"ஊழல் கட்சிகள்" திமுக, அதிமுகவை பச்சையாகவே சொல்லி.. ரசிகர்களுக்கு கொம்பு சீவி விட்ட ரஜினி!
அதிமுக, திமுக கட்சிகளை நேரடியாக விமர்சித்தார் ரஜினிகாந்த்
சென்னை: ரஜினிகாந்த் பேசும்போது, திமுக - அதிமுகவை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கிழித்து தொங்கவிட்டு பேசிவிட்டார்.. அசுர பலத்துடன் இருக்கும் இரு ஜாம்பவான்களை நாம் எதிர்க்கப் போகிறோம் என்று மன்ற நிர்வாகிகளையும், ரசிகர்களையும் கொம்பு சீவி விட்டும் போயுள்ளார்!
Recommended Video
ரஜினிகாந்தின் அரசியல் வருகை ஆரம்பமாகி உள்ளது.. அவரது பேச்சில் முக்கியமாக தென்பட்டது அதிமுக-திமுக என்ற இரு கட்சிகளும்தான்!
இந்த இரு திராவிட கட்சிகள் இருக்கும்வரை தன்னால் எதுவுமே செய்ய முடியாது என்பதுதான் அவரது பேச்சின் மொத்த வெளிப்பாடும்.. இதற்காக இரு கட்சிகளையும் விமர்சிக்கவும் ரஜினிகாந்த் தயங்கவில்லை.
ரஜினிகாந்த்
முதலாவதாக, "அண்ணா பல தலைவர்களை உருவாக்கியதாக ரஜினி சொல்கிறார்.. அண்ணாவின் அரசியல் வாழ்வை ரஜினிகாந்த் படித்து தெரிந்து வைத்திருப்பது நல்ல விஷயம்தான்.. அப்படியானால் அண்ணா உருவாக்கிய தலைவர்கள் யாருமே இல்லையா? அண்ணாவுக்கு பிறகு எந்த தலைவரும் தமிழகத்தில் சிறந்து விளங்கவில்லையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஜெயலலிதா
குறிப்பாக எம்ஜிஆர் பற்றின பேச்சையே பெரிசா காணோம்.. அவர் உருவாக்கிய ஜெயலலிதா நல்ல தலைவர் இல்லையா என்ற பொதுவான கேள்வி நம் எல்லாருக்குமே எழுந்துள்ளது.. அதேபோல கருணாநிதி உருவாக்கிய வைகோ நல்ல தலைவர் இல்லையா? அல்லது கருணாநிதி எதையும் செய்யவில்லை என்று சொல்ல வருகிறாரா? என்றும் புரியவில்லை.
கருணாநிதி
அதிமுக, திமுகவை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக மறைந்த தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் குறைத்து மதிப்பிடுவது எந்த விதத்தில் நியாயம்? அண்ணாவுக்கு பிறகு யாருமே சரியில்லை என்றால், நல்ல தலைமை, நல்ல நிர்வாகம் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதை கருணாநிதி யாருக்குமே கற்றுக் கொடுக்கவில்லை என்கிறாரா?
கட்சி
கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத சமயம்தான் சரியான சமயம் என்று பச்சையாகவே சொல்கிறார்... அப்படியானால் இவருக்கு போட்டி அவர்கள் இருவரும்தான் என்று சொல்கிறாரா.. ஒருவேளை அவர்கள் 2 பேரும்தான் குறி என்றால், அவங்க 2 பேரும் மறைந்து இத்தனை நாள் ஏன் ஒதுங்கி இருந்தார்? ஏன் 2 வருடமாக கட்சியை ஆரம்பிக்கவில்லை? அவர்கள் இருவரும் இல்லாவிட்டால்தான் தனக்கு தைரியம் வரும் என்று ஒப்புதல் தருவதை போலவே ரஜினியின் பேச்சுக்கள் உள்ளன.
திமுக
இது எல்லாவற்றிற்கும் மேலாக "தன்னை நிரூபிக்க வேண்டிய வாழ்வா சாவா நிர்ப்பந்தத்தில் இருக்கிறார் மு.க.ஸ்டாலின்" என்று நேரடியாகவே அவர் மீது பாய்ந்துள்ளார்.. எதற்காக இந்த குறி என்று தெரியவில்லை.. ஆனால் இவ்வளவு காலம் பொதுவாழ்வில் இருந்து.. மிசா முதல் மேயர், பொருளாளர், தலைவர் வரை உயர்ந்துள்ள ஒரு கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்துள்ளார் இன்னும் கட்சியே தொடங்காத ரஜினிகாந்த்!
ரஜினிகாந்த்
"திமுகவுக்கு 30% வாக்குகள் கிடைத்தால் கலைஞருக்காக 70% வாக்குகள் கிடைத்தது... அதிமுகவிலும் அப்படிதான்... 70% வாக்குகள் ஜெயலலிதாவுக்காகக் கிடைத்தது" என்கிறார் ரஜினி.. அப்படியானால் எம்பி தேர்தலில் 39 பேர் டெல்லிக்கு போனார்களே.. கலைஞரே இல்லாத சமயத்தில் இது மட்டும் எப்படி சாத்தியமாயிற்று? வேலூர் முதல் இடைத்தேர்தல்வரை முந்தி கொண்டு முதலில் நின்றதே அதிமுக... ஜெயலலிதா இல்லாமல் இது எப்படி சாத்தியமாயிற்று? என்பது ரஜினிகாந்துக்குதான் வெளிச்சம்!
ஜாம்பவான்கள்
"ஊழல் செய்கிறார்கள்... பதவியை அனுபவிக்கிறார்கள்.. வாரிசுகளை உருவாக்குகிறார்கள்.. ஆட்சிக்கு வந்தபின் ஆளும் கட்சி என்று கூறியபடி முறைகேடுகளை செய்வார்கள்" என்று பாயின்ட் பாயின்ட்டாக சொல்லி, "அசுர பலத்துடன் இருக்கும் இரு ஜாம்பவான்களை நாம் எதிர்க்கப் போகிறோம்" என்று ரசிகர்களை யும் உசுப்பேத்திவிட்டு சென்றுள்ளார்.
புரட்சி.. மாற்றம்
இவர்கள் 2 பேரையும் வீழ்த்தினால் மட்டுமே தனக்கு அரசியல் வாழ்க்கை என்று ரஜினிக்கு புரிந்துவிட்டது மட்டுமல்ல.. அவர்களை கண்டு நடுங்கவும் செய்கிறார் என்பதுதான் நமக்கு தெரியவருகிறது. இரு திராவிட கட்சிகள் இருக்கும்வரை தன்னால் இப்படியே மீட்டிங் மட்டும் உசுப்பேத்தி கொண்டே இருந்தால்தான் உண்டு.. அதனால்தான் புரட்சி என்கிறார்.. அலை என்கிறார்.. மாற்றம் என்கிறார்!