக்கையில் கூறியிருப்பதை பாருங்கள்: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம்.
ரசிகராக இருக்க வேண்டும்
அவர்கள் வேறு கட்சிகளில் இணைந்தாலும், அவர்கள் எப்போதும் நம் அன்பு தலைவரின் ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசியலுக்கு ரொம்ப தூரம்
இந்த அறிக்கை ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறது. அதாவது ரஜினி மக்கள் மன்றத்தை ஒரு மக்கள் நல இயக்கமாக பயன்படுத்தக் கூட ரஜினி விரும்பவில்லை என்பதைத்தான் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. ரசிகராக இருந்து படத்தை பாருங்கள், அதன் மூலம் கிடைக்கும் டிக்கெட் வருமானம் வந்தால் போதும். அரசியல் அது இது என்று, என்னை தொந்தரவு செய்யாதீர்கள் என்பதே இந்த அறிக்கையின் சாராம்சம்.
வாய்ஸ் கிடையாது
இந்த அறிக்கை இன்னொரு விஷயத்தை உறுதி செய்கிறது. ரஜினி எந்த கட்சிக்கும் ஆதரவாக, வரும் சட்டசபை தேர்தலில் வாய்ஸ் கொடுக்கப்போவதில்லை. அப்படி ஏதாவது ஒரு கட்சிக்கு வாய்ஸ் கொடுக்கும் திட்டமிருந்தால் தனது மக்கள் மன்றத்தினர் பிற கட்சிகளுக்கு செல்ல அவர் பச்சைக் கொடி காட்டியிருக்க மாட்டார்.
திரையில் மட்டுமே ரஜினிகாந்த்
ஆக மொத்தம். வரும் சட்டசபை தேர்தலில், ரஜினி என்ற ஆளுமை எந்த பங்களிப்பும் அளிக்கப்போவதில்லை. திரைப்படங்களில் தோன்றி ரசிகர்களை மட்டும் தியேட்டருக்கு வரவழைக்கும் திரைப்பட நடிகராக மட்டுமே இருக்கப்போகிறார் என்பதுதான். ஆனால், இதற்கு ஏன் 2 வருடமா அரசியல்.. கட்சி.. என்றெல்லாம் சொல்லி பரபரப்பை ஏற்படுத்தி, தானும் குழம்பி, அடுத்தவர்களையும் குழப்பினார் என்புதாதன் புரியவில்லை.