"கோடி கோடியா சொத்து குவிச்சு வச்சிருக்காங்களே.. யாராவது கேட்டீங்களா?" ரஜினி ரசிகர்கள் பாய்ச்சல்!
சட்டத்துக்கு உட்பட்டுதான் ரஜினி கோர்ட்டுக்கு சென்றார் என்கின்றனர் ரசிகர்கள்
சென்னை: "சூர்யா அன்னைக்கு சொன்னாரே, அது இதைதான்.. 30 நாட்கள் தொடர்ந்து ஒரு கட்டிடம் மூடி இருந்தால் வரி சலுகை அளிக்கலாம் என்று விதி இருக்கிறது.. அந்த விதிப்படியே ரஜினி கோர்ட்டை அணுகினார்.. இதிலென்ன தப்பு இருக்கிறது" என்று ரஜினி ரசிகர்கள் வினா எழுப்புகிறார்கள்.
ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரம் தொடர்பான விஷயம் நேற்றில் இருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.. மாநகராட்சியில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோர்ட் கருத்து சொன்னது.. அப்படித்தான் செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம் என்று ரஜினியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், ரஜினிக்கு ஆதரவான கருத்துக்களும் எழத்தான் செய்கின்றன.. இதுகுறித்து ஒருசில ரஜினி மன்ற நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:
தூத்துக்குடி டூ சொத்து வரி வரை.. பாடம் கற்றுக் கொண்டே இருக்கும் ரஜினி.. ஆனால்
வரி நிவாரணம்
"சட்டப்படி 30 நாளுக்கு மேலாக காலியாக இருக்கும் மண்டபத்துக்கு வரி நிவாரணம் கேட்க சம்பந்தபட்டவருக்கு உரிமை உண்டு.. அதனால்தான் சட்டப்படி வரி நிவாரணம் கேட்டு நோட்டிஸ் அனுப்பியிருக்கிறார்.. இதில் 22 நாட்களாகியும் மாநகராட்சியிடமிருந்து எந்த பதிலும் இல்லை.. அதனால்தான் கோர்ட்டை அணுக வேண்டியதா போயிற்று.
பதில்
கோர்ட்டில் ஏன் எங்களுடைய நேரத்தை வீணடிக்கிறீர்கள்... ஏன் இவ்ளோ அவசரம்? அவங்ககிட்டையே போய் கேளுங்க என்று சொல்லுகிறது... இதுதான் பிரச்சனை.. அங்கே பதில் இல்லைன்னுதானே கோர்ட்டுக்கே வர்றாங்க.. திரும்பவும் அவங்ககிட்டே போய் கேளுங்க என்று சொல்லலாமா?
வரி தள்ளுபடி
இந்த விஷயத்தை அரசு ஏதாவது முன்கூட்டியே செய்திருக்கணும்.. 6 மாசமா மண்டபங்கள் எல்லாம் பூட்டிதானே இருந்தது? வருமானம் இல்லைன்னு தெரியும் தானே? அப்படி என்றால், வருமானமில்லாத கட்டிடங்களுக்கு வரி தள்ளுபடி செய்திருக்க முன் வந்திருக்கணும்.. ரஜினியை சோஷியல் மீடியாவில் கிண்டல் அடிக்கிறார்கள்.. ரஜினியிடம் இல்லாத காசா? கோடிக்கணக்கில் வருமான வரி செலுத்துபவர் ரஜினிகாந்த்... 45 வருடங்களில் 400 கோடி சம்பாதித்து அதற்கு முறையாக வரிகட்டியும் இன்று இந்த பேச்சுதான்!
ரஜினிகாந்த்
எதையும் சட்டப்படி போக வேண்டும் என்றுதான் அவர் நினைத்தார்.. இது எப்படி தவறாகும்? 22 நாள் ஏன் பதில் தராமல் அமைதியாக இருந்தாங்க என்பதற்கு யாரும் இதுவரை பதில் சொல்லவில்லை? ரஜினிக்கே இந்த கதி என்றால், சாமான்யனுக்கும் இதுதானே பதில்? மூடப்பட்டிருந்தால் வரிவிலக்கு உண்டு.. பொதுவாக, வழக்கு நிலுவையில் இருந்தால் அரசு தலையிடாது... 30 நாட்கள் தொடர்ந்து ஒரு கட்டிடம் மூடி இருந்தால் வரி சலுகை அளிக்கலாம் என்று விதி இருக்கிறது.. ரஜினி கேட்டது வெறும் 50 % வரி சலுகையே. இன்னும் ஒரு மாதம் கழித்து சென்றால் என்ன செய்து இருப்பரோ? அதையே தற்போதும் செய்து இருக்கலாம்.
சீல் வைக்கிறது
எத்தனையோ அரசியல் தலைவர்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்தது எப்படி என்று யாரும் ஏன் கேட்கவில்லை? முன்னாள் முதல்வரின் தோழி சொத்தில் ஒரு பகுதி 2000 கோடி மத்திய அரசு சீல் வைக்கிறது. இதையும் யாரும் கேட்கவில்லையே.. 40 ஆண்டுகளுக்கு மேல் மாறி மாறி ஆட்சி செய்தவர்களின் சொத்து ஐந்து லட்சம் கோடிக்கு மேல்.. மாநிலஅரசின் கடனும் அதே தொகைதான்.. இதையெல்லாம் யாரும் கேட்க மாட்டாங்களா? சட்டப்படி நடந்தும் ஒருவருக்கு இதுதான் கதியா?" என்று பொங்கிவிட்டனர்.