EXCLUSIVE: கொரோனாவே வந்துடுச்சு.. அவர் இன்னும் வரலயே.. இருவரும் இணைந்தால் நல்லதுதான்.. கஸ்தூரி பளிச்
ரஜினிகாந்த் - கமல் அரசியலில் இணைந்தால் நல்லதுதான் என கஸ்தூரி தெரவித்துள்ளார்
சென்னை: "ரஜினி ஏன் இவ்வளவு யோசிக்கிறார்? அவருக்கு மனசில் என்னதான் இருக்கு, எதுக்காக தயங்குகிறார் என்று எனக்கு புரியவே இல்லை... ஆனால், கமல் - ரஜினி இணைந்து அரசியல் பணியாற்றினால் ரொம்ப நல்லாயிருக்கும்.. தமிழக மக்களுக்கு நல்லது நடக்கணும்னுதான் 2 பேரும் நினைக்கிறாங்க.. அந்த வகையில் இவர்கள் இணைவது சிறப்புதான்.. இவங்க மட்டுமில்லை.. தமிழ்நாட்டுக்காக இங்க இருக்கிற எல்லா கட்சிகளும் இணைந்து பணியாற்றினால் அது இன்னும் நல்லாவே இருக்கும்" என்று தன்னுடைய விருப்பத்தையும், எண்ணத்தையும் கஸ்தூரி வெளிப்படுத்தி உள்ளார்.
மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனின் அரசியல் 'மூவ்'களுக்கு ஆரம்பத்தில் நடிகை கஸ்தூரி ஆதரவு கொடுத்தார்... ஆனால் இதற்கு பிறகு சில எதிர்மறை கருத்துக்களை முன்வைத்து ட்வீட்களை போட துவங்கினார்.
அரவக்குறிச்சியில் கமல் பிரச்சாரத்தில் நாதுராம் கோட்சே பற்றி பேசும்போதுதான், கஸ்தூரியின் எதிர்ப்பு அதிகமாகவே வெளிப்பட்டது.. "மதரீதியாக திருப்திப்படுத்துவதோடு ஏன் நின்றுவிட்டீர்கள்? சாதி அரசியலையும் எடுத்துக்கொண்டு வாருங்கள். இஸ்லாமியர்கள் இருக்கும் பகுதியில் கமல்ஹாசன் இந்து தீவிரவாதம் பற்றி பேசுகிறார். அப்படியே நாதுராம் கோட்சேவை பிராமணத் தீவிரவாதி என்று வண்ணமிட்டு மற்ற குழுக்களின் ஆதரவையும் கோருங்களேன்" என்று பதிவிட்டார்.
இந்தியன் 2
அநேகமாக கஸ்தூரியின் உச்சபச்ச துணிச்சலான ட்வீட் இது என்றுகூட சொல்லலாம்.. இதற்கு பிறகு இந்தியன் 2 பட விபத்து குறித்து கமல் விசாரணைக்கு அழைத்த தினத்தன்றும், "3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது கமலுக்கும் கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும்" என்று ட்வீட் போட்டார்.
பதிவுகள்
"கரெக்ட்தானே.. கஸ்தூரி சரியாகத்தானே கேட்கிறார்" என்று இதற்கு ஆதரவுகள் பெருகியதையும் மறுக்க முடியாது.. கமலுக்கு விரிவான ட்வீட் என்றால், ரஜினிக்கு ஷார்ட் & கிரிஸ்ப் ட்வீட்களை பதிவிடுவார்.. "அவ்வளவுதானா".. அது மட்டும்தானா.. வேறு எதுவும் இல்லையா.." என்றும் "போடறா வெடிய" என்றும் இவரது ஒத்த வரி ட்வீட்கள் ரொம்ப ஃபேமஸ்!
சிறப்பு பேட்டி
இரு தரப்பு ரசிகர்களின் அதிருப்தியை பலமுறை சம்பாதித்தவர் கஸ்தூரி.. கலையுலகில் ஒன்றாக பயணித்தாலும், சக கலைஞர்கள் என்றாலும் ரஜினி - கமல் அரசியலை கஸ்தூரி எப்படி பார்க்கிறார்? அவர்கள் இருவரும் அரசியலில் இணைந்தால் எப்படி இருக்கும் என்ற கேள்விகளை "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக கஸ்தூரியிடமே முன்வைத்தோம்... அதற்கு அவர் சொன்ன பதில்கள்தான் இவை:
போராட்டம்
"கமல் அவர்களை பொறுத்தவரை அவர் அரசியலுக்கு வந்துட்டார்.. வந்ததில் இருந்து பல முயற்சிகளை அவர் செய்துட்டும் வர்றார்.. அவர் மேல எனக்கு ஒட்டுமொத்தமா மரியாதை இருக்கு.. ஆனா சில விஷயங்களில் அவர் ஈகோ பார்க்கிறாரோ அப்படின்னு எனக்கு தோணுது.. குறிப்பா சமீபத்திய செயல்பாடுகள்.. போலீசுக்கு ஒத்துழைக்கிறதே டார்ச்சர்-ன்னு சொன்னால், மக்கள் நலனுக்காக சிறை போவது, போராட்டத்தின்போது வெயில்ல உட்காருவது, இந்த மாதிரி தலைவர்களை பார்த்த தமிழ்நாட்டில், போலீஸ் கேள்வி கேட்கிறதையே டார்ச்சர்ன்னு நினைக்கிறது புதுவிதமான அரசியலா எனக்கு தெரியுது. அந்த ஒரு விஷயத்துல இருந்து மட்டும் நான் அவர்கிட்ட இருந்து வேறுபடறேன்.. மற்றபடி கமல் அவர்கள் ரொம்ப ரொம்ப அறிவாளி.. எல்லா விஷயத்திலயும் கருத்து சொல்லும்போது அதை பத்தி முழுசா தெரிஞ்சிக்கிட்டு சொல்லுவார்.. அந்த விஷயம் எனக்கு அவர்கிட்ட பிடிக்கும்.
