மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பா? ரஜினிகாந்த் அளித்த 'அசத்தல்' பதில்
Recommended Video
சென்னை: மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வருவாரா என்ற நிருபர்களின் கேள்விக்கு அசத்தலாக ஒரு பதிலை அளித்தார் நடிகர் ரஜினிகாந்த்.
லோக்சபா தேர்தலுக்கு சில மாதங்கள் முன்பாக நிருபர்களிடம் பேட்டியளித்த நடிகர் ரஜினிகாந்த்திடம், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மெகா கூட்டணியை அமைத்து உள்ளார்களே என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த ரஜினிகாந்த், ஒருவருக்கு எதிராக நிறைய பேர் ஒன்று திரண்டால் யார் பலசாலி என்பதை நீங்களே புரிந்து கொள்ளலாம் என்று தெரிவித்தார். இதன்மூலம் நரேந்திர மோடியை பலசாலி என்று அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.
சட்டசபை தேர்தலில் அரசியல் பிரவேசம்.. ரஜினிகாந்த் அதிரடி அறிவிப்பு
பலசாலி
அதேநேரம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட ஹிந்தி பேசும் முக்கிய மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது பேட்டியளித்த ரஜினிகாந்திடம், அங்கெல்லாம் பாஜக தோல்வியுற்று காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், பாஜக மக்கள் நம்பிக்கை சற்று இழந்துள்ளதாக கருதுகிறேன் என்று ரஜினிகாந்த் தெரிவித்தார்.
யாருக்கு ரஜினிகாந்த் ஆதரவு
இவ்வாறு இருவேறு நிலைப்பாடுகளை ரஜினிகாந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது ஆதரவு யாருக்கு என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வம் அனைத்து தரப்பிலும் இருந்தது. இன்று சென்னையில் நிருபர்களை ரஜினிகாந்த் சந்தித்தபோது, நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற கேள்வியை நிருபர்கள் முன்வைத்தனர்.
நழுவல்
நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவாரா என்பது மே 23-ஆம் தேதி தெரிந்துவிடும் என்று கூறினார். அந்த தேதியில்தான் லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்காமல் இந்த கேள்விக்கு நைஸாக ரஜினிகாந்த் நழுவி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.
வாய்ஸ் இல்லையே
இந்த பேட்டியின்போது, சட்டசபை தேர்தல் நேரத்தில் அரசியலுக்கு வர உள்ளதாக ரஜினிகாந்த் தெரிவித்தார். லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவ்வாறு எதையும் அவர் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.