புதிய அறிவிப்பு வருமா? ரஜினிகாந்த் சென்னையில் மீண்டும் ஆலோசனை.. முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு
சென்னை: புதிய கட்சி ஆரம்பிக்க உள்ள நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கடந்த நவம்பர் 30 ஆம் தேதி ராகவேந்திரா மண்டபத்தில் கட்சி தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினி விரைவில் கட்சி தொடங்குவது குறித்து நல்ல முடிவை அறிவிப்பதாக அறிவித்தார்.
இதன்படி ஜனவரியில் கட்சி தொடங்கப்போவதாகவும், டிசம்பரில் கட்சி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்றும் ரஜினி டுவிட்டரில் கடந்த டிசம்பர் 3ம் தேதி அறிவித்தார்.
அற்புதம் நிகழும்
அவர் தனது ட்வீட் பதிவில், வரப்போகிற சட்ட மன்றத் தேர்தலில், மக்களுடைய பேராதரவுடன் வெற்றிப் பெற்று, தமிழகத்தில் நேர்மையான, நாணயமான, வெளிப்படையான, ஊழலற்ற, ஜாதி மதச் சார்பற்ற ஆன்மீக அரசியல் உருவாகுவது நிச்சயம். அற்புதம்.. அதிசயம் .. நிகழும்!!!" என்று கூறினார்
ரஜினிகாந்த் பேட்டி
பின்னர் போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் விளக்கமாக பேசிய ரஜினிகாந்த், "2017 டிசம்பர் 31 அன்று சட்டமன்றத்தேர்தலுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்து மக்களை சந்தித்து போட்டியிடுவேன் என்று கூறினேன், ஆனால், அதை என்னால் செய்ய முடியவில்லை. எனக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மக்களை சந்திக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், மருத்துவர்கள் கொரோனா தொற்றால் வெளியே செல்வது ஆபத்து என்றார்கள். தமிழக மக்களுக்காக என் உயிரே போனாலும் பரவாயில்லை. சந்தோஷம்தான். அன்று சொன்னதுதான் இன்றும் சொல்கிறேன். கொடுத்த வாக்கில் தவறமாட்டேன். தற்போது அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம் கட்டாயம்.
தலையெழுத்து மாறும்
நான் ஏற்கெனவே உயிருக்கு போராடியபோது தமிழக மக்கள் செய்த பிரார்த்தனையால் உயிர் பிழைத்து வந்தேன். நான் வெற்றி பெற்றாலும் அது மக்களின் வெற்றி. நான் தோல்வி அடைந்தாலும் மக்களின் தோல்வி. இப்போ இல்லைன்னா எப்பவும் இல்லை. மாத்துவோம். எல்லாத்தையும் மாத்துவோம்.
தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றும் நாள் வந்துவிட்டது. ஆட்சி மாற்றம் நடக்கும். அரசியல் மாற்றம் நடக்கும். மாத்துவோம், எல்லாத்தையும் மாத்துவோம்" என்று உணர்ச்சி பூர்வமாக பேசினார்
மீண்டும் ஆலோசனை
இந்நிலையில் 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பதாக ரஜினிகாந்த் அறிவித்துவிட்டதால் அது தொடர்பாக மன்ற நிர்வாகிகளை அழைத்து அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினிகாந்த் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழருவி மணியன், அர்ஜூன மூர்த்தி மற்றும் மன்ற நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.