எனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்.. ரஜினி திடீர் முடிவு... காவல்துறைக்கு கோரிக்கை!
தன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என ரஜினி கேட்டு கொண்டுள்ளார்
சென்னை: "எனக்கென்று தனியாக போலீஸ் பாதுகாப்பு வேண்டாம்" என்று நடிகர் ரஜினிகாந்த் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பாக ரஜினிகாந்த் கருத்து சொல்லி இருந்தது.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.. இன்னமும் அதன் தாக்கம் குறையவில்லை.
துக்ளக் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது... இதனால் பல்வேறு தரப்பினர் ரஜினியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.. திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல, ரஜினி மீது போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களும் தந்தனர்... இதனால் ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டது. 6 போலீசார் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரமும் ரஜினி வீட்டிற்கு பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த சமயத்தில்,சிஏஏ விவகாரம் குறித்தும் ரஜினிகாந்த் கருத்து கூறியிருந்தார்.. முஸ்லிம்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் முதல் ஆளாக வந்து போராடுவேன் என்றவர், டெல்லி வன்முறைச் சம்பவங்களை உளவுத்துறை கட்டுப்படுத்த தவறியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார். ஒருவேளை வன்முறையைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பதவியை ராஜினாமா செய்துவிட்டுச் செல்லவேண்டும் எனவும் விமர்சித்திருந்தார்.
இப்படி தொடர்ந்து அவரது கருத்துக்கள் சர்ச்சையானதால், போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டிற்கு போடப்பட்ட பாதுகாப்பு நீட்டிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்துடன், காவல் துறை நுண்ணறிவுப் பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு திடீரென இன்று சந்தித்துப் பேசினார். அப்போது போலீஸ் பாதுகாப்பு வழங்குவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
"எனக்கென்று தனியாக பாதுகாப்பு வேண்டாம்" என்று அவரிடம் ரஜினிகாந்த் மறுத்துவிட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டாம் என்று ரஜினி கேட்டுக் கொண்டதையடுத்து, உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தெரிவிப்பதாக திருநாவுக்கரசு ரஜினிகாந்திடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.