ரஜினி மன உளைச்சலில் இருக்கிறார் ... அவரது முடிவுக்காக யாரும் விமர்சிக்க வேண்டாம் - அர்ஜூனமூர்த்தி
உடல்நலத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாகவே கட்சி தொடங்கப்போவதில்லை என்ற முடிவினை ரஜினிகாந்த் எடுத்திருப்பதாக அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். ரஜினியின் முடிவிற்காக யாரும் அவரை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் தெரிவித்துள்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கட்சித் தொடங்கப்போவதில்லை என்று முடிவெடுத்திருப்பது உடல் நலத்தை கருத்தில் கொண்டுதான் வேறு எந்த உள் நோக்கமும் கிடையாது என்று தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி கூறியுள்ளார். ரஜினிகாந்த் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாகவும் தேவையின்றி அவரை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி அறிவிப்பை டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதற்கு முன்பாக ஹைதராபாத் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சில தினங்களுக்கு முன்பு வீடு திரும்பினார்.
நேற்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்ட ரஜினிகாந்த், உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுள்ளதாக கூறினார். யாரையும் பலிகடா ஆக்க விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார் ரஜினிகாந்த். தன்னுடைய வேண்டுகோளை ஏற்று தன்னுடன் வந்த அர்ஜூன மூர்த்தி, தமிழருவி மணியன் ஆகியோருக்கு நன்றி கூறியிருந்தார்.
ரஜினிகாந்த் அறிவித்த முடிவினை அவருடைய நலம்விரும்பி என்ற முறையில் வரவேற்கிறேன்: ப.சிதம்பரம்
ட்விட்டரில் அறிவித்த ரஜினி
ரஜினியின் அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு ட்விட்டரில் ஆரம்பித்து ட்விட்டரிலேயே முடிந்து போனது. ரஜினியின் அறிவிப்புக்கு பல அரசியல் கட்சித்தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் அவரது ரசிகர்கள் கோபமும் வருத்தமும் அடைந்துள்ளனர். போயஸ்கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீடு முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழருவி மணியன் அறிக்கை
இந்த நிலையில் இன்று காலையில் காந்திய மக்கள் இயக்கத்லைவர் தமிழருவி மணியன் தான் அரசியலை விட்டு விலகப்போவதாகவும்,போகிறேன் இனி வரமாட்டேன் என்றும் அறிக்கை வெளியிட்டிருந்தார். ரஜினிகாந்த் தனது கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியனை நியமித்திருந்தார்.
உள்நோக்கம் இல்லை
இதனிடையே ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த அர்ஜூன மூர்த்தி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினிகாந்த் எடுத்துள்ள முடிவிற்கு எந்த உள்நோக்கமும் இல்லை என்று கூறினார். அவர் மருத்துவர்களின் ஆலோசனைப்படியே இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார்.
ரஜினி மன உளைச்சல்
கட்சி ஆரம்பித்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்த நிலையில் அது முடியாமல் போய்விட்டதே என்று மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார் ரஜினிகாந்த். எனவே அவரது முடிவை யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் அர்ஜூன மூர்த்தி கேட்டுக்கொண்டார்.
ரஜினியுடன் பயணம்
பாஜகவில் இருந்து தான் வந்திருந்தாலும் இனி எனது பயணம் ரஜினியுடன்தான் அவரை விட்டு எங்கும் போக மாட்டேன் என்று கூறிய அர்ஜூன மூர்த்தி, தனக்கு மோடியும் ரஜினியும் இரண்டு கண்கள் என்று தெரிவித்தார். ரஜினியின் இந்த முடிவு குறித்து யாரும் விமர்சனம் செய்ய வேண்டாம் யாருடைய அழுத்தம் காரணமாகவும் அவர் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அர்ஜூன மூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார்.