விழாக்கோலத்தில் போயஸ் இல்லம்.. விஜயதசமி நாளில் கரெக்டா ரஜினிகாந்த் வீட்டுக்கு வந்த விஐபி.. அதானா?
சென்னை: விஜயதசமி நாளான இன்று நடிகர் ரஜினிகாந்த், தனது புதிய கட்சி துவக்கம் தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.
சென்னை போயஸ் கார்டன் பகுதியில் உள்ளது நடிகர் ரஜினிகாந்த் இல்லம். தசரா பண்டிகையை ஒட்டி வீடு முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது.
போயஸ் கார்டன் இல்லத்தில் வாழைத் தோரணங்களால் அலங்கரிக்கப் பட்டுள்ளது. குலைகளுடன் கூடிய வாழை மரங்கள் கேட்டின், இரு பக்கத்திலும் கட்டப்பட்டுள்ளது.
கர்நாடகா வங்கி கிளை செக் மூலம் ரூ.6.56 லட்சம் சொத்து வரியை அபராதத்துடன் செலுத்தினார் ரஜினிகாந்த்
உற்சாக ரஜினிகாந்த்
வழக்கத்தைவிட ரொம்பவே உற்சாகமாக இருக்கிறார் ரஜினிகாந்த். கடந்த பல நாட்களாகவே, விஜயதசமி நாளில் ரஜினிகாந்த் தனது புதுக்கட்சி பற்றி முக்கிய முடிவு எடுக்க போகிறார் என்று வெளியான தகவலுக்கும், ரஜினிகாந்த் வீட்டில் நிலவும் சூழலுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருக்கிறது என்று அவரது ரசிகர்களுக்கு ஏதோ ஒரு பொறி தட்டி இருக்க வேண்டும். எனவேதான், நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் புது கட்சி பற்றி விரைவில் அறிவிக்கப் போகிறார் என்று ரசிகர்கள் தரப்பு செய்திகளை பரப்பி வந்தனர்.
திடீர் விருந்தாளி
இந்த நிலையில்தான் இன்று மதியம் 12.30 மணி அளவில், ரஜினிகாந்தின் இல்லத்துக்கு அவரின் நண்பரும், புதிய நீதிக் கட்சியின் தலைவருமான ஏசி சண்முகம் திடீர் விசிட் செய்தார். இருவரும் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக ஆலோசித்தபடி இருக்கிறார்கள். இந்த தகவல் வெளியே வந்ததுமே ரஜினி ரசிகர்கள் உற்சாகம் ஆகிவிட்டார்கள்.
அரசியல் வெற்றிடம் பற்றி பேச்சு
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. புதிய நீதி கட்சி தலைவர் சண்முகத்துக்கு சொந்தமான கல்லூரி விழாவில்தான், தமிழக அரசியலில் வெற்றிடம் இருப்பதாக ரஜினிகாந்த் பேசியிருந்தார். அப்போதுதான் ரஜினி மீது ஃபோகஸ் இன்னும் அதிகரித்தது.
விஜயதசமி நாள்
இருவருக்கும் நீண்ட காலமாகவே நட்பு இருக்கிறது. இந்த நிலையில் இன்று இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. எனவே ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்து ஏதேனும் அறிவிப்புகளை வெளியிட போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஜயதசமி நாளில் நல்ல விஷயங்களை செய்யும்போது அது வெற்றிகரமாக முடியும் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் இருக்கிறது. இந்த நிலையில்தான் கட்சி பற்றி ரஜினிகாந்த், தனது நண்பர் ஏசி சண்முகத்திடம் ஆலோசனை செய்திருக்கக்கூடும் என்று வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை பரிசோதனைகள்
ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இருந்தார். இப்போது கொரோனா பரவல் காரணமாக அவரால் அமெரிக்கா சென்று பாலோஅப் செய்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது ரத்த மாதிரிகள், பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், சில முன்னணி ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. தனது உடல் நிலையை வலுப்படுத்திக் கொண்டு ரஜினிகாந்த் புதுக் கட்சி தொடங்கத்தான் ஆயத்தமாகிக் கொண்டு இருக்கிறார் என்ற தகவல்களை இதுபோன்ற செய்திகள் மேலும் உறுதி செய்கின்றன.
ஏசி சண்முகம் என்ன சொல்வார்
விஜயதசமி நாளன்று கட்சி பற்றிய அறிவிப்பை ரஜினிகாந்த் வெளியிடுவார் என்று அவரது ரசிகர்கள்தான் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறார்களே தவிர ரஜினிகாந்த் தரப்பில் இதுவரை வாய்திறக்கவில்லை. எனவே இன்று ஏசி சண்முகமுத்துடனான அவரது சந்திப்பு கட்சி துவங்குவது பற்றியா, அல்லது போயஸ் இல்லத்திற்கு வெளியே வந்து "ரஜினிகாந்துக்கு நான் தசரா வாழ்த்து கூற வந்தேன்" என்று ஏசி சண்முகம் பேட்டி அளிப்பாரா என்பது யாருக்கும் புரியாத புதிர்தான். இதுவரை கட்சி தொடங்குவது பற்றிய எந்த ஒரு பெரிய முயற்சியும் எடுக்காத ரஜினிகாந்த், ஒரே நாளில் அதிரடியாக எதுவும் செய்துவிட முடியாது என்ற பார்வையை பல பத்திரிகையாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கிறார்கள். பார்ப்போம்.. இன்று இரவுக்குள் ரஜினிகாந்த் ஏதாவது சொல்கிறாரா என்பதை.