மேலும், மேலும் வேதனைப் படுத்தாதீர்கள்.. நான் அரசியலுக்கு வரமாட்டேன்.. ரஜினிகாந்த் பரபரப்பு அறிக்கை
சென்னை: என்னதான் ஆர்ப்பாட்டம் நடத்தினாலும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
Recommended Video
ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என்று, டிசம்பர் இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3ம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினி உடல்நிலையை காரணம் காட்டி திடீரென இந்த முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில்தான் வெறுத்துப்போன ரசிகர்கள், நேற்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ரஜினியை அரசியலுக்கு அழைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் ரஜினி நேரடியாக இந்த போராட்டம் பற்றி ரசிகர்களுக்கு எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை. பதிலும் சொல்லவில்லை.
மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள்
ஆனால் இன்று காலை ரஜினி டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கு, நான் அரசியலுக்கு வராதது பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்று சிலர், ரஜினி மக்கள் மன்ற பதவி பொறுப்பிலிருந்தும், மன்றத்திலிருந்தும் நீக்கப்பட்ட பலருடன் சேர்ந்து சென்னையில் ஓர் நிகழ்ச்சியை நடத்தியிருக்கிறார்கள்.
கட்டுப்பாடு
கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும் நடத்தியதற்கு என்னுடைய பாராட்டுகள், இருந்தாலும் தலைமையின் உத்தரவையும் மீறி நடத்தியது வேதனையளிக்கிறது. தலைமையின் வேண்டுகோளை ஏற்று , இங்க நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளாத மக்கள் மன்றத்தினர்க்கு என்னுடைய மனமார்ந்த நன்றி.
வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம்
நான் ஏன் இப்பொழுது அரசியலுக்கு வரமுடியவில்லை என்பதற்கான காரணங்களை ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளேன், நான் என் முடிவை கூறிவிட்டேன். தயவு கூர்ந்து இதற்கு பிறகும் நான் அரசியதுக்கு வர வேண்டுமென்று யாரும் இது போன்ற நிகழ்வுகளை நடத்தி என்னை மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன், வாழ்க தமிழ் மக்கள், வளர்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த். இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினி அரசியல்
போராட்டம் நடத்திய ரசிகர்களை ரஜினி கண்டித்துள்ளதோடு, மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள்தான் போராட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். இதன் மூலம், போராடுபவர்களை தனது ரசிகர்கள் என்று கருத அவர் தயாராக இல்லை என்பதும், அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதும் உறுதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.