ரஜினிகாந்த்.. ஏப்ரல் 14ம் தேதி கட்சியின் பெயரையும் கொடியையும் அறிவிக்க உள்ளதாக தகவல்
சென்னை: ரஜினி அரசியல் என்ற போருக்கு புறப்பட்டு விட்டார் போல.. வரும் ஏப்ரல் 14ம் தேதி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
ரஜினி காந்த் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்பதை புலி வருது கதையாகவே சிறுவயது முதல் பலரும் கேட்டு வந்திருப்பார்கள். உண்மையிலேயே ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தே ஆண்டுகள் மூன்று உருண்டோடிவிட்டது.
இந்த இடைப்பட்டகாலத்தில் ரஜினி நடித்த படங்களின் எண்ணிக்கை அதற்கு முன்பு அவர் நடித்த படங்களின் எணிக்கைகைவிட இரு மடங்கு அதிகம். ஆனால் ரஜினி வழக்கமான அரசியல்வாதிகளைப் போல் அரசுகளை விமர்சிப்பதையோ அல்லது அரசியல்வாதியாக மக்களை சந்திக்கவோ இல்லை.
அரசியல் நகர்வுகள்
இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா என்ற சந்தேகமே வர ஆரம்பித்தது. ஆனால் ரஜினி சத்தமில்லாமல் தனது மன்ற நிர்வாகிகளை அவ்வப்போது அழைத்து ஆலோசனை நடத்தி வந்தார். இதேபோல் அரசியல் நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தி வந்தார். தினமும் அரசியல்வாதிகள் நடத்தி வரும் அறிக்கை அரசியலை ரஜினி விரும்பாமல் இருந்தார். ஆனால் அதேநேரம் தன்னை பற்றி மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சமூக வலைதளங்கள் மூலம் அறிந்தே வருகிறார். இதேபோல் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் உன்னிப்பாக கவனித்து வந்தார்.
அரசை மறைமுகமாக
ஸ்டெர்லைட் தொடங்கி, சிஏஏ வரை அவ்வப்போது மக்கள் பிரச்னைகள் குறித்து கருத்துக்களையும் வெளிப்படுத்தியே வந்திருக்கிறார். ரஜினி தன்னை பாஜகவைச் சேர்ந்தவராக ஊடகங்கள் விமர்சிப்பதை சுத்தமாக விரும்பவில்லை. அதை வெளிப்படையாகவே அண்மையில் கண்டித்தார். ஆனால் அதேநேரம் மத்தியில் ஆளும் பாஜக அரசையோ அல்லது அதிமுக அரசையோ நேரடியாக விமர்சித்தது இல்லை. ஆனால் பலமுறை மறைமுகமாக விமர்சித்து இருக்கிறார். கழுவுற மீனில் நழுவுற மீனாக அவரது பேச்சுகள் எல்லாம் இதுவரை இருந்து வந்தது.
கட்சி ஆரம்பிக்கிறார்
ஆனால் எல்லாம் 2019 வரை தான் , 2020ல் இருந்து ரஜினி அரசியலுக்கு ஆயத்தமாகிவிட்டார்.அவர் அரசியல் கட்சிக்கான பூர்வாங்க பணிகளை தொடங்க ஆரம்பித்துவிட்டார். இனி போருக்கு தயார் என்று என்பதை வெளிப்படையாக அறிவிக்க போகிறார்.அதற்கான நாளை குறித்து வருகிறார். வரும் ஏப்ரல்14ம் தேதி கட்சிக்கொடியையும் கட்சியின் பெயரையும் அறிவிக்க ஆயத்தமாகி வருகிறார்.
ரஜினி நாளை ஆலோசனை
இதற்காக ரஜினி காந்த் தனது மன்ற நிர்வாகிகளை அழைத்து நாளை ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது சிஏஏ உள்ளிட்ட நாட்டு நிலவரங்கள் மற்றும் கட்சி குறித்து ஆலோசிப்பார் என தெரிகிறது. கட்சியின் பெயரையும் கொடியையும் ஒருவேளை ரஜினி ஏப்ரல் 14ம் தேதி அறிவித்தால் சும்மா அறிவிக்கமாட்டார். நிச்சயம் மாநாடு நடத்தியே அறிவிப்பார். எனவே இனி ரஜினி முழுமையாக அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கலாம்.