கட்சி துவங்கும் வேலை 90 சதவீதம் முடிந்துவிட்டது.. ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி
Recommended Video
சென்னை: கட்சி ஆரம்பிக்கும் பணிகளில் 90 சதவீதம் நிறைவடைந்துவிட்டதாக நடிகர் ரஜினிகாந்த் இன்று தெரிவித்தார்.
'பேட்ட' திரைப்பட சூட்டிங் நிறைவு பெற்றுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு ரஜினிகாந்த் பதிலளித்தார்.
அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது: பேட்ட என்பது முழு பொழுதுபோக்கு திரைப்படம். டிசம்பரில் கட்சி அறிவிப்பு வெளியாகாது. கட்சி ஆரம்பிப்பதற்கான 90 சதவீத வேலைகள் தயாராக உள்ளது. நேரம், காலம் பார்த்து, நான் கட்சி அறிவிப்பை வெளியிடுகிறேன்.
நாடாளுமன்ற தேர்தல், அறிவிக்கும்போது எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும், பேட்ட திரைப்படத்திலிருந்து ஒரு டயலாக்கை சொல்லி காட்டுமாறு நிருபர் ஒருவர் கூற, அதற்கு 'பேட்ட பராக்' என கூறி கிளம்பினார் ரஜினிகாந்த்.
முன்னதாக நேற்று வெளியிட்ட ட்வீட்டில், திட்டமிட்டதைவிட 16 நாட்கள் முன்பாக பேட்ட சூட்டிங் நிறைவு பெற்றுவிட்டதாகவும், இதற்காக தயாரிப்பு தரப்பான சன் பிக்சர்ஸ் உட்பட படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
கமல்ஹாசனால் உடைகிறதா திமுக-காங்கிரஸ் கூட்டணி? அதிமுக, பாஜக குஷி
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கி வரும் 2.O திரைப்படமும், பேட்ட திரைப்படமும் ரிலீஸ் ஆன பிறகு ரஜினிகாந்த் கட்சி பெயரை அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.