சித்திரையில் கட்சி பெயரை அறிவிக்கிறாரா ரஜினிகாந்த்..? முன்னேற்பாடுகள் தீவிரம்
சென்னை: ரஜினிகாந்த் தாம் தொடங்க உள்ள அரசியல் கட்சியின் பெயரை வரும் சித்திரை மாதம் அறிவிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி பெயரை அறிவிப்பதற்கான முன்னேற்பாடுகளில் அவர் தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியிருப்பதாகவும், அதன் காரணமாகவே தமிழருவி மணியன் உள்ளிட்டோருடன் அண்மையில் ஆலோசனை மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இவற்றின் எதிரொலியாகவே தர்பார் பட விழாவில் ரசிகர்கள் தம் மீது வைத்துள்ள நம்பிக்கை வீண்போகாது என அவர் பேசியதற்கு காரணம் கூறப்படுகிறது.
வெங்காயம் தானே என நினைக்காதீர்கள்... அது ஆட்சிக்கே முடிவுரை எழுதிவிடும் -மு.க.ஸ்டாலின்
ரசிகர்கள் கொண்டாட்டம்
கடந்த கால் நூற்றாண்டுகளாக ரஜினியின் அரசியல் வருகை குறித்து பல்வேறு யூகங்களும்,கேள்விகளும் எழுந்த நிலையில் 2017-ம் ஆண்டு மே மாதம் ''போர் வரும் போது பார்த்துக்கொள்வோம்'' எனப் பேசி பொறிபற்ற வைத்தார் ரஜினி. இதையடுத்து உற்சாகமடைந்த ரஜினியின் ரசிகர்கள் அவரது பேச்சை கொண்டாடி தீர்த்தனர்.
சட்டமன்றமே குறி
இதனிடையே சட்டமன்றத் தேர்தலே தமது இலக்கு என்றும், நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனவும் இந்த ஆண்டு பிப்ரவரியில் அறிவித்தார் ரஜினி. மேலும், தனது பெயரையோ, படத்தையும் எந்தக் கட்சியினரும் பயன்படுத்தக் கூடாது என கூறியிருந்தார். இப்போதும், அதாவது உள்ளாட்சித் தேர்தலுக்கும் அதே போன்ற அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார் ரஜினி.
போயஸ் கார்டனில் சந்திப்பு
இந்நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் தமிழருவி மணியன் உள்ளிட்ட சில முக்கிய பிரமுகர்களுடன் அண்மையில் ரஜினிகாந்த் நீண்ட நேரம் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. அப்போது, கட்சியின் பெயரை அறிவிப்பது, அரசியல் கட்சி எப்போது தொடங்குவது என்பன பற்றியெல்லாம் விவாதித்தாக தெரிவிக்கப்படுகிறது.
ரஜினி கட்சி
அதன்படி வரும் 2020-ம் ஆண்டு சித்திரையில் கட்சியின் பெயரை அறிவித்து அதன் பின்னர் கட்சியை தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இப்போது ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் அமைப்பு இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.