ஆஹா.. இது அதுல்ல.. ரஜினிகாந்த் பேட்டியால் குஷியில் திமுக கூட்டணி.. கலக்கத்தில் அதிமுக கூட்டணி!
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று கூறிய ஒரு கருத்து அவரின் பழைய பாஜக ஆதரவு நிலைப்பாட்டை அப்படியே எதிரொலிப்பதாக உள்ளது. ஆனால், அங்குதான் திமுகவினர் மகிழ்ச்சியடைய ஒரு விஷயமும் ஒளிந்து கிடக்கிறது.
ஒரு வித்தியாசம் என்னவென்றால், முன்பு ரஜினிகாந்த், தனது நிலைப்பாட்டை, நேரடியாக சொன்னார். இப்போது மறைமுகமாக கூறியுள்ளார்.
ரஜினிகாந்த்தின் இந்த நிலைப்பாட்டை அறிந்து கொள்ள ஒரு சிறு பிளாஷ் பேக்கை நீங்கள் பார்க்க வேண்டும். 2004ம் ஆண்டு கால கட்டம் அது. தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன.
எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.. ஆதரவு கேட்ட கமலுக்கு ரஜினியின் நாசுக்கான பதில்
ரஜினிகாந்த் அறிக்கை
அப்போது ரஜினிகாந்த் ஒரு அறிக்கையை வெளியிட்டார். அதில் கூறிய வார்த்தைகளை பாருங்கள்: பல காரணங்களுக்காக இந்த நாடாளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்னை தண்ணீர்ப் பிரச்னை. இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான், இந்தக் கடுமையான பிரச்னை தீரும். நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப் போவது தமிழ்நாடுதான்.
ஒரு கோடி பணம்
நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயமே. மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். இந்தத் தேர்தலில் மத்தியில் அமரப் போவது வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். இது உறுதி.
ரஜினிகாந்த் ஓட்டு பாஜகவுக்கு
என்னைப் பொறுத்தவரையில், இந்திய நாட்டின் முக்கியப் பிரச்னையான தண்ணீர்ப் பிரச்னைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஓர் உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில், இரண்டு நாள்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் தேர்தல் அறிக்கையில், `தண்ணீர்ப் பஞ்சத்தைத் தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம்' என்று உறுதியாகச் சொல்லியிருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதைச் செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆகவே, இந்த லோக்சபா தேர்தலில், தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணிக்குதான் என் ஓட்டு. இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
வெற்றி நிச்சயம்
இன்று ரஜினிகாந்த் அளித்த பேட்டியிலும், நதிநீர் இணைப்பு விவகாரம், குறித்து பேசியுள்ளார். நதிநீர் இணைப்பு குறித்து பாஜக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதை பாராட்டியுள்ளார். மறுபக்கம், தனது அரசியல் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்றும் ரஜினிகாந்த் கூறியுள்ளார். இதன் மூலம், எப்படியாவது ரஜினிகாந்த் வாய்சை வாங்கிவிட வேண்டும் என்று துடித்த பாஜக தலைமைக்கு வெற்றி கிடைத்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். ஆனால் 2004 தேர்தலில் ரஜினிகாந்த் இப்படி ஒரு அறிக்கை வெளியிட்ட தேர்தலில்தான், அதுவும், " வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசுதான். இது உறுதி", இப்படி ரஜினிகாந்த் சொன்ன அந்த தேர்தலில் என்ன ரிசல்ட் கிடைத்தது தெரியுமா.
தேர்தல் ரிசல்ட்
2004 லோக்சபா தேர்தலில் திமுக - காங்கிரஸ் - இரண்டு இடதுசாரி கட்சிகள், பாட்டாளி மக்கள் கட்சி, மதிமுக - என்ற மெகா கூட்டணி அமைந்தது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகள் அனைத்திலும் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமோகமாக வெற்றி பெற்றது. அதிமுக-பாஜக கூட்டணி முட்டை வாங்கியது. இப்போது மீண்டும் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதனால், உண்மையிிலேயே திமுகவினர்தான் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பின்ன.. 2004 வரலாறு நினைவுக்கு வரும்தானே!