இப்ப கூட "எழுச்சி" வரலையே... ரஜினி வீட்டை 10 பேர், 9 பேர் மட்டுமே எட்டிப் பார்க்கும் கொடுமை!
சென்னை: தமிழகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதற்காக வெறும் 10 பேர், 9 பேர் என விரல் விட்டு எண்ணக் கூடிய ரசிகர்கள்தான் அவரது சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு கூடி முழக்கமிடுவது பரிதாபமாக இருக்கிறது.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அவரது அறிக்கை மறைமுகமாக சுட்டி காட்டியிருக்கிறது. இதனால் அதிர்ந்து போயிருக்கும் பாஜக தரப்பு எப்படியாவது ரஜினிகாந்தை அரசியல் களத்துக்குள் கொண்டுவர படாதபாடு படுகிறது.
இதற்காகவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் குருமூர்த்தி ரஜினிகாந்தை சந்தித்து 2 மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இது ஒருபுறம் இருக்க ரஜினியின் அரசியலுக்கு வரப்போவதில்லை என்கிற முடிவு அவரது ரசிகர்களை மிக மோசமாக பாதித்திருக்கிறது என்றே தெரிகிறது.
ரஜினி மன்றங்கள் கலைப்பு
ரஜினிகாந்துக்காக இலவு காத்த கிளியாக காத்திருந்த பலரும் இனி நிச்சயம் தலைவர் அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை உணர்ந்து கொண்டவர்களாக இருக்கின்றனர். இதனால் ரஜினிகாந்த் ரசிகர் மன்றங்களை கலைத்துவிட்டு கட்சிகளில் கரைகிற அடுத்த வேலையில் பிசியாகிவிட்டனர்.
போயஸ் கார்டனில் முழக்கம்
ஆனாலும் ரஜினிகாந்த் மீது இன்னமும் ஏதோ ஒரு வகையில் நம்பிக்கை வைத்திருக்கும் வெகுசில ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். இவர்கள் 10 பேர், 9 பேர் என அவ்வப்போது ரஜினிகாந்தின் சென்னை போயஸ் கார்டன் வீடு முன்பு கூடி முழக்கம் எழுப்பிவிட்டு கலைந்து போகின்றனர்.
ரசிகர்கள் எங்கே?
கட்சியை தொடங்கி ஆட்சியை பிடித்து எம்ஜிஆர் போல நல்லாட்சி தருவேன் என்றெல்லாம் முழங்கியவர் ரஜினிகாந்த். அவர் இப்போது அரசியலுக்கு வராமல் விலகிச் செல்கிறார். அவரை அரசியலுக்கு வர வைக்க கூடிய சக்தி கொண்ட ஆத்மார்த்த ரசிகர்கள் எங்கே போனார்கள்? இப்படியா 10 பேர், 9 பேர் என் விரல் விட்டு எண்ணுகிற நிலைமைக்கு ரஜினியின் ரசிகர் பட்டாளம் போய்விட்டது? என்பது பலரது கேள்வி.
ரஜினியிடம் ரசிகர்கள் பட்டாளம் இல்லையா?
அதேபோல் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர் மன்றங்களின் பெயர்களால் போஸ்டர் ஒட்டியவர்கள் இப்போது பொத்தாம் பொதுவாக தமிழக மக்கள் என போஸ்டர் அடிக்கின்றனர். ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் என்பதை உச்சரிக்கக் கூடவா? அவரது ரசிகர் பட்டாளம் தயங்கி கிடக்கிறது. அல்லது ரஜினிகாந்தின் இத்தகைய தடுமாற்றங்களால் அவரை விட்டு விலகியே போய்விட்டார்களா ரசிகர்கள் பெருங்கூட்டம்.
விடுகதையா இந்த வாழ்க்கை?