போயஸ் கார்டன் டூ ராஜாஜி சாலை.. பெரியார் சாலை வேண்டாம்.. அண்ணா சாலையும் வேண்டாம்... தெளிவாக்கிய ரஜினி
ரஜினியின் பேச்சு தெளிவினை ஏற்படுத்தி உள்ளது
Recommended Video
சென்னை: போயஸ் கார்டனிலிருந்து தான் போக போவது ராஜாஜி சாலைக்குத்தான் (அங்குதான் புனித ஜார்ஜ் கோட்டை உள்ளது) என்பதை தெளிவாக்கி விட்டார். தனக்கு பெரியார் சாலையும் தேவையில்லை, அண்ணா சாலையும் தேவையில்லை என்பதையும் அவர் கிட்டத்தட்ட நேரடியாகவே தெளிவுபடுத்தி விட்டார்.
அண்ணாமலை படத்தில் ஒரு வசனம் வரும்.. "கூட்டிக் கழிச்சுப் பாரு.. கணக்கு சரியா வரும்" என்று ராதாரவி வசனம் பேசுவார். அந்த வகையில், ரஜினியின் செயல்பாடுகளை கூட்டிக் கழித்து பார்த்தால் அந்த வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
ஆரம்பத்திலிருந்தே நாம் ஒன்றை சொல்லி வருகிறோம்.. ரஜினி தெளிவாகத்தான் இருக்கிறார். அவரது பேட்டிகள் உள்ளிட்டவற்றைப் பார்த்து கேட்டு வருவோர்தான் குழம்பிப் போயுள்ளனர் என்று. அதை மறுபடியும் உண்மை என்றே நிரூபித்துள்ளார் ரஜினி.
வித்தியாசங்கள்
இதுவரை அளித்த பேட்டிகளுக்கும் நேற்று ரஜினி அளித்த பேட்டிக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன. நேற்று அவர் கிட்டத்தட்ட தெளிவான முறையில் பேசினார். அதாவது தான் எடுத்த நிலைப்பாட்டை அவர் மறுக்கவில்லை. மாறாக ஆமா, அப்படித்தான்.. அதில் மாற்றுக் கருத்தே இல்லை என்று அழுத்தம் திருத்தமாக நிறுத்தி நிதானமாக கூறியிருந்தார். இப்படி அவர் பேசியிருப்பது இதுவே முதல் முறை.
பாதை எது?
இதற்கு முன்பு அவர் மாற்றி மாற்றிப் பேசியிருந்தாலும் இந்த முறை அவர் மாற்றாமல் ஆமா அப்படித்தான் என்று அவர் பேசியிருப்பதை வைத்துப் பார்க்கும்போது ரஜினி மற்றும் ரஜினி வட்டாரம் ஒரு முடிவெடுத்து விட்டதையே உணர்த்துகிறது. அது ரஜினி போகப் போகும் பாதை எது என்ற முடிவை உணர்த்தியுள்ளது.
அண்ணா - பெரியார்
தமிழகத்தைப் பொறுத்தவரை ராஜாஜி சாலைக்கு (ஆட்சியைப் பிடிக்க) போக பல வழிகள் உள்ளன. ஆனால் காங்கிரஸின் சரிவுக்குப் பிறகு பெரியார், அண்ணா என இரு மார்க்கங்கள்தான் தமிழக அரசியலை சுற்றிச் சூழ்ந்துள்ளதே தவிர வேறு எந்த மார்க்கமும் இங்கு எடுபடவில்லை. பெரியார் போட்டு வைத்த அடித்தளத்தில் நடந்தார் அண்ணா.. அவர் காட்டிய வழியில் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் போனார்களே தவிர புதிய பாதைக்கு அவர்கள் முயலவில்லை.
திட்டம் என்ன?
இந்த பாதைகளைத் தாண்டி வேறு எந்த பாதையும் மக்களுக்கு அடையாளம் காட்டப்படவில்லை. இந்தப் பாதையில் நடந்துதான் இத்தனை காலமாக தமிழகத்தை இந்தியாவின் மிக முக்கிய, வளர்ச்சி அடைந்த மாநிலமாக மறைந்த தலைவர்கள் மாற்றி காட்டியிருந்தனர். ஆனால் தற்போது முற்றிலும் ஒரு புதிய பாதையை போட ரஜினி மற்றும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் திட்டமிட்டுள்ளதாகவே தெரிகிறது.
