நாம் அவசியம் சந்திப்போம்... சித்த மருத்துவர் வீரபாபுவை அழைத்து பாராட்டிய ரஜினிகாந்த்
சென்னை: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சித்த மருத்துவர் வீரபாபுவை தொலைபேசியில் அழைத்து பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவரது சேவையை பாராட்டியுள்ளார்.
மேலும், நாம் அவசியம் சந்திப்போம் என்றும் சித்த மருத்துவர் வீரபாபுவிடன் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.
இது கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் சித்தமருத்துவர் வீரபாபு மற்றும் அவரது குழுவினருக்கு உற்சாகத்தை அளித்துள்ளது.
எதை மறைப்பது என்று விவஸ்தை இல்லையா.. ஒருவர் செய்த தப்பு.. சேலத்தில் ஒரே தெருவில் 21 பேருக்கு கொரோனா
மருத்துவர் வீரபாபு
கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகமாக பரவி வரும் சூழலில், அதனை கட்டுக்குள் வைக்கும் முயற்சியில் சித்த மருத்துவர் வீரபாபு ஈடுபட்டுள்ளார். சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு தனது குழுவினருடன் செல்லும் வீரபாபு மூலிகை தேநீர், கபசுரக் குடிநீர் போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மருந்துகளை பொதுமக்களுக்கு விநியோகித்து வருகிறார். இது மட்டுமல்லாமல் கொரோனா நோயாளிகளுக்கும் சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வருகிறார்.
மாநகராட்சி நிர்வாகம்
சென்னை மாநகராட்சி நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து களத்தில் இறங்கி மருத்துவத் தொண்டு ஆற்றிவருகிறார் சித்த மருத்துவர் வீரபாபு. மற்றவர்களை போல் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும், வெறுமனே ஆலோசனைகளை மட்டும் கூறிவிட்டு ஒதுங்கிக்கொள்ளாமல், கொரோனா பெருந்தொற்றில் இருந்து மனித சமூகத்தை காக்க வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். இதற்காகத் தான் நடிகர் ரஜினிகாந்த் அவரை அழைத்து பாராட்டியுள்ளார்.
பாராட்டுகள்
சித்த மருத்துவர் வீரபாபுவிடம் தொலைபேசியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ''கொரோனா நோயாளிகளுக்கு நல்லது செய்கிறீர்கள், பாராட்டுக்கள்; நாம் அவசியம் ஒருநாள் சந்திப்போம்'' எனக் கூறியுள்ளார். ரஜினிகாந்த் அழைத்து பாராட்டியது சித்த மருத்துவர் வீரபாபுவிற்கும் அவரது குழுவினருக்கும் பெரிய உற்சாகத்தை அளித்துள்ளது. கொரோனாவுக்கு ஆங்கிலத்தில் இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் சித்த மருத்துவத்தின் மீது மக்களின் கவனம் திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
வீரபாபுவிடம் ஒப்படைப்பு
சென்னையில் ஜவஹர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வார்டை சித்த மருத்துவர் வீரபாபுவிடம் ஒப்படைத்துள்ளது சென்னை மாநகராட்சி. நோயாளிகளுக்கு கொரோனா வார்டில் இருக்கிறோம் என்ற எண்ணத்தை களையச் செய்து இயற்கை முறையிலான மூலிகை பொருட்களை கொண்டு சிகிச்சை தருகிறார் வீரபாபு. இதனிடையே இவர் சென்னையில் பல வி.ஐ.பி.களுக்கும் சித்த மருந்து கலவையை அளித்து வருகிறார்.