கழகங்கள் இல்லாத தமிழகம்- பாஜகவின் மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கும் ரஜினிகாந்த்!
சென்னை: கழகங்கள் இல்லாத தமிழகம் என பல்லவியை பாடி மூக்குடைபட்ட பாஜகவே இன்னமும் முட்டுசந்தில் இருக்கிறது. இந்த நிலையில் அதே பல்லவியை அதாவது ரஜினிகாந்த் பாணியில் சொல்வதானால் கழகங்கள் இல்லாத தமிழகம் என்கிற பாஜக வைத்த மீன்சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்கப்போவதாக கிளம்பியிருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழகத்தின் சுவர்களில் திடீரென பாஜகவினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு கோஷம் வைத்தனர்.. அதுதான் கழகங்கள் இல்லாத தமிழகம். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சி இல்லாமல் செய்வோம் என சூளுரைத்தது.
இதற்காக தமிழகத்தின் சுவர்களில் இந்த முழக்கத்தை 'தேய்த்து' 'தேய்த்து' அரிப்பை தீர்த்தது பாஜக. ஆனால் எந்த ஒரு வாக்காளனும் இந்த முழக்கத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இதனால் வேறுவழியே இல்லாமல் அதிமுக எனும் திராவிட கட்சியின் முதுகில் சுகமாக அமர்ந்து கொண்டிருக்கிறது பாஜக.
மீன் சட்டியில் சர்க்கரை பொங்கல்.. விஜய் பாணியில் குட்டி கதை கூறிய ரஜினிகாந்த்
தமிழருவியின் மநகூ
இதே முழக்கத்தை திராவிட கட்சிகள் சிலவற்றின் துணையுடனும் மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் ஒன்று ஆடுகளத்தில் அவிழ்த்துவிடப்பட்டது. இதை அவிழ்த்துவிட்டவர் வேறுயாருமல்ல.. திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என திடீரென முழக்கமிட்டு வீதிக்கு வந்திருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ஞான குரு சாட்சாத் தமிழருவி மணியன்தான்.
கவுரம் பெற்ற கமல்
இத்தனை ரணகளங்களுக்குப் பின்னரும் அரசியலுக்கு வந்து திராவிட கட்சிகளை ஒழிப்பேன் என்று முழங்குகிறார் ரஜினிகாந்த். நடிகர் கமல்ஹாசனும் கட்சியை தொடங்கினார். ஆனால் இப்படியெல்லாம் அடுத்தவர் வீட்டு மீன்குழம்பு சட்டியில் சர்க்கரை பொங்கல் வைக்காமல் பதவிசாக நடந்து கொண்டார். இதனால் பக்குவமாக ஒரு குறிப்பிட்ட வாக்குகளைப் பெற்று கவுரம் பெற்றார்.
காலாவதியான திராவிட எதிர்ப்பு
தமிழகத்தில் போணியாகாத- காலாவதியாகிப் போன முழக்கம்தான் திராவிட எதிர்ப்பு என்பது. தந்தை பெரியார்- அண்ணா காலத்தில் ஈ.வி.கே.சம்பத், ம.பொ.சி, நெடுமாறன்கள், கண்ணதாசன்கள், ஆதித்தனார்கள் செய்ய நினைத்த ஒன்றுதான் திராவிட எதிர்ப்பு. அவர்களாவது தேசியத்தின் மீதான பற்றால் இதனைச் செய்தனர். அதை கூட ஒரு கொள்கைவழிப்பட்ட எதிர்ப்பு எனலாம்.
ரஜினியின் பட்டு குஞ்சம்
ஆனால் வரலாற்று வன்மத்தை தீர்ப்பதற்காக பாஜக முன்வைத்தது திராவிட எதிர்ப்பு முழக்கம்- கழகங்கள் இல்லாத கழகம் என்பது. இப்படியாவது ஒரு வெளிச்சம் கிடைக்காதா? என விரக்தியிலும் விளம்பர வெறியிலும் தமிழருவி மணியன் முன்வைத்தது திராவிட எதிர்ப்பு முழக்கம். இதையே பிடித்து கொண்டு இப்போது புரட்ச்சி.. எழுச்சி என்ற வார்த்தை ஜாலங்களால் பட்டு குஞ்சம் கட்டிக் கொண்டு பந்தாவாக வருகிறாராம் ரஜினிகாந்த். அந்தோ பாவம்!