விபூதி பூசியதையே தடுக்காதவர் பெரியார்.. ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை: திருமாவளவன்
Recommended Video
சென்னை: பெரியார் தொடர்பாக ரஜினிகாந்த் கூறியது வரலாற்று பிழை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், தெரிவித்துள்ளார்.
ராமர், சீதை படங்களை பெரியார் செருப்பால் அடித்ததாக ரஜினிகாந்த் சமீபத்தில் துக்ளக் ஆண்டு விழாவில், பேசியது தொடர்பாக, இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 1971ம் ஆண்டு சம்பவம் தொடர்பாக, 2017ம் ஆண்டு வெளியான, அவுட் லுக் இதழில், செய்தி வெளியானதாகவும், எனவே தான் மன்னிப்பு கோரப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.
இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர், தொல்.திருமாவளவன், இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
பெரியார் தொடர்பாக ரஜினி சொன்னது வரலாற்று பிழை. ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்பதும் கேட்காததும் அவர் இஷ்டம். நாகரிக அரசியல் செய்ய விரும்பினால் மன்னிப்பு கேட்டு இருக்கலாம். ரஜினிகாந்த், வரலாற்றை திரும்பி பார்க்க வேண்டும், உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெரியார் என்னதான் தீவிரமாக கடவுள்களை எதிர்த்து பேசினாலும், அவர் நாகரீக அரசியல் செய்தவர். குன்றக்குடி அடிகளார் விபூதி பூசியபோது அதை தடுக்காமல் ஏற்றவர். அதுதான் பெரியார். எனவே, பெரியார் பற்றி தெரியாமல் பேசுவது சரியல்ல. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.
2017ல் வந்த செய்தி.. பெரியாருக்கு எதிராக ரஜினி வெளியிட்ட அவுட்லுக் ஆதாரத்தில் இருப்பது என்ன?
அதேநேரம், பாஜகவின், கே.டி.ராகவன், அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் சொன்னது முற்றிலும் உண்மைதான், மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே, வழக்கு தொடர்ந்த ஆதாரம் இருக்கிறது என்றார்.