அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்கள்.. ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் வீட்டு கதவை தட்டி வாய்ப்பு.. ரஜினி
சென்னை : அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை நான் வைத்துள்ளேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், சென்னை லீலா பேலசில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் அரசியலுக்கு வருவதாக நான் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கூறவில்லை.
2017-ஆம் ஆண்டு முதல் முறையாக அரசியலுக்கு வருவேன் என சொன்னேன். எனவே நான் 25 ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக நான் கூறுவதாக இனி கூறமாட்டீர்கள் என நம்புகிறேன். அரசியலுக்கு வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நான் சோ, கருணாநிதி, மூப்பனார் உள்ளிட்டோரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.
அதிமுக, திமுக பதவிகளில் உள்ளவர்கள் டெண்டர் ஊழல்.. ரஜினிகாந்த் பகீர் குற்றச்சாட்டு
3 திட்டங்கள்
அரசியலில் மாற்றம் ஏற்பட வேண்டும் என்றால் முதலில் சிஸ்டத்தை மாற்ற வேண்டும். இதற்காக 3 திட்டங்கள் வைத்துள்ளேன். முதலில் ஆட்சிக்கு வந்தவுடன் தேவையான அளவிற்கான கட்சி பதவிகளை மட்டுமே வைத்துக் கொள்வேன். திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் பூத் கமிட்டி தவிர்த்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகள் இருக்கின்றன. இவை தேர்தல் சமயத்தில் மட்டுமே தேவை. அதன்பிறகும் இந்த பதவிகளை வைத்து பலர் தொழிலாகவே வைத்துள்ளனர்.
பதவிகள்
ஒரு திருமண வீட்டில் நிறைய வேலைக்காரர்கள், சமையல்காரர்கள் உள்ளிட்டோர் பணியாற்றுவர். திருமணம் முடிந்தவுடனும் இத்தனை வேலைக்காரர்கள் தேவையா?. எனவே தேர்தல் நேரத்தில் மட்டும் இந்த பதவிகள் இருக்கும். தேர்தலுக்கு பின்னர் முக்கிய பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற பதவிகள் நீக்கப்படும்.
பாலமாக இருப்பேன்
இரண்டாவது இளைஞர்களுக்கு எம்எல்ஏ சீட் கொடுப்பது. எனது கட்சியில் 50 வயதிற்கு கீழ் உள்ள நன்கு படித்த ஊழலற்ற இளைஞர்கள் 40 சதவீதம் பேருக்கு வாய்ப்பு அளிப்பேன். மேலும் மற்ற கட்சியிலும் நல்லவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்களில் 40 சதவீதம் பேருக்கு வாய்ப்பு கொடுப்போம். பெண்களும் அடங்குவர். அது போல் ஆசிரியர்கள், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளில் நல்லவர்கள் இருப்பார்கள். அவர்களின் வீட்டு கதவை தட்டி நானே சென்று அழைப்பேன். புதிய சக்தி, புதிய மின்சாரம், புது ரத்தம் ஆகியவற்றை சட்டசபைக்குள் போய் ஆட்சி அதிகாரத்தை ஏற்படுத்த நான் பாலமாக இருப்பேன்.
கட்சிக்கு ஒரு தலைமை
மூன்றாவதாக முதல்வர் வேட்பாளர். தேசிய கட்சிகளை தவிர்த்து ஒரு கட்சியில் இருக்கும் தலைவரும் முதல்வரும் ஒருவரே இருப்பர். இதை நாம் மாற்ற வேண்டும். ஆட்சியில் இருப்பவர்களை கட்சியில் இருப்பவர்கள் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும். எனக்கு முதல்வர் பதவி எல்லாம் வேண்டாம். கட்சிக்கு ஒரு தலைமை- ஆட்சிக்கு ஒரு தலைமை செயல்படுத்துவோம் என்றார் ரஜினிகாந்த்.