2020-ஆம் ஆண்டின் நியூஸ் மேக்கர்களான அருணாசலமும்.. ஆழ்வார்பேட்டை ஆண்டவரும்!.. பரபரத்த தமிழகம்
சென்னை: 2020-ஆம் ஆண்டில் அதிகம் பேசப்பட்டவர்களாக திகழ்ந்தவர்கள் ரஜினியும் கமலும். வெறும் திரைப்படங்களுக்காக மட்டும் அவர்களது அரசியல் நகர்வுகளுக்காக... இந்த ஆண்டு முழுவதும் பேசப்பட்டவர்களாகினர்.
2021-ஆம் ஆண்டு இன்னும் 3 நாட்களில் பிறக்கிறது. இந்த நிலையில் 2020ஆம் ஆண்டு நடந்த முக்கிய நிகழ்வுகள், முக்கிய பிரச்சினைகள், நியூஸ் மேக்கர்களானவர்கள் உள்ளிட்டவை குறித்து அசை போடுவது வழக்கம். அந்த வகையில் ரஜினியும் கமலும் நியூஸ் மேக்கர்களாகி அவர்களது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.
முதலில் ரஜினியை பார்ப்போம். 1978 ஆம் ஆண்டு முதல் திரைப்படங்கள் மூலம் பெரிதும் பேசப்பட்டவர் ரஜினிகாந்த். தனது அயராத உழைப்பாலும் அசாத்திய திறமையாலும் எந்த நாளும் பேசப்பட்டவராகவே இருந்தவர்.
ரஜினி கட்சி
இந்த ஆண்டு தை மாதம் ரஜினி கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து கடந்த மே மாதம் வந்த நாடாளுமன்றத் தேர்தலையொட்டி கட்சியை தொடங்கி போட்டியிடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் அவர் கட்சியை தொடங்கவும் இல்லை. யாருக்கும் ஆதரவு தரவில்லை.
பொய்
இதையடுத்து கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி 3 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் கட்சியே தொடங்க மாட்டார் என நிறைய பேர் பேசினார்கள். ஆனால் அதையெல்லாம் பொய்யாக்கி விட்டு தனது அறிவிப்பை வெளியிட்டார் ரஜினி.
ரெஸ்ட் எடுக்க அறிவுரை
வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பதாக இருந்த நிலையில் தற்போது அவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவர்கள் ஒரு வார காலத்திற்கு அவரை ஓய்வு எடுக்க சொல்லியிருக்கிறார்கள். இதனால் அவர் டிசம்பர் 31-ஆம் தேதி கட்சி அறிவிப்பை வெளியிடுவாரா என்பது சந்தேகம்தான். ஒரேடியாக ஜனவரி மாதம் கட்சியை தொடங்கினாலும் தொடங்கிவிடுவார்.
ரஜினி
அரசியல் பிரவேசம் காரணமாகவே ரஜினி அதிகம் பேசப்பட்டார். அது போல் கமல்ஹாசன் கடந்த 2018இல் அரசியல் கட்சியை தொடங்கிவிட்டாலும் இந்த ஆண்டு முழுவதும் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக அவர் குரல் எடுத்து வந்தார். காட்டமாக அறிக்கைகளை வெளியிட்டார்.
நாடாளுமன்றக் கட்டடம்
விவசாயிகள் பனியில் கிடக்க இத்தனை கோடி செலவு செய்து நாடாளுமன்றக் கட்டடம் எதற்கு என கேள்வி எழுப்பினார். அதை மோடிக்கும் டேக் செய்வதாக அறிவித்தார். அது போல் கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி முதல் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, குமரி, சிவகங்கை, சென்னை, காஞ்சிபுரம், செஞ்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் தனது தேர்தல் பிரச்சாரத்தை கமல் தொடங்கினார்.
ரஜினி கமல் கூட்டணி
ஒவ்வொரு தொகுதியில் நடைபெறாத வளர்ச்சி திட்டங்கள் குறித்தும் தொகுதி பிரச்சினை குறித்தும் அலசினார். எதிர்க்கட்சியினரை ஏசுவதற்கு பதிலாக ஆளும் கட்சியின் மெத்தன போக்கை கிழித்தார். இதனால் கமல் மீதும் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் இருவரும் இணைந்து கூட்டணி வைக்க கமல் விரும்புகிறார். இதனால் எதிர்பார்ப்புகள் எகிறிவிட்டன.