சீமானுக்கு டக்குன்னு போனை போட்ட ரஜினி.. அப்படியே கரைஞ்சு போயிட்டாராமே.. என்னாச்சு.. இதுதான் விஷயமாம்
சீமானிடம் உடல்நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்
சென்னை: "ஈஸ்வரா.. வானும் மண்ணும் ஹேன்ட் ஷேக் பண்ணுது உன்னால் ஈஸ்வரா" என்ற பாடல்தான் நினைவுக்கு வருகிறது.. சீமானுக்கு ரஜினி போனை போட்டு, நலம் விசாரித்தாராம்.. உடம்பை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க.. என்று சீமானுக்கு ரஜினி அட்வைசும் தந்தாராம்.. இப்படி உறுதிப்படுத்தப்படாத செய்தி ஒன்று கசிந்து பரபரப்பை கிளப்பி வருகிறது.
ரஜினி அரசியலுக்கு அதிகபட்சமான எதிர்ப்பை ஆரம்பத்தில் இருந்தே பதிவு செய்து வந்தது சீமான்தான்.. இதற்கு காரணம் அவர் மீது தனிப்பட்ட விருப்பு - வெறுப்பு கிடையாது.. தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆளவேண்டும் என்ற சிம்பிள் லாஜிக்தான்!! ரஜினி அரசியல் வருகை என்றாலே டென்ஷன் ஆகிவிடுவார் சீமான்.
இதுகுறித்து எத்தனையோ முறை பலவாறான விமர்சனங்களையும், கருத்துக்களையும் தனக்கே உரித்தான பாணியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். "எப்பதான் வாயை திறப்பார் ரஜினி? தான் என்ன பேசினாலும் செய்தியாகும் என்ற ஊடக வெளிச்சத்தில் அரசியல் நடத்தும் ரஜினிகாந்த் எனும் வெற்று பிம்பம் தூள் தூளாகும்" என்பது போன்ற ஆவேச பதிவுகளை ட்விட்டரிலும் பதிவிட்டபடியே வந்தவர்.
மோதல் போக்கு
இந்நிலையில், ஒருசில மாதங்களாகவே ரஜினியுடன் மோதல் போக்கு சீமானுக்கு குறைந்துள்ளது.. ஒரு நிகழ்ச்சியில் சீமான் பேசும்போது "ரஜினிகாந்த்துடன் நாம் முரண்படறோம் என்றால் அது அரசியலோட.. அவரோட கருத்தோட மட்டும்தான். ரஜினிகாந்த் மீது எனக்கு நிறைய மரியாதை உண்டு.. அவர் படங்களை ரசிப்பேன்.
கல்யாண பத்திரிகை
என் கல்யாணத்துக்கு எத்தனையோ பேருக்கு அழைப்பு தந்தேன்.. பலர் வரல.. ஆனா என் தம்பி தமிழ்க்குமரன்தான் போய் அவருக்கு அழைப்பிதழ் தந்துட்டு வந்தான். நான்கூட கொண்டு போய் பத்திரிகை தரல.. ஆனா அவர் தன் கைப்பட வாழ்த்து எழுதி ரஜினிகாந்த்-ன்னு கையெழுத்து போட்டு தந்தார், அது இன்னமும் என்கிட்ட இருக்கு. அவர் மேல மதிப்பு உண்டு, ஆனால், அவர் மண்ணில், மராட்டியத்தில், கர்நாடகத்தில் போய் கட்சி ஆரம்பித்தால், அவரை வாழ்த்தி நான் போய் பேசுவேன். அப்படி வாழ்த்தும்போது என்னை மாதிரி யாரும் பேச முடியாது. ஆனால், என் நிலத்தில் மானத்தமிழ் மண்ணை ஆள மராட்டியர் நினைப்பது மிகப்பெரிய தவறு! என்றார்.
கருத்துக்கள்
கிட்டத்தட்ட இந்த பேச்சுக்கு பிறகு ரஜினி மீதான காட்டம், சீமான் தரப்புக்கு குறைந்தது என்றே சொல்லலாம்.. ரஜினி பற்றி தவறாக சோஷியல் மீடியாவில் பதிவிட வேண்டாம் என்று சீமான் அறிவுறுத்தவும், அதன்படியே பின்பற்றவும் ஆரம்பித்தனர் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள்.. 3 நாளைக்கு முன்புகூட, "அரசியல் எதுக்கு? இமயமலைக்கு போலாம்-பேரன் பேத்திகன்னு விளையாடலாமே?" என்று கரிசனமாக சொன்னதுடன், வேறு ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பேன் என ரஜினி கூறியதிலிருந்து அவர் மீதான முரண் நீங்கியது என்று சீமான் தெரிவித்திருந்தார்.
அட்வைஸ்
இப்படி சுமூக, சமாதான சூழல் நடந்து வரும் சூழலில்தான், சீமானுக்கு ரஜினி போன் செய்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.. இவர்கள் ஏன் திடீரென நட்பு பாராட்டிக் கொள்ள வேண்டும்? அக்கறை காட்டி கொள்ள வேண்டும்? இதற்கெல்லாம் என்ன காரணம்? என்பதை அறிய முயற்சிக்கும்போதுதான், ரஜினி சீமானுக்கு போன் செய்துள்ளதே இந்த மன மாற்றத்துக்கு காரணம் என்கிறார்கள்.
விசாரணை
கடந்த வாரம் சீமானுக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.. அதனால் வடபழனியில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.. பிறகு சிகிச்சை முடிந்து வீட்டுக்கும் திரும்பி விட்டார்.. அப்போதுதான் சீமானுக்கு ரஜினி போன் செய்து, உடல்நலம் குறித்து விசாரித்திருக்கிறார்.
வரவேற்கத்தது
வழக்கமாகவே ரஜினி எல்லாருடைய உடல்நலனிலும் அக்கறை காட்டுபவர்.. தன்னுடைய முதல் ரசிகர் முத்துமணியையும் இப்படித்தான் போன் செய்து விசாரித்தார்.. அந்த வகையில், சீமானையும் விசாரித்துள்ளது ஆச்சரியமில்லை.. அப்போது சீமானிடம் உடம்பை நன்றாக கவனித்து கொள்ளுமாறு அறிவுறுத்தியதாக தெரிகிறது.. அதுமட்டுமல்ல, கட்சியின் தற்போதைய செயல்பாடுகள் உள்ளிட்ட பல விஷயங்களை இரு தரப்பும் பேசியதாகவும் கூறப்படுகிறது.. ஆக மொத்தம் இரு தரப்பிலும், வன்மம் குறைந்து, நேசம் பூத்துள்ளது வரவேற்கத்தக்கதே!