இந்துத்துவா
அதாவது ஒரு சாலையை முற்றிலும் புறக்கணித்து விட்டு புதிதாக 8 வழிச்சாலை போட நடந்த முயற்சி போலத்தான் இதுவும். எல்லோரும் இந்தப் புதிய பாதைக்கு வாங்க என்று கூப்பிடப் போகிறார்கள். அந்தப் பாதைதான் ஆன்மிக இந்துத்துவ பாதை. இதைத்தான் ரஜினி மூலமாக புலப்படுத்தியுள்ளனர். இந்துத்வாவை இதுவரை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்ய முடியவில்லை. காரணம் இந்துக்கள் வேறு, இந்துத்துவா வேறு என்பதை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளதால்.
மத நம்பிக்கைகள்
எனவேதான் ரஜினி மூலமாக புதிய மார்க்கத்தில் இந்த இந்துத்துவாவை கொண்டு வரும் உத்திகள் களம் இறக்கப்பட்டுள்ளதாக அனுமானிக்க முடிகிறது. பெரியார் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு எதிரானவர், மூட நம்பிக்கை என்ற பெயரில் மத நம்பிக்கைகளை சீர்குலைத்தவர், அவர் கடவுள் மறுப்பாளர், கடவுளை வெறுத்தவர் என்ற அளவில் அப்படியே போட்டு சுருக்கும் முயற்சிகள் சூடு பிடித்துள்ளன. அவர் சமூகப் போராளி, சமூகத்தின் பல தட்டு மக்களுக்காக அவர் எப்படியெல்லாம் பாடுபட்டார், பெரியார் இல்லாவிட்டால் தமிழகம் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது என்ற மற்ற நல்ல விஷயங்கள் எல்லாவற்றையும் தூள் தூளாக்கும் உத்திகள் கையில் எடுக்கப்பட்டுள்ளன.
பெரியார் யார்?
இதைத்தான் ரஜினி பேட்டி தெளிவாக உணர்த்துகிறது. மறக்க வேண்டிய விஷயம் என்று ரஜினியே கூறுகிறார். அவர் சொல்வதற்கு முன்பாகவே இந்த விஷயத்தை மறந்து விட்டு வளர்ச்சிப் பாதையில் போய்க் கொண்டிருக்கும் தமிழக மக்களிடம் அவரே ஞாபகப்படுத்தவும் செய்கிறார்.. ஏன் இந்த முரண்பாடு.. இதற்கு ரஜினியிடமிருந்து பதில் இல்லை. அதாவது, பெரியார் யார் தெரியுமா.. இந்துக்களுக்கு எதிரானவர் என்ற ஒற்றைச் செய்தியை அவர் மறைமுகமாக மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார் என்றே ஊகிக்க வேண்டியுள்ளது.
ரஜினியின் நிறம்
மொத்தத்தில் ரஜினிகாந்த்தும் அவர் தரப்பும் தெளிவான நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர். அந்த வகையில் அவர்களை பாராட்டியே ஆக வேண்டும். காரணம், அவர் பின்னால் அணிவகுக்க அவரது ரசிகர்களைத் தாண்டி மக்களிலும் பலர் ஆர்வமாக உள்ளனர். அவர்கள் இனி ரஜினியின் நிறம் பார்த்து அணிவகுப்பது குறித்த முடிவெடுக்க ரஜினியே ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். அந்த வகையில் இனி எல்லாமே தெளிவாகக் கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது.
இதுதான் நிதர்சனம்
இதுவரை தமிழக அரசியல் வாதிகள், கட்சிகள், மக்கள் நடந்து போய் வந்த பெரியார் சாலை, அண்ணா சாலையைத் தாண்டி ராஜாஜி சாலையில் எத்தனை பேர் அணிவகுக்க முன்வருவார்கள் என்பது காத்திருந்து பார்க்க வேண்டிய விஷயம்தான்.. ஆனால் எந்தப் பாதையில் போனாலும்.. "காமராஜர் சாலை"யை மட்டும் யாராலும் தவிர்க்கவே முடியாது.. அது நிதர்சனம்.