ரஜினி ரசிகர்களுக்கு வேறு வழியே கிடையாது.. அதிமுகவுக்கு தான் ஓட்டு போடணும்.. சொல்றது யாருன்னு பாருங்க
சென்னை: லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த் கூறுவதை பார்க்கும் போது... அவரது ரசிகர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று அமைச்சர் மாபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் தமது மக்கள் மன்றம் போட்டியிடாது, யாருக்கும் ஆதரவில்லை என்று ரஜினிகாந்த் அறிவித்துவிட்டார். தமிழகத்தின் முக்கிய பிரச்சனை தண்ணீர் தட்டுப்பாடு, அதற்கு தீர்வு கொடுக்கும் கட்சியை மக்கள் ஆய்வு செய்து வாக்களிக்க வேண்டும் ரஜினி தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தில் புகைப்பட கண்காட்சியில் அமைச்சர் மாபா பாண்டியராஜன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது:ரஜினி தண்ணீர் கொடுக்கும் கட்சிக்கு வாக்களியுங்கள் என்று கூறியுள்ளார்.
தண்ணீர் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ள ஒரே கட்சி நாங்கள் தான். அதற்காக எடுத்துள்ள முயற்சிகளை அமைச்சர் வேலுமணி தெளிவாக சட்ட சபையில் கூறியுள்ளார்.
அவசரகால நடவடிக்கையாக நாங்கள் செய்கிற விஷயமாக இருக்கட்டும், நீண்டகால திட்டங்களுக்காக நாங்கள் செய்கிற விஷயங்கள், உதாரணத்திற்கு கடல்நீரை குடிநீராக்கும் திட்டமாகட்டும் ரொம்ப தெளிவாக நாங்கள் பதிலளித்துள்ளோம்.
ஆகவே ரஜினிகாந்த் அளித்த அறிக்கையின்படி ரஜினியின் ரசிகர்கள் இருந்தால் கண்டிப்பாக அதிமுக கூட்டணிக்குத்தான் வாக்களிப்பார்கள். அதைவிட வேறு வழியே இல்லை என்று அவர் கூறினார்.