பிரஸ்மீட்
ரஜினி அரசியலை பொறுத்தவரைக்கும், கொரோனா வைரஸே வந்துடுச்சு.. நான் என்ன சொல்ல வரேன்னு உங்களுக்கே புரிஞ்சிருக்கும் (சிரிக்கிறார்)... ரொம்ப ரொம்ப இழுத்தடிக்கிறார்... இப்போகூட அவர் பிரஸ்மீட் வெச்சப்ப வரப்போறார்ன்னுதான் நினைச்சோம், ஆனால் நான் வரமாட்டேன்.. எனக்கு ஆசையில்லைன்னு சொல்லிட்டாரு.. அவருடைய ஆசை முக்கியமில்லை.. அவரை பின்தொடர்பவர்களின் ஆசைதான் முக்கியம்.. இன்னும் கூட யோசிச்சிட்டே இருக்கார்ன்னா எப்படி?
வித்தியாசம்
இப்ப பாருங்க கொரோனா வைரஸ் நேரத்துல... எங்களுடைய சினிமா உலகத்துல நாங்களுமே தினக்கூலிகள் நிறைய பேர் இருக்கோம்.. எனக்கும்கூட தெலுங்கு சீரியல்ல தினசரி சம்பளம்தான்.. இதில வேலை செய்யக்கூடிய லைட் மேன், டச்சப் பாய் என டெக்னிக்கல் குழு இருக்கிறார்கள்.. நிறைய தொழிலாளர்களும் இருக்கிறார்கள்.. அவங்களுக்கும் தினக்கூலிதான்.. என்ன ஒரு வித்தியாசம், எனக்கு தினசரி சம்பளம் அவங்களைவிட கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான்.
1000 மூட்டை அரிசி
இந்த தினசரி சம்பளம் இல்லாமல், பல நாட்கள் வீட்டில் உட்கார்ந்திருந்தா ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் கஷ்டம்.. இதை ஆர்கே செல்வமணி அவர்கள் 1000 மூட்டை அரிசி தேவைப்படுதுன்னு சொன்னப்போ எடுத்து சொல்லும்போது, ரஜினி அவர்கள், சூர்யா, கார்த்தி சிவக்குமார் அவர்கள், சிவகார்த்திகேயன், ஜீவா உட்பட உடனடியாக எல்லாருமே பெரிய அளவில் உதவி செய்தார்கள்.. ரஜினி அவர்கள் 50 லட்சம் உடனே தந்தாரே.. அந்த ஒரு நல்ல மனசு இருக்கே.. உதவும் மனப்பான்மை அவரிடம் இருக்கத்தானே செய்யுது.
அரசியல்
அப்படி இருக்கும்போதே தாமதப்படுத்தாமல் நேரிடையாவே வந்துடலாமே... சினிமாவுக்கு எப்படி உடனே உதவி செய்கிறாரோ, அதையே அரசியலிலும் செய்யலாமே.. ரஜினி பேரை சொல்லி எத்தனையோ ரஜினி ரசிகர்கள் உதவிகளை செய்துட்டு வருகிறார்கள். இதையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரு இயக்கமாக மாத்தலாமே? ஆனால் ஏன் யோசிக்கிறார்? அவருக்கு மனசில் என்ன இருக்கு, எதுக்காக தயங்குகிறார் என்று எனக்கு புரியவே இல்லை.
வைரஸ்
கமல் - ரஜினி இணைந்து அரசியல் பணியாற்றினால் ரொம்ப நல்லாயிருக்கும்.. தமிழக மக்களுக்கு நல்லது நடக்கணும்னுதா 2 பேரும் நினைக்கிறாங்க.. இந்த விஷயத்தில் 2 பேரும் ஒன்றுபடறாங்க.. தமிழக மக்களுக்கு ஒரு நல்லதுன்னா, இங்க இருக்கிற எல்லா கட்சிகளும் இணைந்து பணியாற்றினால் அது இன்னும் நல்லாவே இருக்கும்... இன்னைக்கு சாதி, மத வேறுபாடு, ஆண், பெண், வேறுபாடு, ஏழை பணக்காரன் வேறுபாடு, இப்படி எந்த வேறுபாடுமே இல்லாமல் ஒரு வைரஸ் வந்து தமிழ்நாட்டை இணைச்சிருச்சு.
ஒற்றுமை
கட்சி பேதமே இல்லாமல் எல்லாரும் அதுக்காக உழைக்கிறாங்க... பிரதமர் மோடி ஒரு திட்டம் அறிவித்தால், அதற்கு மம்தா பானர்ஜி உடனே ஆதரவு தர்றாங்க.. இங்கே ஸ்டாலின் அவர்கள் அதற்கு ஆதரவு குடுக்கிறார்.. இந்த மாதிரி மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி எல்லாருமே ஒன்றிணைந்தால், இதைவிட வேறு என்னங்க நமக்கு வேணும்.. வேறு என்ன நமக்கு தேவை இருக்க போகுது?" என்றார்.