நமக்கு இப்ப தமிழருவி மணியனை நினைச்சாதான் கண்ணு வேர்க்குது!
''எப்ப வருவேன், எப்படி வருவேண்ணு தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்''. பிரபலமான இந்த டயலாக்கை குழந்தை பருவத்தில் கேட்டவர், இப்போது ஓட்டு போடும் வயதை எட்டிவிட்டார். ஆனால் 'கரெக்டா வருகிறேன்' என சொன்ன ரஜினிதான் இன்னமும் அரசியலில் ஜாயின் ஆகவில்லை. ஆனால் வழக்கம்போல் தனது ஒன்-லைனர்களால் அனைவரையும் சுத்தலில் விட்டுக்கொண்டிருக்கிறார்.
Recommended Video
தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோதும் ரஜினி இதையேதான் செய்தார். ஒரு விஷயத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு ஏமாற்றம்தான், ஆனால் அதை இப்போது சொல்ல மாட்டேன், நேரம் வரும்போது சொல்கிறேன், என்று சொல்லிவிட்டார். அதான் சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டாரே, அப்படியே விட வேண்டியதுதானே. ஆனால் நம்ம ஆட்கள் விடுவார்களா.. அப்படி அது என்னவாதான் இருக்கும் என்று பிரைம் டைமில் வழக்கம்போல விவாதம் வைத்து விலாவாரியாக அலசி காயப்போட்டார்கள்.
ஒவ்வொரு படம் வெளியாகும் சமயத்திலும் ரஜினி எதையாவது 'தெறிக்க'விடுவதும், அதையொட்டி வாதப் பிரதிவாதங்கள் கிளம்புவதும் தமிழகத்தைப் பொறுத்தவரை வாடிக்கையான விஷயங்களாகிவிட்டன. ரஜினி, அரசியலில் நுழைவதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கை இது என சிலர் சொன்னாலும், ''அட போங்கப்பா... தனது பட புரோமொஷனுக்காக அவர் கையாளும் டெக்னிக் இது'' என வேறு சிலர் விமர்சிப்பதுண்டு. அரசியலில் நுழைய வேண்டும் என்கிற ஆசை ரஜினிக்குள் இருப்பது மறுக்க முடியாத உண்மை. இந்த ஆசை, ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோரின் மறைவுக்குப் பின்னர் ரொம்பவே அதிகமானது அதைவிட உண்மை.
அட வாங்க பாஸ்!
‘'இந்த இருபெரும் ஆளுமைகளின் மறைவினால் ஏற்பட்ட வெற்றிடத்தை உங்களால் எளிதில் நிரப்ப முடியும் பாஸ்'' என பலரும் ரஜினிக்குத் தூபம் போட்டார்கள். இதைத் தொடர்ந்தே மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்து, கட்சி தொடங்குவதற்கு பிள்ளையார் சுழி போட்டார் ரஜினி. அதேநேரம் ரஜினியின் முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் எப்படியும் வெற்றிக் கணக்கைத் தொடங்க வேண்டும் என பாஜகவும் திட்டம் போட்டது. ஆரம்பத்தில் ரஜினியும் இதற்கு ஓகே சொன்னார் என்கிறார்கள்.
சீக்ரெட் நகர்வுகள்
இதை முன்னிட்டு தமிழக அரசியல் அரங்கில் சில ரகசிய நகர்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் கடந்த எம்.பி தேர்தலில் பாஜக இடம்பெற்ற கூட்டணிக்கு தமிழக மக்கள் தந்த பலத்த அடி, ரஜினியை ரொம்பவே யோசிக்க வைத்திருக்கிறது. காவி பரிவாரங்களுடன் ஏதோ ஒரு வகையில் அரசியல் உறவு கொண்டால் தமிழக மக்கள் தம்மையும் அடியோடு ஓரம் கட்டிவிடுவார்களோ என்கிற அச்சம் ரஜினிக்கு இருப்பதாக சொல்கிறார்கள். ஆனால் பாஜக, ரஜினியை விடுவதாக இல்லை.
