வாயால் வடை சுட்ட.. தமிழருவிகளும், அர்ஜுன்களும்.. புரட்டி போட்ட பெரிய தலை.. புரண்டு போன குட்டி தலைகள்
சென்னை: உண்மையிலேயே ரஜினி ரசிகர்களை விட மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது.. "ரஜினி வர மாட்டார்" என்று யார் சொல்லியும் நம்பாத அவர்களுக்கு கடைசியில் அவர்களது தலைவரே வந்து "நான் வரலை" என்று சொல்லி விட்டுப் போனதுதான் பெரும் ஏமாற்றமாகப் போய் விட்டது.!
இவர்களை விட மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் ரஜினிகாந்த் பின்னாடியே சுற்றிச் சுற்றி வந்த "குட்டித் தலைவர்"கள்தான். ரஜினியை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்தவர்கள் இவர்கள்தான். ரஜினி நிச்சயம் வருவார் என்ற நம்பிக்கையில் பல மனக் கோட்டைகளையும் கட்டி வைத்திருந்தவர்கள் இவர்கள்தான்.
இந்த லிஸ்ட் மிக மிகப் பெரியது. தமிழருவி மணியன், ஏ.சி.சண்முகம், அர்ஜூன் சம்பத், கராத்தே தியாகராஜன், பல "மூத்த" பத்திரிகையாளர்கள் என இந்த லிஸ்ட்டை எடுத்தால் மிக மிக நீளமானது.. அத்தனை பேரும் அப்படியே அதிர்ச்சியில் சமைந்து போயுள்ளனர்.
நம்பிக்கை
பலருக்கும் கடைசி நம்பிக்கையாக இருந்தவர் ரஜினி.. ஆனால் கடைசி வரைக்கும் அந்த நம்பிக்கை ரஜினிக்கு வரவில்லை என்பதுதான் ஆச்சரியமானது. அதேசமயம், அவர் தனக்கான பஸ்ஸை தவற விட்டு விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு நல்ல "கண்டக்டராக" இருந்த ரஜினிகாந்த், தனது "பஸ்ஸை" தவற விட்டு விட்டு "தப்புத் தாள"மாக மாறிப் போனது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.
அதிசய ராகம்
அரசியலுக்கு மட்டும் ரஜினிகாந்த் வந்திருந்தால் நிச்சயம் அவர் ஒரு "அதிசய ராகம்.. அபூர்வ ராகமாக" இருந்திருப்பார்.. அதில் சந்தேகமே இல்லை.. ஆனால் இப்போது அல்ல.. பல வருடங்களுக்கு முன்பு அது நடந்திருக்க வேண்டும். அப்போது வந்திருந்தால் நிச்சயம் ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் "தனிக்காட்டு ராஜா"வாக இருந்திருப்பார்.. அதிலும் டவுட்டே தேவையில்லை.
காலத்தின் கோலம்
ஆனால் அட்டானா பாட வேண்டிய நேரத்தில் ஆனந்த பைரவியைப் பாடப் போக அது அலங்கோலமாகி விட்டதை காலத்தின் கோலம் என்றுதான் சொல்ல வேண்டும். ராகங்கள் பதினாறு என்று பாடி நடித்த "தில்லுமுல்லு" நாயகனின் இந்த டைமிங் மிஸ் ஆனதால் இன்று அவரை நம்பியிருந்த பலரும் முஹாரி பாடிக் கொண்டுள்ளனர்.. சோகத்தில்.
தமிழருவி மணியன்
தமிழருவி மணியன்.. இவர்தான் ரொம்ப நம்பியிருந்தார்.. ரஜினி வருகிறார்.. திட்டமிட்டபடி 31ம் தேதி அறிவிக்கிறார் என்று கடைசி வரை வாய் வலிக்காமல் சொல்லியவர் அவர்தான். இவரது நிலைதான் ரொம்பப் பரிதாபமானது, கஷ்டமானது. ரஜினியை விட இவரைத்தான் இப்போது பலரும் விமர்சிக்கின்றனர். இதனால்தான் நான் போறேன் போங்க என்று கோபித்துக் கொண்டு போய் விட்டார் மணியன்.. அவரது வேதனை இருக்கே அந்த வேதனை.. வார்த்தையால் விவரிக்க முடியாத வேதனை அது.!
