பிசாசுத்தனமான அடி.. ஆரோக்கியம் போச்சுன்னா.. வாழ்க்கையே போச்சு.. ரஜினி திடீர் அட்வைஸ்!
ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினி அட்வைஸ் தந்துள்ளார்
சென்னை: "அடிபட்ட உடனேயே வலி தெரியாது... நமக்கு பட்டிருக்கும் அடி சாதாரண அடி இல்லை.. பிசாசுத்தனமான அசுர அடி.. ஆரோக்கியம்தான் முக்கியம்.. ஆரோக்கியம் போச்சுன்னா வாழ்க்கையே போச்சு" என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அட்வைஸ் தந்துள்ளார்.
எந்தவித இயற்கை சீற்றம் ஏற்பட்டாலும் மக்களுக்கு ஓடோடி வந்து உதவி கொண்டு வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.. தண்ணீர் பிரச்சனை வந்தாலும் சரி, மாவட்டங்களில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் லாரிகளில் தண்ணீர் ஏற்றி கொண்டு வந்து பொதுமக்களுக்கு உதவுவார்கள்.
அந்த வகையில் இப்போது தமிழகத்தை கொரோனா உலுக்கி எடுத்து வருகிறது.. அதனால் பொதுமக்களுக்காக கொரோனா பாதித்தவர்களுக்கு பல்வேறு நிவாரணங்களை ரஜினி மன்றத்தினர் வழங்கி வருகின்றனர். இவர்களுக்கு ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளதுடன், உடல்நிலை குறித்த அட்வைஸ் ஒன்றையும் கூறியுள்ளார். இது தொடர்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
எந்த மாதிரி ஊதிய பிடித்தம் ஊழியர்களுக்கு நல்லது.. எப்படி சேமிக்கலாம்? நம்ம வாசகர் சொல்வதை பாருங்க
அந்த அறிக்கையில், "கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டு கொண்டிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும், எனது உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்து கொள்கிறேன்.
அடிபட்ட உடனேயே வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கதிகலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி.இப்போதைக்கு இது தீராது போல் தெரிகிறது. இதனுடையே வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்கு பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் மாஸ்க் அணியாமலும் இருக்காதீர்கள். ஆரோக்கியம் போச்சுன்னா! வாழ்க்கையே போச்சு!" என்று தெரிவித்துள்ளார்.
ரஜினியின் இந்த அறிக்கையை பார்த்ததும் ரசிகர்களுக்கு மேலும் பூஸ்ட் கிடைத்தது போல ஆகிவிட்டது.. களப்பணியில் வீரியம் குறையாமல் விறு விறு பணியாற்றி வருகின்றனர்.