சத்தமில்லாமல் சாதித்த திமுக.. வெறுத்தே போன ரஜினி ரசிகர்கள்.. யார் பக்கம் சாய்வாங்க!
ரஜினியின் முடிவினால் விஜய் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுகிறது
சென்னை: ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்ற அறிவிப்பை அடுத்து, திமுகவுக்கு இந்த முடிவு சாதகமாக அமையுமா? ரஜினி ரசிகர்கள் திமுகவில் இணைவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
"ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதால், திமுகவுக்குத்தான் முதல் பாதிப்பு.. ஏனென்றால், ரஜினியின் ரசிகர்கள் பெரும்பாலானோர் திமுகவுக்குத்தான் ஓட்டுப் போடுகிறார்கள்.." என்று ஒருமுறை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சொல்லி இருந்தார்.
அவர் அன்று சொன்னதை இன்று கருத்தில் கொள்ள வேண்டி உள்ளது. . 10 வருஷமாக ஆட்சியை பிடிக்க போராடி வரும் திமுகவுக்கு இந்த முறை அதிக தலைவலியை தந்தது அதிமுகவைவிட ரஜினியின் வருகைதான்.
பேச்சுவார்த்தை
அதனாலேயே ரஜினிக்கு மறைமுகமான வேண்டுகோள், மறைமுகமான எச்சரிக்கை, மறைமுகமான பேச்சுவார்த்தைகள் என திமுக தரப்பில் எல்லாமே நடந்ததாகவும் சொல்லப்பட்டது.. இதற்கு காரணம், ஆன்மீக அரசியல் என்ற விவாதம்தான்.. ஆரம்பத்தில், ஆன்மீக அரசியல் என்று சொன்னபோது, இது திமுகவுக்கு எதிரான ஒரு வாசகமாகவே பார்க்கப்பட்டது.. பிறகுதான், ஒட்டுமொத்த திராவிட கட்சிகளுக்கும் அதாவது திராவிட அரசியலுக்கு எதிரானது ஆன்மீக அரசியல் என்ற அர்த்தம் புரிந்தது..
திமுக
இதுதான் திமுகவுக்கு கலக்கத்தை தந்தது.. அதனாலேயே ரஜினியின் அரசியல் வருகையை திமுக விரும்பவில்லை.. அதேசமயம், ரஜினி ஆரோக்கியத்துடன், நன்றாக இருக்க வேண்டும் என்று திமுக தலைமை விரும்பியதையும் இங்கு நினைவுகூர வேண்டியுள்ளது.. எத்தனையோ விமர்சனங்களை திமுகவினரும், ரஜினி ரசிகர்களும் காட்டமாக ஒருவருக்கொருவர் வெளிப்படுத்தி கொண்டாலும், ரஜினியும், ஸ்டாலினும் எந்தவித வார்த்தை மோதலிலும் ஈடுபடவில்லை, நட்பின் மேலாண்மை இவர்களிடம் அடிக்கடி வெளிப்பட்டது.
விரோதம்
ஆனால், ரஜினி ரசிகர்கள் அப்படி இல்லை.. திமுகவை நேர் விரோதமாக பார்த்தார்கள்.. எந்த ஒரு ரஜினியின் அறிவிப்பையும் அண்ணா அறிவாலயம் முன்பு கொண்டு போய் போஸ்டர் அடித்து ஒட்டி வந்தனர். ரஜினியை கடைசி வரை அவர்கள் நம்பினர். வெறும் படத்திற்காக மட்டுமல்லாமல் தலைவர் அரசியலுக்கு வர வேண்டும். நம்மைக் கேலி செய்தவர்கள் முகத்தில் கரியைப் பூச வேண்டும். மக்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்று அதிகம் எதிர்பார்த்தவர்கள் அவர்கள்தான். ரஜினியை விட அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரொம்பவே ஆசைப்பட்டவர்கள் அவர்கள்தான்.
விளக்கம்
மற்றொரு பக்கம், ரஜினியின் அரசியல் வருகையால் நொந்து போன ரசிகர்கள், இதே திமுகவில் இணைந்த நிகழ்வுகளும் உண்டு.. "மக்களுக்காக செயல்படும் நோக்கில்தான் ரஜினி மக்கள் மன்றத்தில் இணைந்தோம்... ஆனால் இப்போது அது செயல்படாத இயக்கமாக இருக்கிறது.. அதனால் மக்களுக்காக செயல்படும் இயக்கமாக திமுக இருப்பதால், திமுகவில் இணைந்திருக்கிறோம் என்று அவர்கள் ஒருமுறை விளக்கமும் தந்திருந்தனர்.
வாய்ப்பு
இந்நிலையில், ரஜினி இப்போது அரசியலுக்கே வரபோவதில்லை என்ற முடிவால், இன்னும் ஏராளமான ரசிகர்கள், திமுகவில் இணைய வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.. அதேபோல, பெரும்பாலான நிர்வாகிகள் திமுக பக்கம் போகக் கூடிய வாய்ப்புகளை நாம மறுக்க முடியாது. காரணம், இவர்களை கடந்த சில கூட்டங்களாக ரஜினிகாந்த் கடுமையாக விமர்சித்து வந்தார். காசு வாங்கிக் கொண்டு செயல்படுகிறீர்கள் என்றே அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார். எனவே அவர்கள் நிச்சயம் கட்சி மாறக் கூடும்.
ரஜினி மன்றம்
மாவட்ட செயலாளர்கள், மன்ற நிர்வாகிகள் நிச்சயம் கட்சி மாறி வரும் சட்டசபைத் தேர்தலில் பிற கட்சிகளுக்காக செயல்படுவார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோன்ற சூழலில் பெரும்பாலும் அடுத்து ஆட்சிக்கு யார் வர வாய்ப்பிருக்கோ அந்தக் கட்சியுடன் இணைந்து செயல்படுவதே வழக்கம்.
நிம்மதி
அந்த வகையில் பலரும் திமுகவே அடுத்து ஆட்சியமைக்கும் என்று பேசி வருவதால் திமுகவுடன் ரஜினி மன்றத்தினர் கை கோர்க்க வாய்ப்புகள் அதிகம். அத்துடன் சிறுபான்மை ஓட்டுக்களை ரஜினி பிரித்து விடக்கூடும் என்று திமுகவின் பயமும் தற்போது நீங்கியிருக்க கூடும் .. மொத்தத்தில் ரஜினி முடிவால் அண்ணா அறிவாலயம் நிம்மதி பெருமூச்சை விட்டுக் கொண்டிருக்கிறது