காங்கிரஸ்
அதேபோலத்தான் இன்னொருவர் கராத்தே தியாகராஜன். இவரெல்லாம் ரஜினியை ஒரு முதல்வர் போலவே பார்க்க ஆரம்பித்து அவருடன் வலம் வந்தவர். ரஜினிதான் அடுத்த முதல்வர்.. அடுத்தடுத்து இதெல்லாம் நடக்கப் போகுது என்று ரொம்ப நம்பிக்கையாக இருந்தவர், பேசிக் கொண்டிருந்தவர். ரஜினியை நம்பி காங்கிரஸை கூட துரத்தி விட்டு வந்தவர். ஆனால் இன்று எங்கு போவது, அடுத்து என்ன செய்வது.. காங்கிரஸ் பக்கமே ஒதுங்கலாமா என்ற குழப்பத்துக்குப் போய் விட்டார்.
கராத்தே தியாகராஜன்
உண்மையில் ரஜினி மட்டும் அரசியலுக்கு வந்திருந்தால் கராத்தே தியாகராஜன் போன்றவர்கள் அவருக்கு மிகப் பெரிய பலமாக இருந்திருப்பார்கள். எப்படி மறைந்த வெற்றிவேல் தினகரனுக்கு உறுதுணையாக இருந்தாரோ அதேபோல கராத்தேவும் திகழ்ந்திருப்பார். எல்லாம் போச்சு!
மூத்த பத்திரிகையாளர்கள்
இவர்கள் மட்டுமா சில "மூத்த பத்திரிக்கையாளர்"களும் கூட ரஜினி ரசிகர்களாக மாறி வாய் வலிக்க வலிக்க அவருக்காக "பேட்" செய்து கொண்டிருந்தனர்.. ஆனால் பாருங்க.. அவர்களுக்கு நோ பால் போட்டு அத்தனை பேரையும் அவுட்டாக்கி விட்டார் ரஜினி.. தானும் டக் அவுட் ஆகி விட்டார். இதை சத்தியமாக அந்த மூத்த பத்திரிக்கையாளர்கள் யாருமே எதிர்பார்க்கவில்லை.. அதுதான் பெரிய தமாஷ்!
பொய்கள்
இதை விட கொடுமை சில யூடியூபர்கள் செய்த பில்டப்தான்.. ரஜினி ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் கார்டுக்கு இத்தனை ஆயிரம் தருவார்.. ரஜினி வந்தால் இதெல்லாம் நடக்கும்.. ரஜினி உட்கார்ந்தால் அதெல்லாம் நடக்கும் என்று வாயாலேயே வடை சுட்டு அள்ளி அள்ளி பொய்களை வீசி வந்தனர். அவர்களுக்கும் பெரிய போர்வையை எடுத்து தலையில் போர்த்தி விட்டுப் போய் விட்டார் ரஜினி.. இனிமேலாவது அவர்கள் உண்மை பேசி வாழ்வார்களா என்று பார்க்க வேண்டும்.
கணக்கு சரியா வரும்
ஆக மொத்தம் 2020ல் கொரோனா ஒரு பக்கம் பலரின் வாழ்க்கையை புரட்டி விட்டுப் போக.. மறுபக்கம் இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்களும் சிலரின் வாழ்க்கை போக்கையே டைவர்ட் பண்ணிட்டு போயிருச்சு.. இதை விதி என்பதா அல்லது சதி என்பதா அல்லது மதிக்கும் எட்டாத கதி என்பதா.. புரியலையே ஒன்னுமே புரியலையே! ஆனால், ஒன்னு மட்டும் நிச்சயம்ங்க... கிடைக்கனும் இருக்கிறது கிடைக்கும்.. கிடைக்காதது கிடைக்காது.. இதுவும் ரஜினி சொன்ன டயலாக்தான்.. கூட்டிக் கழிச்சு பாருங்க.. கணக்கு சரியா இருக்கும்.. !