வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும்.. 3 மாதத்தில் ரஜினிக்கு இதுவெல்லாம் சாத்தியமா?
சென்னை: சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது கேள்விகுறியாக உள்ள நிலையில், ஒருவேளை கட்சி ஆரம்பிப்பதாக இருந்தாலும் இன்னும் 3 மாதத்தில் கட்சி தொடங்கி, மூன்றே மாதத்தில் கிளை கழகம் வரை நிர்வாகிகளை நியமித்து, மக்களை சந்திப்பது ரஜினிக்கு மிகவும் சவாலானது. கட்சிக்கு பெயர் தொடங்கி தேர்தல் சின்னம், கொடி, வேஷ்டி வரை உடனடியாக முடிவெடுக்க வேண்டும்.
என்ன சொல்லி 4மாதத்தில் மக்களிடம் பிரச்சாரம் செய்வார்? அதை மக்கள் ஏற்பார்களா? கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என்று விரும்பும் ரஜினிக்கு இது சாத்தியமா? என்பது பெரும் கேள்விதான்.
ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து விட்டு சென்றுள்ளார். இன்று மாலை அல்லது நாளைக்குள் முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை மருத்துவர்களின் அறிவுரையை ஏற்று அரசியலுக்கு முழுக்கு போடுவாரா? அல்லது துணிந்து களம் இறங்குவாரா? என்பதற்கு ஒரு வழியாக முடிவு தெரியபோகிறது. அதாவது 25 ஆண்டுகால அரசியல் எதிர்பார்ப்பு குறித்து இன்றோ அல்லது நாளையோ முடிவு தெரிந்துவிடும்.
கிளை கழகம் வரை
ரஜினிகாந்த் ஒருவேளை அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தான் உடனடியாக தொடங்கியாகவேண்டும். அத்துடன் தேர்தல் ஆணையத்தில் அனுமதி பெற வேண்டும். கட்சிக்கு பெயர் தொடங்கி தேர்தல் சின்னம், கொடி, வேஷ்டி வரை முடிவெடுக்க வேண்டும். அத்துடன் மூன்று மாதத்தில் கிளை கழகம் வரை மன்ற நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்.
கட்சி தொடக்க மாநாடு
கையோடு தமிழகத்தில் எங்காவது பிரம்மாண்ட மாநாடு நடத்தி கடசியை விஜயகாந்த் போல் ரஜினிகாந்த் அறிவிக்க வேண்டியதிருக்கும். கொரோனா பரவல் அதிகம் உள்ள இந்த சூழலில் மாநாடு நடத்துவது என்பது சாத்தியமே இல்லாதது.
அறிவிக்க வேண்டும்
கட்சி ஆரம்பிப்பதை பிரம்மாண்டமாக அறிவிக்க முடியாவிட்டாலும், கட்சியின் கொள்கைகளை அறிவிக்க வேண்டியதிருக்கும்.அத்துடன் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சிக்க வேண்டியதிருக்கும். முக்கியமாக தினசரி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டியதிருக்கும். ஒவ்வொரு மாவட்டமாக போய் ரசிகர்களையும் மக்களையும் சந்தித்து பேசி திமுக மற்றும் அதிமுகவுக்கு மாற்றாக என்ன செய்யப்போகிறார் என்பதையும் ரஜினி சொல்ல வேண்டியதிருக்கும்.
தனித்து போட்டியா
முக்கியமாக கூட்டணி அமைக்கிறாரா அல்லது தனித்து போட்டியா என்பதையும் முடிவு செய்தாக வேண்டும். ஏனெனில் தேர்தலுக்கு மிக குறைவான காலமே உள்ளதால் ரஜினி இதனை முடிவு செய்தாக வேண்டும். மேலும் ரஜினி உடல் நிலையையும் கவனத்தில் கொள்ள வேண்டும். முதல்வர் வேட்பாளர் ரஜினியை தவிர வேறு யார் இருந்தாலும் ரசிகர்கள் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதால் அதுவும் சற்று யோசிக்க வேண்டிய விஷயமாக இருக்கும்.
விடை கடினமானது
அத்துடன் தினசரி ஆர்ப்பாட்டம், போராட்டம், ஊழலுக்கு எதிரான விமர்சனம் என்று அரசியலுக்கே உண்டான அத்தனை விஷயங்களையும் உடனடியாக செய்ய தொடங்க வேண்டியதிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக கட்டாயம் வென்றே ஆகவேண்டும் என்று விரும்பும் ரஜினி, 4 மாதத்தில் என்ன மாயாஜாலம் நிகழ்த்தி மக்கள் மனதை வென்று ஆட்சியமைப்பார் என்பதே பெரும் கேள்விதான்? இதற்கு விடை சொல்வது என்பது, ரஜினி அரசியலுக்கு வருவாரா மாட்டாரா? என்பதற்கான பதிலை விட கடினமானது.