இதையெல்லாம் அரசியலாக்குவதா? அரசியல்வாதிகளே... உங்களுக்கான ரஜினிகாந்த் அட்வைஸ் இது!
சென்னை: தமிழக அரசியல்வாதிகளுக்கு எதை அரசியலாக்குவது என தெரியவில்லை என நடிகர் ரஜினிகாந்த் விமர்சித்துள்ளார்.
சென்னையில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினிகாந்த், மோடி- அமித்ஷாவை கிருஷ்ணன் - அர்ஜூனனுடன் ஒப்பிட்டுப் பேசினார். இது பெரும் சர்ச்சையானது.
ரஜினிகாந்த் கருத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக இன்று இரவு திடீரென செய்தியாளர்களை ரஜினிகாந்த் சந்தித்தார். இச்சந்திப்பில் ரஜினிகாந்த் கூறியதாவது:
ஜம்மு காஷ்மீர் பயங்கரவதிகளின் புகலிடமாக இருக்கிறது. அதனால் ராஜதந்திரமாக இந்த விவகாரத்தை பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் கையாண்டனர்.
முதலில் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பித்தனர். மக்களுக்கு எந்த பிரச்சனையும் வராதபடி பார்த்துக் கொண்டனர். அதன்பின்னர் அந்த மசோதாவை மெஜாரிட்டி இல்லாதபோதும் ராஜ்யசபாவில் தாக்கல் செய்தனர்.
பின்னர் லோக்சபாவிலும் நிறைவேற்றினர். நாட்டின் பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் காஷ்மீர் விவகாரம் தொடர்பான நடவடிக்கையை பாராட்டினேன்.
எதை அரசியலாக்க வேண்டும் எதை அரசியலாக்கக் கூடாது என்பதை மதிப்பிற்குரிய அரசியல்வாதிகள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ் திரைப்படங்களுக்கு இம்முறை தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேட்டியளித்தார்.
ரஜினிகாந்த் சீரியசாக இந்த பேட்டியை அளித்துவிட்டு உள்ளே சென்ற போதும் கூட, 'தலைவா' என்கிற ரசிகர்கள் குரல் எதிரொலித்தது.