அந்த கடிதம் பொய் ஆனால் அதிலிருக்கும் தகவல்கள் உண்மை: ரஜினி சொல்ல வருவது என்ன?
சென்னை: தான் வெளியிட்டதாக ஒரு கடிதம் பரவிய நிலையில் அந்த கடிதம் பொய் என்று மறுத்துள்ள ரஜினிகாந்த் அந்த கடிதத்தில் வரும் தனது உடல் நிலை மற்றும் மருத்துவர்கள் கொடுத்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று கூறியுள்ளார். இதன் மூலம் ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருப்பதாக கருதப்படுகிறது.
ரஜினி காந்த் பெயரில் சமூக வலைதளத்தில் ஒரு கடிதம் படுவேகமாக காலை முதலே பரவ தொடங்கியது. அந்த கடிதத்தில் "மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன்.
இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அதிர வைத்த ரஜினி லெட்டர்... மறுப்பு வெளியிட்ட சூப்பர் ஸ்டார்.. பின்னணியில் யார்.. "அவங்களா"??!
அரசியல் வேண்டாம்
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு "தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்.
ஜனவரி 15ம் தேதி
நான் கட்சி ஆரம்பிப்பதாக இருந்தால் அதை எதிர்வரும் ஜனவரி மாதம் 15-ம் தேதிக்குள் ஆரம்பிக்க வேண்டும். அதற்கான முடிவை டிசம்பர் மாதத்திலேயே அறிவிக்க வேண்டும். இது தீர்க்கமாக யோசித்து, தீர ஆராய்ந்து எடுக்கப்பட வேண்டிய முடிவு" என்பதாக நீண்ட படிஇருந்தது.
கடித தகவல் உண்மை
இந்த கடிதம் குறித்து கருத்து தெரிவித்த ரஜினி, என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" இவ்வாறு கூறினார்.
தகுந்த நேரம் எது
ரஜினி தனது ட்வீட்டில் அந்த கடிதம் பொய், அந்த கடிதத்தில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் அவரது அரசியல் நிலைப்பாடு என்பது கட்சி ஆரம்பிப்பபது இல்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக பல அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள். ரஜினி வந்தால் எல்லாம் மாறும் என்று நினைத்தவர்களுக்கு இந்த ட்வீட் ஏமாற்றதை தந்துள்ளது என்பது உண்மை. ரஜினி ட்வீட்டில் சொன்னபடி இதை அறிவிக்க தகுந்த நேரம் எது என்பது தான் இப்போதைய கேள்வி.