ரஜினிக்கு எதிராக மேலும் ஒரு புதிய வழக்கு.. விஸ்வரூபம் எடுக்கும் பெரியார் குறித்த சர்ச்சை!
சென்னை: தந்தை பெரியார் குறித்து அவதூறான கருத்துகளை பரப்பியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14ம் தேதி சென்னையில் நடைபெற்ற துக்ளக் இதழின் ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணி ஒன்றில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண உருவங்களை எடுத்துச்சென்றதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டிருந்ததாகவும் பேசினார்.
பெரியார் பற்றி பொய்யான தகவலை பரப்பி பெரியாரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதுடன், பொது அமைதியை குலைக்கும் வகையிலும் நடிகர் ரஜினிகாந்த் பேசி உள்ளதால், அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை கோரி கோவை காட்டூர் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலை கழகத்தின் கோவை மாவட்ட தலைவர் நேருதாஸ் புகார் அளித்திருந்தார்.
ராசிபுரம் சட்டசபை தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும்.. ஹைகோர்ட் தீர்ப்பு
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நேருதாஸ் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இதேபோல், ரஜினிகாந்த் மீது திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தொடர்ந்த வழக்கும் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.