ரத்த அழுத்தத்தில் பெரிய மாறுபாடு.. ஹைதராபாத் அப்பல்லோவில் ரஜினிகாந்த் அனுமதி! இன்று டிஸ்சார்ஜ் இல்லை
சென்னை: ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது ரத்த அழுத்தத்தில் பெரிய அளவுக்கு மாறுபாடு இருந்ததால் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளதாக அப்பல்லோ தெரிவித்துள்ளது. தற்போது அவர் உடல்நிலை சீராக இருப்பதாக மாலையில் அப்பல்லோ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அண்ணாத்த என்ற பெயரில் ரஜினிகாந்த் ஒரு படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் இந்தப் பட சூட்டிங்கிற்காக ஹைதராபாத் சென்றார் ரஜினிகாந்த்.
Recommended Video
ஆனால் சூட்டிங் குழுவைச் சேர்ந்த சுமார் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், உடனடியாக சூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினிகாந்த்துக்கு கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்டது. அவருக்கு நெகட்டிவ் என வந்தது.
வீட்டுக்குள்ளே தனிமைப்படுத்திக் கொண்ட ரஜினிகாந்த்.. கண்ணை கட்டுதே கட்சி அறிவிப்பு!
ஹைதராபாத் அப்பல்லோ
அதேநேரம், இன்று காலை திடீரென ரஜினிகாந்த் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை. ஆனால் ரத்த அழுத்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதிக அசதி ஏற்பட்டுள்ளது. இது இரண்டை தவிர பிற அனைத்தும் நார்மலாக இருக்கிறது என்று அப்பல்லோ மருத்துவமனை செய்திக்குறிப்பு வெளியிட்டது.
அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை
அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்று மதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: இன்று காலை ரஜினிகாந்த் எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 10 நாட்களாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பில் அவர் பங்கேற்றிருந்தார். அங்கு உடன் பணியாற்றிய சிலருக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டுள்ளது.
மிகுந்த ரத்த அழுத்த வேறுபாடு
இதையடுத்து, கடந்த 22ஆம் தேதி ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளது. இதன் பிறகும் அவர் தொடர்ந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தார். அவரது உடல்நிலையை தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வந்தது. கொரோனா நோய் அறிகுறி எதுவும் இதுவரை தென்படவில்லை, என்ற போதிலும், ரஜினிகாந்தின் ரத்த அழுத்தத்தில் மிகுந்த மாறுபாடு காணப்படுகிறது.
டிஸ்சார்ஜ் எப்போது?
இது பற்றி தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட வேண்டியது இருப்பதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக தொடர்ந்து பரிசோதனைகள் செய்யப்பட்டு உன்னிப்பாக கவனிக்கப்படும். அவரது ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவமனையில் வைத்திருந்து பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்.
ரத்த அழுத்தம், சோர்வு
ரத்த அழுத்தத்தில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் உடல்நிலை சோர்வு ஆகியவற்றை தவிர்த்து விட்டு பார்த்தால் வேறு முக்கியமாக உடல்நிலை விஷயத்தில் எந்த ஒரு பாதிப்பும் கிடையாது. இவ்வாறு அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா இல்லை என்பது தெரிய வந்தாலும் கூட, சில நாட்கள் கழித்து மீண்டும் பரிசோதனை செய்து பார்ப்பது அவசியம்.
ரஜினி ரசிகர்கள் வேண்டுதல்
ரஜினிகாந்த் உடல்நிலை மற்றும் வயது முதிர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஒரே பரிசோதனையில் நிறுத்திக் கொள்வது வழக்கம் கிடையாது என்பதால், அப்பல்லோ மருத்துவமனையில் அதற்கான பரிசோதனைகளும் அடுத்தகட்டமாக எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே ரஜினிகாந்த்துக்கு மீண்டும் ஒரு கொரோனா டெஸ்ட் எடுக்கப்படும் எனத் தெரிகிறது. ரஜினிகாந்த் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட தகவல் வெளியானதும், அவர் விரைவில் நலம்பெற ரசிகர்கள் வேண்டி வருகிறார்கள்.
அப்பல்லோ புதிய அறிக்கை
இதனிடையே, இன்று மாலை, அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் மற்றொரு செய்திக் குறிப்பு வெளியிட்டது. அதில் கூறியிருப்பதாவது: ரஜினிகாந்த் உடல்நிலை சீராக உள்ளது. தொடர்ந்து ஓய்வு எடுத்து வருகிறார். அவரது உடல்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ரத்த அழுத்த ஏற்றத்தாழ்வு சீராக்குவதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. இன்று இரவு அவர் மருத்துவமனையில் தங்கி இருக்க வேண்டியது இருக்கும். நாளை கூடுதல் பரிசோதனைகள் செய்யப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா உடனிருந்து கவனித்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.