ரஜினி மக்கள் மன்றத் தலைமையிடம் சொல்லிவிட்டு திமுகவில் இணைந்த 3 மா.செக்கள் உள்பட 6 பேர்!
சென்னை: ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த 6 நிர்வாகிகள் திமுகவில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த 6 பேரில் ஒருவரான தூத்துக்குடி மாவட்டச் செயலாளரின் சென்னை முகவரியில் ரஜினிகாந்த் தனது கட்சியின் பெயரை பதிவு செய்து வைத்திருந்தார்.
Recommended Video
ரஜினி அரசியலுக்கு வருவார் என 25 ஆண்டுகளாக எதிர்பார்த்து வந்த நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு அவர் அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். இந்த நிலையில் 3 ஆண்டுகளாக எந்த ஒரு கல்லையும் அசைக்காமல் இருந்த நிலையில் கடந்த டிசம்பர் 3ஆம்தேதி அரசியலுக்கு வருவதாக அறிவித்தார்.
இதையடுத்து அண்ணாத்த படக் குழுவினருக்கு கொரோனா உறுதியான நிலையில் ரஜினிக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால்அவர் மருத்துவமனையில் 3நாட்கள் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பினார். இதையடுத்து தான் அரசியலுக்கு வரப் போவதில்லை என அறிவித்தார்.
கமல் பக்கம் திரும்பும் எம்ஜிஆர் ரசிகர்கள்.. திமுகவை நோக்கி ஓடும் ரஜினி ரசிகர்கள்
அதிருப்தி
இதனால் ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களும் கடும் அதிருப்தி அடைந்தனர். தான் அரசியலுக்கு வர இயலாது என்பதை ரஜினி மீண்டும் ஒரு காட்டமான அறிக்கை மூலம் வெளிப்படுத்தினார். இதனால் மாற்று கட்சியில் இணைய சிலர் முடிவு செய்தனர்.
திமுகவில் இணைந்த 6 பேர்
அதன்படி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் டாக்டர் ஏ.ஜோசப் ஸ்டாலின், இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் கே.செந்தில் செல்வானந்த், தேனி மாவட்டச் செயலாளர் ஆர்.கணேசன் மற்றும் தலைமைக்குழு, தொழில்நுட்ப அணி தலைவர் கே.சரவணன், இராமநாதபுரம் மாவட்ட இணைச் செயலாளர் ஏ.செந்தில்வேல், இராமநாதபுரம் மாவட்ட வர்த்தகர் அணி செயலாளர் எஸ்.முருகானந்தம் ஆகியோர் திமுகவில் இணைந்துள்ளனர்.
நியாயமானது
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த ஜோசப் ஸ்டாலின் கூறுகையில் நான் ஏற்கெனவே திமுகவில் இருந்தேன். அது போல் ரஜினி ரசிகர் மன்றத்திலும் இருந்தேன். ரஜினி கட்சி தொடங்குவார் என்பதால் அவருடன் பயணித்தேன். தற்போது அவர் கட்சி தொடங்காதது வருத்தம் அளித்தாலும் அவர் சொல்லும் காரணம் நியாயமானது.
தலைமையிடம் கூறினோம்
இதனால் நான் ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளேன். கட்சியில் சேருவதை நான் தலைமையிடம் கூறினேன். எந்த கட்சியில் சேர வேண்டும் என நினைக்கிறீர்களோ அதில் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறினர். இதனால் நான் ஏற்கெனவே இருந்த கட்சியான திமுகவில் தற்போது இணைந்தேன் என்றார்.
மாவட்டச் செயலாளர்
தூத்துக்குடி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக இருந்த ஏ. ஜோசப் ஸ்டாலினின் சென்னை முகவரியில்தான் ரஜினி தன் கட்சியை பதிவு செய்து வைத்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது இவர் உள்பட மாவட்ட செயலாளர்கள் விலகிய இந்த செய்தி ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.