எழுச்சி வரலையே அண்ணாத்தே!
மாவட்ட வாரியாக ரசிகர்களை சந்தித்த அவர், தனது அரசியல் எண்ட்ரி தொடர்பான இறுதி முடிவை இந்தக் கூட்டத்தில் எடுக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. வரும் தமிழ் புத்தாண்டு அன்று கட்சியைத் தொடங்க ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் எழுச்சி வந்தால் சொல்லி அனுப்பு.. அதற்குப் பிறகு நான் வாரேன் என்று நேற்று சொல்லி விட்டார் சூப்பர் ஸ்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகிவரும் 'அண்ணாத்தே' திரைப்படம்தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என்றும், இனி முழுநேர அரசியல்தான் அவரது பணியாக இருக்கும் என்றும் பலரும் சொல்லத் தொடங்கியுள்ளனர்.
இதே கூத்துதான்
அதேநேரம் ரஜினியின் அரசியல் நடவடிக்கைகளை நீண்டகாலமாக உற்றுநோக்கி வருபவர்களோ ''கிட்டத்தட்ட 25 வருஷமா இந்த கூத்து நடந்துகிட்டிருக்குது. பாட்சா வெளியான சமயத்திலிருந்து இதைப் பார்த்துக்கொண்டுதான் வர்றோம். திடீர்னு ரஜினி கட்சி தொடங்கப் போறதா ஒரே களேபரமா இருக்கும். அவர் கூட சேரப் போறாரு, இவரை எதிர்க்கப் போறாருண்ணு ஆளாளுக்குக் கிளப்பி விடுவாங்க. கொஞ்ச காலத்திற்கு பத்திரிகைகள் முழுக்க இது பற்றிய செய்தியாகவே இருக்கும். கடைசியில் காற்றுபோன பலூன் மாதிரி எல்லாமே புஸ்ஸுண்ணு அடங்கிப் போகும். இந்த முறையும் அதுதான் நடக்கப் போகுது என்று சொல்லி வந்தனர். அதுதான் கடைசியில் நேற்றும் நடந்திருக்கிறது.
பில்டப் அரசியல்
தேவையில்லாமல் ஒரு பில்டப் கொடுத்து எல்லோருடைய எதிர்பார்ப்புகளையும் எகிற வெச்சிட்டோமே. இவங்களையெல்லாம் நிமிஷத்தில் எப்படி கட் பண்றதுண்ணு தெரியாமல் ரஜினி ரொம்பவே சங்கடத்தில் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினியோட உடல்நிலை, கடினமான அரசியல் பணிகளுக்கு ஏற்றதாக இல்லை. ஆக மொத்தத்தில் ரஜினி ரொம்ப குழப்பத்தில் இருக்கிறார். இதை மட்டும் எங்களால உறுதியாகச் சொல்ல முடியும்'' என்கிறார்கள். நேற்றைய பிரஸ் மீட் பார்த்தவர்களுக்கும் அது புரிந்திருக்கும்.
அப்ப தமிழருவி மணியன் கதி!
ஆக மொத்தத்தில் இப்போதைக்கு ரஜினி தீவிர அரசியலுக்கு வருவது உறுதியாகவில்லை.. இதுல நமக்கு என்ன கவலைன்னா.. நேற்று ரஜினி கூறிய ஆட்சித் தலைவருக்கான இலக்கணங்களின்படி பார்த்தால் தமிழருவி மணியனுக்கு அது செட் ஆகவில்லை. அப்படீன்னா தமிழருவியாரால் முதல்வராக முடியாதா என்பதே நமக்கு பெரும் கவலையாக இருக்கிறது.. ஏன்னா இவருக்கு இப்ப வயசு 70!
- கௌதம்