இப்ப இல்லாட்டி என்ன..தேர்தலுக்கு 2 மாதம் முன்பு கூட வரலாமே..ரஜினியை விடாமல் விரட்டும் தமிழருவியார்!
சென்னை: சட்டசபை தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்னர் கூட ரஜினிகாந்த் கட்சி தொடங்கி அரசியலுக்கு வரலாம் என இன்னமும் நம்பிக்கையோடு காத்திருக்கிறார் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன்.
சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு எம்ஜிஆர் ஆட்சியை தரப்போவதாக கூறியவர் ரஜினிகாந்த். ஆனால் எம்ஜிஆரை இப்போது பாஜக தன்வசப்படுத்தி வைத்திருக்கிறது. ரஜினிகாந்தை பாஜகவும் நம்ப தயாராக இல்லை. அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்துவிட்டது.
ரஜினிகாந்த் நிலை
ரஜினிகாந்த் சில நெருக்குதல்களால்தான் அரசியலுக்கு வர இருப்பதாக கூறியிருந்ததும் உறுதியாகிவிட்டது. கொரோனாவை முன்வைத்து அரசியலுக்கு வராமலே முழுக்கு போடுகிற முடிவில்தான் ரஜினிகாந்த் இருந்து வருகிறார்.
தேர்தலுக்கு முன்னர் கூட...
ஆனால் ரஜினிகாந்தை நீண்டகாலமாக நம்பி இருக்கும் தமிழருவி மணியன் இன்னமும் நம்பிக்கையை கைவிடாமல் இருக்கிறார். இது தொடர்பாக பேட்டி ஒன்று அளித்த தமிழருவி மணியன், தேர்தலுக்கு 2 மாதத்துக்கு முன்னர் கூட ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாமே.. இப்பத்தான் வர வேண்டும் என ஏதேனும் விதி இருக்கிறதா? என கேட்டிருக்கிறார்.
உண்மையை பேசும் ரஜினி
அதேநேரத்தில் ரஜினிகாந்துக்கு உடல்நலப் பாதிப்பு இருப்பது உண்மை; ஆனால் அந்த உண்மையை பட்டவர்த்தனமான வெளிப்படையாகத்தானே ரஜினிகாந்த் சொல்லி இருக்கிறார். சில தலைவர்களை போல மூடி மறைக்கவில்லை ரஜினிகாந்த் எனவும் நியாயப்படுத்தியிருக்கிறார் தமிழருவி மணியன்.
யாருக்கும் உரிமை இல்லை
அத்துடன் ரஜினிகாந்த் தாமாகவே முன்வந்து, நான் அரசியலுக்கு வரப்போவது இல்லை. எனக்கும் பொதுவாழ்க்கைக்கும் தொடர்பு இல்லை என அறிவிக்கும் வரை அவரை யாரும் விமர்சிக்க எந்த ஒரு உரிமையுமே கிடையாது என்றும் கூறியிருக்கிறார் தமிழருவி மணியன்.