சென்னை போயஸ் கார்டனில் ரஜினியின் வீட்டை நோக்கி வரும் ரசிகர்கள்.. திடீர் பரபரப்பு
சென்னை: ரஜினியை அரசியலுக்கு அழைக்கும் ரஜினி ரசிகர்கள், ஓட்டு போட்டால் தலைவர் ரஜினிக்குத்தான் என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அத்துடன் சென்னையில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போஸ்டரும் ஒட்டி வருகிறார்கள். இதேபோல் ரசிகர்கள் சிலர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். இப்படியான சூழலில் அரசியலுக்கு வருமாறு அழைத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை நோக்கி ரசிகர்கள் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நடிகர் ரஜினி காந்த் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தனது உடல் நிலை குறித்து குறிப்பிட்டதுடன், தனது அரசியல் நிலைப்பபாட்டை தகுந்த நேரத்தில் தெரிவிப்பதாக கூறினார்.
இதன் மூலம் நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், ஓட்டு போட்டால் தலைவர் ரஜினிக்குத்தான் என்ற ட்விட்டரில் டிரெண்ட் செய்து வருவதுடன். ரஜினியை அரசியலுக்கு வருமாறு போஸ்டர் அடித்து ஓட்டி அழைத்து வருகிறார்கள்.
எடப்பாடியாரும், ஸ்டாலினும் இப்படி சொல்லலியே.. அடிச்சாரு பாருங்க ரஜினிகாந்த் அந்தர் பல்டி.. தேவையா?
எல்லாம் மாறும்
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக உள்ள ரஜினிகாந்த் எப்போது அரசியலுக்கு வருவார் என்பது யாருக்கும் தெரியாத ஒன்றாக பல ஆண்டுகளாக இருக்கிறது. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழக அரசியல் நிலவரம் மாறும் என ரசிகர்களும், அவரது ஆதரவாளர்களும் தீவிரமாக நம்புகிறார்கள். இந்த சூழலில் அவர் அரசியலுக்கு வர வாய்ப்பில்லை என்பதை மெய்பிக்கும் வகையில் ரஜினி எழுதியாக ஒரு கடிதம் வெளியானது.
ரஜினிக்கு அறுவை சிகிச்சை
அந்த கடிதத்தில் "மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அரசியல் வேண்டாம்
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு "தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று ரஜினி கூறியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
தகவல் உண்மை
இந்த கடிதம் குறித்து மறுப்பு அறிக்கை வெளியிட்ட ரஜினிகாந்த், , "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்றார்.
உடல்நிலை சரியில்லை
ரஜினி காந்த் சொன்ன ட்வீட் படி, அவரது கடிதம் போலி என்றாலும் அதில் உள்ள மருத்துவர்கள் அறிவுரை உண்மை என்பது தெரியவந்துள்ளது. எனவே இனி ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது. அதைத்தான் அவர் நாசுக்காக ட்வீட்டில் சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது. அவர் அரசியலுக்கு வருவேன் என்பதை பற்றி நம்பிக்கை தரும் வகையில் ட்வீட் வெளியிடாததால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ரஜினி வீட்டில் ரசிகர்கள்
இந்த சூழலில் ஓட்டு போட்டால் தலைவர் ரஜினிக்குத்தான் என்று ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகிறார்கள். அத்துடன் சென்னையில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போஸ்டரும் ஒட்டி வருகிறார்கள். இதேபோல் ரசிகர்கள் சிலர் உண்ணாவிரதமும் இருந்து வருகிறார்கள். இப்படியான சூழலில் அரசியலுக்கு வருமாறு அழைத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டை நோக்கி ரசிகர்கள் வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.