தமிழகத்தில் பாஜக கடைசியாக நம்புவது ரஜினியை மட்டுமே..பொசுக்குனு பொளேர் விட்ட இயக்குநர் அமீர்
சென்னை: தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடைசியாக நம்புவது நடிகர் ரஜினிகாந்தை மட்டும்தான். அதனால் நடிகர் விஜய்யை கண்டு அக்கட்சி அச்சப்படுகிறது என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.
தந்தி டிவிக்கு இயக்குநர் அமீ அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
நடிகர் விஜய்யை பாஜக ஒருபோதும் தமது ஆதரவாளராக நம்பாது. நடிகர் விஜய்க்கு இருக்கும் மக்கள் செல்வாக்குதான் இதற்கு காரணம். அவருக்கு இருக்கும் மக்கள் செல்வாக்கால்தான் பாஜகவுக்கு பயமே ஏற்படுகிறது.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்துவிட்டால் நம்முடைய திட்டம் தவிடுபொடியாகுமோ என்கிற அச்சம். இதில் வேறு என்ன இருக்க முடியும்? நடிகர் விஜய் ஒருவேளை பாஜகவுக்கு ஆதரவாக மாறிவிட்டால் வருமானவரித்துறை ரெய்டு உள்ளிட்டவை மாறும். இப்ப பேசுகிற வாய்கள் அப்போது மாற்றிப் பேசும்.
அன்று பாஜகவின் தூய்மை இந்தியா திட்ட தூதராக கமல்ஹாசன் நியமிக்கப்பட்டார். ஆனால் கமல்ஹாசன் தனிக்கட்சி தொடங்கிய உடனே அவரை பாஜக விமர்சிக்கிறது. இப்போது கமல்ஹாசனை எவ்வளவு கேவலமாக பேசுகிறார்கள் என்பதை பார்க்கிறோம். பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி, கமல்ஹாசனை முட்டாள் என கூறுகிறார்.
தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கடைசியாக நம்புவது ரஜினிகாந்தை மட்டும்தான். அதனால் அவரை பெருமைப்படுத்த கமல்ஹாசன், விஜய் போன்றவர்களை சிறுமைப்படுத்துகிறது பாஜக. பாஜகவால் வாக்குகளை பெற முடியாது என்பதால் ரஜினிகாந்தை தூக்கிப் பிடிக்கிறார்கள் என்பது உண்மையானால், ரஜினியை எதிர்க்க விஜய்யை சில அமைப்புகள் தூக்கிப் பிடிக்கின்றன என்பதும் உண்மை.
இவ்வாறு அமீர் கூறியுள்ளார்.