நீங்க வாங்க ரஜினி, எங்க ஆதரவு உங்களுக்கு தான்.. அதுவும் அண்ணா அறிவாலய வாசலிலேயே.. கடுப்பான திமுக!
சென்னை: திமுகவுக்கு சவால் விடும் வகையில் நேரடியாக அதன் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தின் வாசல் அருகிலேயே ரஜினியின் அரசியல் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வருவாரா இல்லையா? என்பது புரியாத புதிராக இருந்து வந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை மூலம் அவர் அரசியலுக்கு வருவதில் இருந்து ஒதுங்கிவிட்டதாக பலர் கருத தொடங்கி விட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரஜினி ரசிகர்கள், ஓட்டு போட்டால் தலைவர் ரஜினிக்குத்தான் என்ற டிரெண்ட் செய்து வருகிறார்கள். அத்துடன் ரஜினியை அரசியலுக்கு வருமாறு போஸ்டர் அடித்து ஓட்டி வருகிறார்கள், இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது,
அரசியலுக்கு வருவேன்
தமிழகத்தில் ஜெயலலிதா, கருணாநிதி மறைவுக்கு பிறகு 2017ல் கல்லூரி கூட்டம் ஒன்றில் பேசிய ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு நிச்சயம் வருவேன் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 2021 சட்டசபை தேர்தல் தான் இலக்கு என்றும் கூறினார். அதற்காக ரஜினி ரசிகர் மன்றத்தை ரஜினி மக்கள் மன்றமாக உருவாக்கினார். அடிக்கடி மன்ற நிர்வாகிகளை அழைத்து ஆலோசனையிலும் ஈடுபட்டார்.
அடுத்தடுத்து படங்கள்
ஆனால் அதேநேரம் வரிசையாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கபாலி, காலா, பேட்ட, தர்பார் என படங்களில் நடித்தார். முன்பைவிட இளமையாக தோன்றி அவர் நடித்த படங்களை பார்த்து குஷியான ரசிகர்கள், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அறிவிப்பு எதுவும் வெளியிடாமல் தொடர்ந்து படங்களில் நடித்ததை கண்டு ஏமாற்றமும் அடைந்தனர்.
அறுவை சிகிச்சை
இந்த சூழலில் நேற்று முன்தினம் ரஜினி பெயரில் ஒரு போலியான கடிதம் வெளியானது. அந்த கடிதத்தில் "மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ம் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். இந்த கொரோனா பிரச்னையால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. 2011-ம் ஆண்டு சிங்கப்பூரில் சிறுநீரக பாதிப்பும், 2016-ல் அமெரிக்காவில் மாற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.
அரசியல் வேண்டாம்
எனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் எனது அரசியல் பிரவேசத்தைப் பற்றி ஆலோசனை கேட்டேன். அதற்கு "தொற்று உங்களை எளிதில் தாக்கக்கூடிய வாய்ப்பு மிக அதிகம். அது உங்கள் சிறுநீரகத்தை மட்டுமல்ல, உங்கள் உடல்நலத்தையும் நிச்சயம் கடுமையாக பாதிக்கும். ஆகையால், இந்த கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்புகொண்டு அரசியலில் ஈடுபடுவதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்" என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்பதாக இருந்தது.
மக்களுக்கு தெரிப்பேன்
இந்நிலையில் இந்த கடிதம் குறித்து ட்விட்டரில் நேற்று கருத்து தெரிவித்த ரஜினி, "என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டிருக்கிறது. அது என்னுடைய அறிக்கை இல்லை என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல் நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப்பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்" என்றார்.
அரசியல் வேண்டாம்
இதன் மூலம் வயதை காரணம் காட்டி ரஜினி அரசியலில் இருந்து ஒதுங்கிவிட்டாரா என்று ரசிகர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் நேற்று முழுவதும் ட்விட்டரில் கேள்வி எழுப்பியபடி இருந்தனர். இந்நிலையில் ரஜினி ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு ஏமாற்றத்தை தந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் ஓட்டு போட்டால் தலைவர் ரஜினிக்குத்தான் என்று டிரெண்ட் செய்து வருகிறார்கள். அத்துடன் சென்னை உள்பட பல ஊர்களில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து போஸ்டரும் ஒட்டி வருகிறார்கள்.
அறிவாலயம் முன்பு போஸ்டர்
திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் முன்பு, ரஜினி ரசிர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். அந்த போஸ்டரில், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு, நீங்க வாங்க ரஜினி, எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான், ஓட்டுன்னு போட்ட ரஜினிக்குத்தான், இப்படிக்கு மாற்றத்தை விரும்பும் மக்கள்" என்பதாக உள்ளது. திமுகவின் தலைமை அலுவலகத்தின் வாயிலேயே ரஜினியை அரசியலுக்கு வர வேண்டும் போஸ்டர் ஒட்டியிருப்பது திமுகக்கு சவால் விடும் வகையில் இருப்பதாக கூறப்படுகிறது. அண்ணா அறிவாலய வாசலில் உள்ள இந்த போஸ்டரை தேனாம்பேட்டை சாலையில் போகிறவர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டே கடந்து செல்கிறார்கள்.