விஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல.. மகா நடிகன்... ரஜினிகாந்த் புகழாரம்
சென்னை: பேட்ட படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்த நடிகர் விஜய்சேதுபதி சாதாரண நடிகர் அல்ல, மகா நடிகர் என்று ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சாய்ராம் பொறியியல் கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசினார்.
அவர் பேசுகையில் பேட்ட படத்தில் சிம்ரன் ஹீரோயின் என்று சொன்னதுமே எல்லோருக்கும் ஓகே. பிளாஷ்பேக்கில் ஒரு ஹீரோயின் கேரக்டர். திரிஷா செய்தால் எப்படி இருக்கும் என்று கேட்டாார்கள்.
நிறைய கேரக்டர்கள்
அவருக்கு முக்கியத்துவம் இல்லாதது போல் பிளாஷ்பேக்கில் நடிக்க வைத்தால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைவார்கள் என்றேன். அதற்கு திரிஷாவே நடிக்க ஆசைப்படுவதாக சொன்னார்கள். நிறைய கேரக்டர்கள் படத்தில் இருக்கு.
அருமையான மனிதர்
நான் பார்த்த நல்ல ஆக்டர் விஜய்சேதுபதி. பழகிய பிறகுதான், சாதாரண நடிகர் இல்லை, மகா நடிகன் என்று தெரிய வந்தது. ஒவ்வொரு ஷாட்டுக்கும் என்ன செய்யணும், புதுசா என்ன செய்யணும், செய்தா சரியா வருமா, கேள்வி மேல் கேட்டு புதுசு புதுசா செய்கிறார். அருமையான மனிதர். சைக்யாட்ரிஸ்ட் போல சிந்திக்கிறார். நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல நடிகருடன் நடித்த அனுபவம் விஜய் சேதுபதி மூலம் கிடைத்தது. வித்தியாசமாக சிந்திக்கிறார்.
மீசை முளைத்தால்
பாபி சிம்ஹா நல்ல மனிதர், நிறைய உதவிகள் செய்கிறார். மாலிக் கேரக்டர் வருகிறது படத்தில். இதற்கு யார் போடலாம் என மண்டையை உடைத்துக் கொண்டனர். சசிகுமார் கடைசியில் போட்டார்கள். 2, 3 நல்ல மனிதர், தங்கமான மனிதர் என்று பார்த்தால் சசிக்குமார்தான். குழந்தைக்கு தாடி மீசை முளைத்தால் எப்படி இருக்கமோ அப்படி இருக்கிறார். அவர் நல்லா இருக்கணும், தயாரிப்பதை விட்டுவிட்டு நடித்தால் நல்லாருக்கும்.
ரசித்து நடிப்பு
சிம்ரனுடன் டூயட் பாடும்போது கூச்சமாக இருந்தது. குழந்தை எது செய்தாலும் பிடிக்கும், அதற்கு விதம் விதமாக டிரஸ் போட்டு ஆட விட்டால் பார்த்து ரசிக்கலாம். நான் அந்தக் குழந்தை போல. 90களில் கொண்டு போய் விட்டார்கள் என்னை. ஒவ்வொரு ஷாட்டிலும், ஒரு ரசிகனாக செய்துள்ளனர். அப்ப செய்துள்ளதை இப்போது எப்படி செய்ய முடியும் என்று நானே கேட்டேன். மொத்த யூனிட்டும் எனது ரசிகர்களாக இருந்தனர். அத்தனை ஆர்வமாக ஈடுபாட்டோடு ரசிச்சு செய்தனர்.
நிம்மதி
திரிஷா அப்போது பார்த்தது போல இப்போதும் இருக்கிறார். அவர் யோகா செய்கிறார். மனதையும், உடலையும் அது அழகாக்கி விடும். யோகா செய்பவர்கள் உடம்பு மட்டுமல்ல, மனதும் கூட நிம்மதியாக இருக்கும். பிரஷ்ஷாக இருக்கும். அனிருத், சின்ன வயதில் இத்தனை திறமைகள் இருப்பதை எண்ணி வியந்தேன். எனக்கு ஸ்டன்ட் சொல்லிக் கொடுத்த பீட்டருக்கு நன்றி என்றார் ரஜினி.