பண்ணை வீட்டுக்கு போக ரஜினிகாந்த் இ.பாஸ் வாங்கினாரா.. ஆய்வு செய்கிறோம்.. சென்னை மாநகராட்சி ஆணையர்!
கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்கு சென்ற ரஜினிகாந்த் இ பாஸ் வாங்கித்தான் கேளம்பாக்கம் பண்ணை வீட்டிற்குப் போனாரா என்று ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார்.
சென்னை: சென்னையில் இருந்து ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்து ஆய்வு செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் கோ. பிரகாஷ் கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் மாஸ்க் அணிந்து காரில் செல்லும் போட்டோ ஒன்று காலையில் வைரலானது. அவர் எங்கே போனார் என்று பலரும் கேட்டனர். அதற்கு விடை மாலையில் கிடைத்தது. போயஸ்கார்டன் பங்களாவில் பல மாதங்கள் தங்கியிருந்ததால் ஒரு மாற்றத்திற்காக கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் மகள், மருமகன், பேரனுடன் ஓய்வெடுக்க போயிருக்கிறார் ரஜினி. இதற்குத்தான் மாஸ்க் போட்டுக்கொண்டு காரில் போயிருக்கிறார்.
கேளம்பாக்கம் பண்ணை வீட்டில் ரஜினிகாந்த் அவ்வப்போது வாக்கிங் போகும் வீடியோவும் வைரலாகி வருகிறது. கேளம்பாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருக்கிறது. இப்போது ஒரு மாவட்டத்தில் இருந்து இன்னொரு மாவட்டத்திற்கு போக இ பாஸ் வாங்க வேண்டும். இது பற்றிய சர்ச்சையில் ரஜினிகாந்த் சிக்கியிருக்கிறார்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளர்கள், சென்னை போயஸ்கார்டனில் வசித்து வரும் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்று கேட்டனர்.
ஒரே ஒரு போட்டோவை போட்டு வைரல் ஆக்கிய ரஜினி - கேளம்பாக்கத்தில் இப்போ வாக்கிங்
அதற்கு பதில் அளித்துள்ள ஆணையர் பிரகாஷ், நடிகர் ரஜினிகாந்த் செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்திற்கு முறையான அனுமதி பெற்று சென்றாரா? என்பது குறித்தும், சென்னைக்கு மீண்டும் முறையான பாஸ் பெற்று வந்தாரா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என்று கூறியுள்ளார். சென்னைக்கு வர விரும்பும் நபர்கள் முறையான ஆவணங்களுடன் இ-பாஸ்க்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒரே ஒரு போட்டோவை போட்டு அதை சஸ்பென்ஸ் ஆக வைத்து மீண்டும் அதற்கு விளக்கம் தரும் வகையில் போட்டோ போட்டு இரண்டு நாட்களாக தன்னைப் பற்றியே விவாதிக்க வைத்தார் ரஜினிகாந்த். கந்த சஷ்டி கவச சர்ச்சைக்கு கந்தனுக்கு அரோகரா என்று சொல்லி ட்வீட் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினர். இந்த சூழ்நிலையில் அவர் இ பாஸ் வாங்கித்தான் பண்ணை வீட்டுக்குப் போனாரா என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது.