"இது எம்ஜிஆர், ஜெ. காலம் கிடையாது.." ரஜினி அரசியல் பின்னணியில் யார் தெரியுமா? திருமாவளவன் பொளேர்
சென்னை: ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதன் பின்னணியில், பாஜக இருக்கலாம் என்று, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தேகம் வெளிப்படுத்தியுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இதுகுறித்து கூறியதாவது: வருவார், வருவார் என்று பல பத்து ஆண்டுகளாக காத்துக் கிடந்த நிலையில் இப்போது துணிந்து ஒரு முடிவை எடுத்துள்ளார் ரஜினிகாந்த்.
உடல் நலம் கருதி அரசியலுக்கு வர வாய்ப்பு இல்லை என்று தகவல் வெளியானபோது அவர் உடல்நிலை முக்கியமானது, அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது முதன்மையானது என்று நான் கருத்து கூறியிருந்தேன்.
தமிழக மக்களுக்காக என் உயிர் போனாலும் சந்தோஷம்தான்.. அரசியலுக்கு வருவது உறுதி- ரஜினிகாந்த் பேட்டி
அதீத நம்பிக்கை
இந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் கட்சி துவங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். முதலில் அதை வரவேற்கவும், வாழ்த்தவும் கடமைப்பட்டுள்ளேன். மிக குறுகிய காலத்தில் கட்சியை தொடங்கி ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த முடியும் என்று ரஜினிகாந்த் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது அவரது தன்னம்பிக்கை என்பதை விட அதீத நம்பிக்கை என்று சொல்லலாம்.
சினிமா கவர்ச்சி
எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அரசியலில் இருந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்கள் பெரிய அளவில் இல்லை. அரசியல் விழிப்புணர்வும், ஒப்பீட்டளவில், இப்போது இருக்கக்கூடிய அளவில் அப்போது இல்லை. சினிமா கவர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்ட காலகட்டம் அது. இப்போதைய காலகட்டம் மற்றும் அரசியல் சூழ்நிலை என்பது, சினிமா கவர்ச்சி அதிகம் முக்கியத்துவம் தராத காலக்கட்டம்.
ஆன்மீக அரசியல்
சினிமா கவர்ச்சி ஒன்றே போதுமானது என்ற அடிப்படையில், ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி தேர்தலை சந்திக்க உள்ளார். தமிழக மக்கள் எந்த அளவுக்கு அவரை அங்கீகரிக்க உள்ளனர் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். அரசியல் வேறு, ஆன்மீகம் வேறு. இரண்டையும் ஒப்பிடுவது தவறு. ஆன்மீகத்தை பாஜக அரசியலுக்கு பயன்படுத்துகிறது.
மத நல்லிணக்கம் கெடுகிறது
இந்து மதம் அதிக அளவுக்கு சமீபகாலமாக விமர்சனத்துக்கு உள்ளாகிவருவதற்கு காரணம் பாஜகதான். அவர்களின் சுய நலத்தால்தான் இந்து மதம் அதிக விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. பல மதங்களுக்கிடையே நல்லிணக்கத்தை பாதிக்கச் செய்கிறது, வெறுப்பு அரசியலை ஏற்படுத்துகிறது. ரஜினிகாந்த் ஆன்மீகத்துக்கு என்ன வரையறை வைத்திருக்கிறார் என்பது தெரியவில்லை. மதம், ஜாதி அனைத்தையும் இணைத்துதான் ஆன்மீகத்தோடு பார்க்க வேண்டியதாக இருக்கிறது. அதை தவிர்த்துவிட்டு, பிரித்துவிட்டு எப்படி அரசியல் நடத்துவார் என்பது புரியவில்லை.
மதவெறி அரசியல் திணிப்பு
நேரடியாக, பாஜகவால் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ரஜினிகாந்த் மூலமாக மதவெறி அரசியலை திணிக்க பாஜக பார்க்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. தமிழகத்தில் பாஜகவுக்கு வரவேற்பு இல்லை. மதவெறி மீது தமிழக மக்களுக்கு வெறுப்பு இருக்கிறது என்பதால், தன்னை பாஜகவோடு இணைத்து அடையாளப் படுத்த கூடாது என்பதற்காகத்தான், காவி சாயம் பூசாதீர்கள் என்று ரஜினிகாந்த் முன்பு ஒரு விளக்கத்தை கொடுத்து இருந்தார் என்று தான் நான் பார்க்கிறேன். ஆனால், எப்போதுமே அவர் பாஜகவோடும், சங்பரிவார் அமைப்புகளுடனும் தொடர்பில் இருக்கிறார். உறவு வலுவாக இருக்கிறது. நேரடியாக பாஜக போணி ஆகாது என்பதை உணர்ந்து ரஜினிகாந்த் மூலமாக வேரூன்றச் செய்யலாம் என்று கணக்குப் போட்டுச் செல்கிறார்கள் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. இவ்வாறு திருமாவளவன் தெரிவித்தார்.