ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு.. நாளை சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்திக்கிறார்!
செனனை: சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நாளை காலை 10.30 மணிக்கு ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். ஆனால் அரசியலில் இறங்கவே இல்லை. ஆனால் அதநேரம் மன்ற நிர்வாகிகளை அழைத்து அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார்.
பாஜகவுக்கு ஆதரவு
இதேபோல் ஒவ்வொரு பிரச்சனையிலும் தனது கருத்தையும் தெரிவித்து வந்தார். ஆனால் ரஜினியின் கருத்துக்கள் பல பாஜகவுக்கு ஆதரவாக இருந்த காரணத்தால் அவர் பாஜகவில் சேரப்போவதாக கூட தகவல்கள் பரவியது. இதேபோல் பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பார் என்றும் கூறப்பட்டது.ஆனால் இதை எல்லாம் திட்டவட்டமாக மறுத்தார்.
விவாதித்தார்
அண்மையில் ரஜினி காந்த் தனது மன்ற நிர்வாகிகளை சென்னை ராகவேந்திரா மண்டபத்திற்கு அழைத்து அரசியல் கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். அரசியல் நிலவரம், சடடசபை தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்துள்ளார். ஆனால் யாரும் விவாதித்ததை வெளியில் சொல்லக்கூடாது என்று எச்சரித்தார். இதனால் உள்ளே என்ன விவாதிக்கப்பட்டது என்பது தெரியவில்லை.
முக்கிய அறிவிப்பு
இந்நிலையில் வழக்கமாக ரஜினிகாந்த் பத்திரிக்கையாளர்களை அதிகாரப்பூர்வமாக சந்திக்க மாட்டார். அப்படியே அதிகாரப்பூர்வமற்ற சந்திப்பாக இருந்தால் அது போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தின் முன்பு தான் நடக்கும். அதுவும் ஏதேச்சையாகவே நடக்கும். ரஜினிகாந்த் கடைசியாக தனது மன்ற நிர்வாகிகளை சந்தித்த போது போயஸ் கார்டன் இல்லம் முன்பு நின்றபடி தான் பேட்டி அளித்தார். அப்போது ஒரு விஷயத்தில் ஏமாற்றம் என்று சொன்னவர் என்ன விஷயம் என்று சொல்லவில்லை. இது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்தது.
எப்போது அரசியல்வாதி
இது ஒருபுறம் எனில் ரஜினி அரசியலுக்கு வரப்போவது மற்றும் முதல்வர் பதவிக்கு யாரை அறிவிப்பார் என பலவறான ஊக செய்திகள் , தகவல்களே அண்மைக்காலமாக ஊடங்களில் வழிந்தோடுகின்றன. ரஜினி இதுவரை கட்சியே ஆரம்பிக்காத நிலையில் இதுவரை பல ஊகங்கள் பரவி வருகிறது. 24 வருடமாக அரசியல் பேசும் ரஜினி அரசியல்வாதியாக எப்போது மாறுவார் என எதிர்பார்ப்பு உள்ளது.
சென்னையில் சந்திப்பு
இந்த சூழ்நிலையில் அரசியல் பிரவேசத்தை ரஜினி அறிவித்த கடந்த இரண்டு வருடங்களில் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் லீலா பேலஸ் நட்சத்திர ஓட்டலில் பத்திரிக்கையாளர்களை சந்திப்பதாக அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது அரசியல் கட்சி தொடங்குவது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.