வைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டாரா ரஜினிகாந்த்? அரசியலில் செம ட்விஸ்ட்.. இணைந்த துருவங்கள்
Recommended Video
சென்னை: வைக்க கூடாத இடத்தில் கை வைத்து விட்டாரா நடிகர் ரஜினிகாந்த்? என்று கேட்கிறார்கள் அவரது ரசிகர்கள். காரணம் இல்லாமல் இல்லை.
தமிழக திராவிட அரசியலின் மையப்புள்ளியான, பெரியார் பற்றி உண்மைக்குப் புறம்பான ஒரு தகவலை அவர் சொல்லிவிட்டார் என்று திராவிட இயக்கங்களும், சொல்லப்போனால் பெரிய கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரண்டு ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுதான் இதற்கு காரணம்.
1967 க்கு பிறகு திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகள்தான், தமிழகத்தில் மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன.
அப்போ.. துக்ளக் அடுத்த இதழ் 'சேல்ஸ்' பிச்சிக்குமோ.. குருமூர்த்தி வெளியிட்ட ஒரு 'முக்கிய' அறிவிப்பு
இரு கட்சிகள்
என்னதான், மாற்றம் கொண்டு வருவோம்.., முன்னேற்றம் ஏற்படுத்துகிறோம் என்று சொல்லிக்கொண்டு, புதிதுபுதிதாக கட்சிகள் முளைத்தாலும், ஒரு கட்டத்தில் அவர்களால் தாக்குப்பிடிக்க முடியாமல் இந்த இரு திராவிட கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி வைத்துக் கொண்டுதான் தேர்தலை சந்திக்க வேண்டியுள்ளது. திராவிட கட்சிகள்தான் தமிழ் நாட்டை அழித்து விட்டன என்று கூறிக்கொண்டு, போன தேர்தலில் மூன்றாம் அணி அமைத்தவர்கள் கூட, அடுத்த தேர்தலிலேயே, ஒரு திராவிட கட்சியுடன் தான் கூட்டணி வைத்துள்ளனர்.
பெரியார்
இப்படிப்பட்ட இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கும் விதை ஒன்றுதான். அதை தூவியது பெரியார். திராவிடர் கழகம் என்ற அமைப்பில் இருந்து அரசியல், கட்சியாக திமுக உருவானது. அதிலிருந்து எம்ஜிஆரால், அதிமுக உருவாக்கப்பட்டது. ஆக.. பாரம்பரியம் என்னவோ ஒரே இடம்தான். எனவேதான், இரு கட்சிகளின் தலைவர்களும் பெரியாரை மிகுந்த உச்சத்தில் வைத்து பார்க்கிறார்கள். ஒரு கால கட்டத்தில், பெரியாருடன் மல்லுக்கு நின்ற காங்கிரஸ் கூட, இப்போது அவரை 'தந்தை பெரியாராக' ஏற்றுக் கொண்டுவிட்டது. வேறு வழி இல்லை என்பது அவர்களுக்கும் தெரிந்துவிட்டது.
தனித்து விடப்பட்ட ரஜினி
இப்படியான ஒரு சூழ்நிலையில் தான் 1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியின்போது, ராமர் மற்றும் சீதை உருவப்படங்கள் பெரியாரால் அனுமதிக்கப்பட்டதாக ரஜினிகாந்த் கருத்து கூறி சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக, அவர் மீது பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது ஒரு பக்கம் என்றால், விரைவிலேயே கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், இந்த விஷயத்தில் தனித்துவிடப்பட்டு உள்ளார்.
ஓரணியில் கட்சிகள்
எல்லா விஷயங்களிலும் ஏட்டிக்குப் போட்டியாக நிற்கக்கூடிய, திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டும், இப்போது இணைந்து ரஜினிக்கு எதிராக முஷ்டியை முறுக்குகின்றன. திமுக தரப்பில் இருந்து வரக்கூடிய விமர்சனங்களை ரஜினி எதிர்பார்த்து இருப்பார். ஆனால் அதிமுகவில், அமைச்சர் ஜெயக்குமார் கூட தன்னை இப்படி கடுமையாக விமர்சனம் செய்வார் என்பது கனவிலும் கருதி இருக்கமாட்டார். அண்ணன், தம்பிகள் அடித்துக் கொள்வார்கள். ஆனால் தனது பெற்றோரை ஒருவன் சீண்டினால் அடித்துக்கொண்ட அண்ணன் தம்பிகள் இருவரும் சேர்ந்து கொண்டு, தனது பெற்றோரை சீண்டியரை, நையப் புடைப்பார்கள். இப்போது ரஜினி நிலைமை அப்படித்தான் ஆகிவிட்டது. அந்த சகோதரர்களை போல திமுகவும்-அதிமுகவும் காட்சியளிக்கிறது.
தலைசுற்றிப் போச்சே
உரலுக்கு ஒரு பக்கம் இடி.., மத்தளத்துக்கு இரு பக்கமும் இடி என்பார்களே.. அதுபோல, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் இருந்து சீறி வரும் விமர்சன கணைகளுக்கு, நடுவே சிக்கி கொண்டு தவிக்கிறார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால், பாஜக, அதிமுக மற்றும் ரஜினி கட்சி ஆகியவை ஏறத்தாழ ஒரே அணியில் இடம்பெறும் என்று கணித்து இருந்த அரசியல் விமர்சகர்களோ, இப்போது ரஜினி பாணியில் சொல்லப்போனால் 'தலைசுற்றி' போயுள்ளனர்.
இணைத்த ரஜினி
இரு பெரும் கட்சிகளுமே ஒரே தொனியில் ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை பார்த்தால், அரசியல் களத்தில் அவர் தனித்து விடப்பட்டுள்ளது உறுதியாகிவிட்டது. "அந்த கட்சியோட பல தலைவர்கள், ரஜினிக்கு ரொம்ப க்ளோஸ் பா" என்று கிசுகிசுக்கப்பட்ட காங்கிரஸ் கூட, பெரியார், விவகாரத்தில், ரஜினி இப்படி பேசியிருக்க கூடாது என்று கூற ஆரம்பித்துள்ளனர். இது அவருக்கு மற்றொரு தர்மசங்கடமாகி உள்ளது. எது எப்படியோ, சிதறிக் கிடந்த கட்சிகளை ஒன்றாக்கி, ஒரே குரலில், "வாழ்க பெரியார்" என்று சொல்ல வைத்து விட்டார் ரஜினி என்பதுதான் உண்மை.