ஆஹா.. இந்தி திணிப்பு பற்றிய ரஜினிகாந்த் கருத்துதான் பாஜகவின் கருத்தும்.. ராகவன் அதிரடி
Recommended Video
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த இந்தி தொடர்பான கருத்துதான் பாஜகவின் கருத்து என்று, பாஜக நிர்வாகி கே.டி.ராகவன் தெரிவித்துள்ளார்.
"நம்ம நாடு என்று கிடையாது.. எந்த நாடாக இருந்தாலும் பொதுவான ஒரு மொழி இருந்தால், அந்த நாட்டின் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கு நல்லது. ஆனால் துரதிஷ்டவசமாக நமது நாட்டில் பொதுவான ஒரு மொழியை அமல்படுத்த முடியாது. தமிழ்நாடு மட்டுமல்ல வட மாநிலங்களில் கூட இந்தியை பொதுவான ஒரு மொழியை ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலைதான் நமது நாட்டில் நிலவுகிறது." இவ்வாறு ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
இதுகுறித்து கே.டி.ராகவன் தெரிவிக்கையில், நாம் என்ன நினைக்கிறோமோ அதை தான் பிறர் பேச வேண்டும் என்று நினைப்பது சரியல்ல. ரஜினிகாந்த் தனது கருத்தை சொல்வதற்கு உரிமை உள்ளது.
மொழி திணிப்பில் பாஜகவுக்கு நம்பிக்கை இல்லை. இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டுமே நாட்டின் ஆட்சி மொழி. இது இரண்டில் எது ஆட்சி மொழி என்று கேட்டால் ஆங்கிலத்தை விட இந்தியை ஆட்சி மொழியாக்குவதுதான் நல்லதாக இருக்கும் என்று நினைக்கிறோம்.
எங்களுடைய தலைவர், உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசிய கருத்தை திரித்து செய்தியாக்கி அதை வைத்துதான் நாடு முழுக்க விவாதம் நடைபெற்று வருகிறது. அமித் ஷா பேசும்போதும் அனைத்து மொழிகளும் முக்கியம் என்றுதான் பேசியிருந்தார்.
நாட்டுக்கு என்று ஒரு பொது மொழி இருந்தால் நல்லது என்றுதான் ரஜினிகாந்தும் தெரிவிக்கிறார். அதை அவர் சொல்வதில் தவறு இல்லை. அமித் ஷாவும் இதே போன்ற கருத்தை தெரிவித்தார். இதை சர்ச்சையாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
முடிவுகள் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலை. ஆனால் ஒருவர் கருத்து சொல்லக்கூடாது என்று சொல்வது பேச்சு உரிமைக்கு எதிரான செயல். இவ்வாறு கே.டி.ராகவன் தெரிவித்தார்.