ஒன்னு இல்ல, 2 இல்ல.. ஒரு நாளைக்கு 20 மாத்திரை போடுறேன்.. மக்கள் மன்றத்தினரிடம் ரஜினிகாந்த் உருக்கம்?
சென்னை: சிறுநீரக பிரச்சினை உள்பட பல்வேறு காரணங்களுக்காக ஒரு நாளைக்கு 20 மாத்திரைகளை நான் உட்கொள்ள வேண்டியது உள்ளது என்றும் இந்த நேரத்தில் அரசியலுக்கு வந்து உடல்நிலை பாதிக்கப்பட்டால் என்ன செய்வது என்பது குறித்து ரஜினி, மன்ற நிர்வாகிகளிடம் உருக்கமாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ரஜினி சார்பில் வெளியிடப்பட்டதென்று கூறி ஒரு கடிதம் வெளியானது. அந்த கடிதத்தில் அண்மையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் கொரோனாவுக்கு மருந்து கண்டறியப்படாத நிலையில் தற்போது மக்களை தொடர்பு கொண்டால் அது உடல்நிலைக்கு பிரச்சினை என்றும் அதனால் தற்போதைக்கு அரசியல் பிரவேசத்தை தள்ளி வைக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் அதில் சொல்லப்பட்டிருந்தது.
நேற்று ரஜினிகாந்த்.. இன்று கமல்ஹாசன் பிரஸ்மீட்... என்ன சொல்வாரோ 'நம்மவர்'?
ரசிகர்கள்
இதனால் தான் அரசியலுக்கு வரவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் சோகமடைந்தனர். பின்னர் அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ள மருத்துவக் காரணங்கள் அனைத்தும் உண்மை, ஆனால் மற்ற கருத்துகள் என்னுடையது அல்ல என ரஜினிகாந்த் விளக்கம் அளித்திருந்தார்.
சட்டசபை தேர்தல்
இந்த நிலையில் 2021 -ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் நேற்று ரசிகர் மன்ற மாவட்ட நிர்வாகிகளை சந்தித்தார். அப்போது அவர்களுடன் அரசியல் பிரவேசம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மக்கள் மன்றத்தில் 15 சதவீதம் பேரின் செயல்பாடுகள்தான் திருப்தியாக இருக்கிறது.
ரஜினி
பலரது செயல்பாடுகளில் தனக்கு திருப்தி இல்லை என ரஜினி தெரிவித்தார். மேலும் பணம் சம்பாதிக்க நினைப்போர் தன்னுடன் இருக்க வேண்டாம் என்றும் தெரிவித்திருந்தார். தான் ஒரு நாளைக்கு 20 மாத்திரைகளை உட்கொள்வதாகவும் ரஜினி கூறியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அப்படியே கட்சியைத் தொடங்கி தேர்தல் பிரசாரம் செய்ய போகும் இடத்தில் கொரோனா வந்துவிட்டால் என்ன செய்வது என்றும் நிர்வாகிகளிடம் கேட்டதாக கூறப்படுகிறது.
ரஜினி கேள்வி
மேலும் பிரசாரத்துக்கு சென்று உடல் நிலை சரியில்லாவிட்டால் என்ன செய்வது என நிர்வாகிகளிடம் கேட்டுள்ளார். மேலும் 2017-ஆம் ஆண்டு அரசியலுக்கு வருவதாக ஏதோ உணர்ச்சிவசப்பட்டு பேசிவிட்டேன். தற்போது இரு கட்சிகள் வலுவாக உள்ள நிலையில் தாம் களமிறங்கினால் எத்தனை சதவீத வாக்குகள் கிடைக்கும் என ரஜினி கேள்வி எழுப்பியதாகவும் கூறப்படுகிறது.
ஒப்படைப்பாரா
இந்த கருத்துகள் எல்லாம் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் ரஜினி மாத்திரை குறித்தெல்லாம் பேசினாரா என உறுதிப்படத் தெரியவில்லை. ஆனால் இந்த கருத்துகளை அரசியல் விமர்சகர்களும் ஒரு தனியார் தொலைகாட்சி விவாதத்தில் விவாதித்தனர். எனவே உடல்நிலையை காரணம் காட்டி அரசியல் முடிவை ரஜினி கைவிடுவாரா அல்லது கட்சியை தொடங்கிவிட்டு அதை வேறு ஒருவரை நிர்வாகம் செய்யுமாறு ஒப்படைப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.