ஒரே நாளில் எல்லாம் தலைகீழ்.. அதிமுகவிடம் பாஜக இதை எதிர்பார்க்கல.. எப்படி சமாளிப்பார் முருகன்?
சென்னை: எந்த நேரத்தில், எல்.முருகன் தமிழக பாஜகவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ தெரியவில்லை.. இன்று ஒரேநாளில், அந்த கட்சிக்கு இரட்டை ஷாக்கிங் தமிழகத்திலிருந்து பரிசாக கிடைத்துள்ளது.
பாஜக கூட்டணியில் அதிமுக இடம் பெற்றிருக்கக் கூடியது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அப்படி இருந்தாலும் கூட, ரஜினிகாந்த் மீது பாஜக தலைவர்களுக்கு ஏதோ ஒரு தனி கரிசனம் உண்டு.
அவர் தனியாக கட்சி ஆரம்பித்து, அதிமுக கூட்டணியை உடைத்து, கூட்டணி அமைத்துக் கொண்டால், அவரை வைத்தே தமிழகத்தில் காலூன்றலாம் என்று பாஜக திட்டமிடுவதாக ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
எடப்பாடியார் அதிரடி
இது அதிமுக தலைமைக்கு சற்று கூடுதலாகவே கவலை கொடுத்து வந்தது. எனவேதான் மக்கள் மத்தியில் அதிமுகவின் செல்வாக்கை உயர்த்திக் கொள்வதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது, ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி மறுப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த விஷயங்களில் அதிரடியாக முடிவெடுத்து அதை செயல்படுத்தி உள்ளார் எடப்பாடி பழனிச்சாமி. இடைத்தேர்தல்களில் அடுத்தடுத்து அதிமுகவை வெற்றி பெறச் செய்து, எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆளுமைகளை நிரூபித்து விட்டனர்.
தலை சுற்றிப் போச்சு
இந்த நிலையில்தான், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், மக்கள் மத்தியில் மாபெரும் புரட்சி ஏற்பட்டு, அது தனக்குத் தெரியவந்தால் தான் நான் அரசியலுக்கு வருவேன், அல்லது வாக்குகளை பிரிக்க அரசியலுக்கு வந்து என்ன லாபம்? என்று ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார். இது ரஜினி ரசிகர்களை தலைசுற்ற வைத்ததோ இல்லையோ, பாஜக தலைவர்களுக்கு தாறுமாறாக சுற்றி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். தமிழக அரசியலில், யாரை துருப்புச் சீட்டாக பயன்படுத்தலாம் என்று நினைத்தோமோ, அவரே, ஆளை விட்டால் போதும் என்ற ரீதியில், ஒரு பேட்டியை கொடுத்ததை பார்த்து பாஜக மேலிடம் அப்செட் ஆகி விட்டது.
அதிமுக குஷி
ரஜினியின் பேட்டியால் சந்தோசமடைந்த தரப்பு என்றால், அதற்கு முதலிடம் அதிமுகவுக்குதான். ஏனெனில், எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற திரையுலக ஆளுமைகள் வளர்த்த கட்சி அது. மற்றொரு திரையுலக ஆளுமை அரசியலுக்கு வந்தால், அவர்கள் வாக்கு வங்கி பதம் பார்க்கப்படும். மேலும் கூட்டணிக்கு உள்ளே இருக்கக்கூடிய பாஜகவும், ரஜினி மீது அளவு கடந்த அன்பை பொழிந்து கொண்டிருந்தது அவர்களுக்கு எரிச்சலை ஊட்டியது. இப்போது, பாஜகவுக்கு வேறு வழியில்லை என்பது அதிமுகவுக்கு அதிக சந்தோஷத்தை கொடுத்துள்ளது.
உதயகுமார் பேட்டி
இந்த நிலையில்தான், இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்தார் வருவாய்துறை அமைச்சர் உதயகுமார். தமிழகத்தில் தேசிய மக்கள் தொகை பதிவேடு திட்டம் அமல்படுத்த படாது என்று அதிரடியாக அறிவித்தார். மத்திய அரசிடம் தாங்கள் விளக்கம் கேட்டதாகவும், அவர்கள் இன்னமும் விளக்கம் அளிக்கவில்லை என்றும், எனவே இந்த திட்டம் அமல்படுத்தப்படாது என்றும் கூறிவிட்டார்.
அதிமுக திட்டம்
பாஜகவின் லட்சிய திட்டங்களில் ஒன்று என்பிஆர். ஆனால் அதை செயல்படுத்த மறுத்துவிட்டது அதிமுக அரசு. ஏனெனில் இப்போது அதிமுகவின் குடுமி பாஜகவின் கையில் இல்லை என்ற நினைப்பு அந்த கட்சி தலைவர்களுக்கு வந்துவிட்டது. அதிமுக வாக்கு வங்கியை பலப்படுத்திக் கொள்வதுதான் இப்போதும், எப்போதும் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பதை அக்கட்சி தலைமை உணர்ந்துள்ளது. இதனால்தான், பாஜகவின் கனவு திட்டம் தமிழகத்தில் காற்றோடு கரைந்துவிட்டது. அந்த வகையில் ரஜினி மற்றும் அதிமுக ஆகிய இரண்டு பேரும், ஒரே நாளில் அடுத்தடுத்து கொடுத்த இந்த அதிர்ச்சியிலிருந்து பாஜக இன்னும் மீளவே இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.